
செந்தமிழன் சீமான்
998 subscribers
About செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அலுவல்நிலை புலனத்தடம். #seeman4tn join.naamtamilar.org
Similar Channels
Swipe to see more
Posts

அறிக்கை: *திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளைத் தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை விரைந்து அப்புறப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்குகின்ற கொடுந்துயர நிகழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆடுகள் மற்றும் இளம் மாடு கன்றுகளைத் தாக்கி உயிரிழப்பினை ஏற்படுத்தி, ஏழை எளிய உழவர் பெருமக்களுக்குப் பெருத்த பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள கொங்குப் பகுதி மக்கள் மீள முடியாத பொருளாதார இழப்பிற்கு ஆளாகி, செய்வதறியாது தவித்து வருகின்றனர். காங்கேயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுவெளியில் சுற்றுத்திரியும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகளிடம் வேளாண் மக்கள் பலமுறை புகாரளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. ஆகவே, திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளைத் தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை மாவட்ட நிர்வாகம் விரைந்து அப்புறப்படுத்த வேண்டுமெனவும், வெறிநாய்களால் கால்நடைகளைப் பறிகொடுத்து பெரும் நட்டத்திற்கு ஆளான வேளாண் பெருங்குடி மக்களுக்கு உரிய இழப்பீட்டினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். https://x.com/Seeman4TN/status/1891484616751808586 - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

அறிக்கை: *இராமநாதபுரம் சமூக ஆர்வலர் ஜான் பிரிட்டோ தாயார் மீது கொலைவெறித் தாக்குதல்; சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புத்தம்பி ஜான் பிரிட்டோ மீது நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலில், தடுக்க வந்த அவரது தாய் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் மீது அடுத்தடுத்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைத் தடுக்கத்தவறி வேடிக்கைப் பார்க்கும் திமுக அரசின் செயலற்றத்தன்மை வன்மையான கண்டனத்துக்குரியது. சமூக ஆர்வலர் தம்பி ஜான் பிரிட்டோ தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசு நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் முறைகேடுகளைத் துணிவுடன் வெளிக்கொணர்ந்து வந்த சமூக அக்கறை கொண்ட இளைஞராவார். இளம் வயதிலேயே மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்புகொண்டு, அவர் புரியும் பொதுத்தொண்டு மிகுந்த பாராட்டுக்குரியது. தம்பி ஜான் பிரிட்டோ போன்று மக்கள் நலன் காக்க போராடும் மண்ணுரிமைப் போராளிகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமையும், பொறுப்புமாகும். ஆனால் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்குச் சிறிதும் பாதுகாப்பற்ற கொடுஞ்சூழல் நிலவுவது வெட்கக்கேடானது. கடந்த 2023 ஆம் ஆண்டு மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு – கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அரசு அலுவலகத்திலேயே மணற்கொள்ளையர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டுக் கனிமவளக்கொள்ளைக்கு எதிராகப் போராடிய திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புத்தம்பி பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக் கொள்ளையர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். கடந்த வாரம் மயிலாடுதுறை முட்டம், கிராமத்தில் கள்ளத்தனமாகச் சாராயம் விற்றதைத் தட்டி கேட்ட ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி என்ற இரண்டு இளைஞர்கள் கள்ளச்சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்கள். தற்போது தம்பி ஜான் பிரிட்டோ தான் வசிக்கும் மங்களகுடி ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளிக்கொணர்ந்து மீட்டுக் கொடுத்த காரணத்தினால், நில ஆக்கிரமிப்பாளர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான நிலையில், தடுக்க முயன்ற அவரது தாய் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொடுந்துயரம் அரங்கேறியுள்ளது. இவையெல்லாம் ஊடகங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்த நிகழ்வுகள். ஆனால், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் வெளியே தெரியவராத சமூக ஆர்வலர்கள் மீதானத் தாக்குதல்கள் பல நூற்றுக்கணக்கானவையாகும். கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உட்படப் பல்வேறு இடங்களின் மலைகளை வெட்டிக்கடத்தும் கனிமவளக் கொள்ளையர்களுக்கு எதிராகப் போராடும் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்கிறது திராவிட மாடல் திமுக அரசு. மணற்கொள்ளை, கனிமவளக் கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளென நாளும் நடைபெறும் சமூக அவலங்கள், குற்றங்களுக்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் திமுக ஆட்சியில் சாமானிய மக்களின் நிலை என்ன? மக்களின் நலன் காக்கும் போராளிகளைப் பொய் வழக்குப் புனைந்து கைது செய்வதும், சமூக விரோதிகளால் அவர்கள் கொல்லப்படுவதை வேடிக்கைபார்ப்பதும்தான் திராவிட மாடலா? அரசு அலுவலர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை உண்மையும் நேர்மையுமாக மக்களுக்கும் மண்ணிற்கும் போராடும் போராளிகள் தொடர்ச்சியாகக் கொல்லப்படுவார்கள் என்றால் திமுக ஆட்சி மக்களுக்கானதா? வளக்கொள்ளையர்களுக்கானதா? தம்பி ஜான் பிரிட்டோ போன்று சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்படுவதை திமுக அரசு தடுக்கத்தவறினால் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் இனிவரும் இளந்தலைமுறையினருக்கு எப்படி வரும்? ஆகவே, அரசு நிலம் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் தம்பி ஜான் பிரிட்டோ மற்றும் அவரது தாயார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன். இனியும் இதுபோன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க, சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கான தனிச்சட்டத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். https://x.com/Seeman4TN/status/1892180710565527792 - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

அறிக்கை: *"தமிழ்நாட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய நிதியைத் தராவிட்டால் வரி செலுத்த முடியாது" என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு அரசு புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குத் தரவேண்டிய ரூ.2152 கோடியை விடுவிக்க முடியும் என்று இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ஆணவப்பேச்சு வன்மையான கண்டனத்துக்குரியது. மனுதர்மத்தையும், வர்ணாசிரமத்தையும் இரண்டற கலந்து, இந்தி திணிப்பையும், சமஸ்கிருத ஆதிக்கத்தையும் மேலோங்கச்செய்யும் நவீன குலக்கல்வி திட்டமான புதிய கல்விக்கொள்கையை எப்படி ஏற்க முடியும்? தமிழ்நாட்டின் வரலாற்றை, பண்பாட்டை மூடி மறைத்து, வடவரின் வரலாறே இந்திய வரலாறு என்று கற்பிக்க முயலும் புதிய கல்விக்கொள்கையை எப்படி ஏற்க முடியும்? மொழிவழி தேசிய இனங்களின் இறையாண்மையைச் சிதைத்து, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை அழிக்க வழிகோலும், பாஜக அரசின் ஒரே சட்டம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே கல்விக்கொள்கை, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு என்ற ஒற்றை மையப்படுத்தும் பாசிச கொள்கைகள் நாட்டினை பிளந்து பிரிக்கக்கூடிய பேரழிவு நடவடிக்கைகளாகும். மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் இத்தகைய செயல்பாடுகள் யாவும் இந்திய அரசமைப்பிற்கே எதிரானதாகும். புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் நிதி தர முடியும் என்கிற இந்திய ஒன்றிய அரசு, புதிய கல்விக்கொள்கையை ஏற்காத தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் வேண்டாம் என்று கூறுமா? தமிழ் மக்களின் வரிப்பணம் இனிக்கிறது? அதனைத் திருப்பித்தர கசக்கிறதா? இந்திய ஒன்றிய அரசு தரவேண்டிய 2,152 கோடி ரூபாய் என்பது தமிழ்நாடு மக்கள் செலுத்திய வரிப்பணம்தானே தவிர, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு இடும் பிச்சையல்ல என்பதை மோடி அரசின் அமைச்சர் பெருமக்கள் முதலில் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வாத உணவைத் திணித்தால் எப்படி உடல் ஏற்காது உமிழ்ந்துவிடுமோ, அப்படி ஒவ்வாத இந்தியை வலிந்து திணித்தால் தமிழ் மக்களும் உமிழ்ந்துவிடுவார்கள். இந்தி பேசாத மாநிலங்களில் முதன் முதலில் மும்மொழிக்கொள்கையைத் திணிக்கத் தொடங்கியது காங்கிரசு அரசு. அந்தக் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு கூட்டாட்சி தத்துவம், மாநில தன்னாட்சி குறித்து திமுகப் பேசுவது வேடிக்கையானது. பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையை உண்மையிலேயே திமுக அரசு ஏற்கவில்லை என்றால் அதன் ஒரு கூறான இல்லந்தோறும் கல்வித் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தியது ஏன்? பிஎம் ஸ்ரீ திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாக ஒன்றிய அரசிற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியது ஏன்? புதிய கல்விக்கொள்கையின் நல்ல கூறுகளைச் செயல்படுத்துவோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தது ஏன்? தேசிய கல்விக்கொள்கையை அப்படியே நடைமுறைப்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டி திமுக அரசால் நியமிக்கப்பட்ட மாநில கல்விக்கொள்கை ஒருங்கிணைப்பாளர் ஜவகர் நேசன் பதவி விலகியதற்கு திமுக அரசின் பதிலென்ன? பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையை ஒவ்வொன்றாகச் செயல்படுத்தியதன் விளைவுதான் முழுதாக ஏற்குமாறு கட்டாயப்படுத்தும் துணிவை பாஜக அரசிற்கு அளித்துள்ளது. ஆகவே, தற்போது புதிய கல்விக்கொள்கையைத் திமுக அரசு எதிர்ப்பது போல நடிப்பது மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகமாகும். ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வையே ரத்து செய்வோம் என்று சட்டமன்றத்தேர்தலில் வாக்குறுதி அளித்த திமுக அரசால், நிதியைக்கூடப் பெற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. நாடாளுமன்றத்தில் 40 உறுப்பினர்களுக்கும் மேலாக வைத்துள்ள திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் குறைந்தபட்ச நிதி உரிமையைக்கூடப் பெற முடியாதா? சதுரங்க விளையாட்டிற்கும், கேலோ விளையாட்டிற்கும், சிலை திறக்கவும், நாணயம் வெளியிடவும் பாஜக அரசின் மூத்த அமைச்சர்களோடு நல்லுறவாடும் திமுக அரசு, அதனை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், மண்ணின் உரிமைக்கும் பயன்படுத்தாதது ஏன்? புதிய கல்விக்கொள்கையை வலிந்து திணிக்க முயலும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டு மாணவர்களுக்குச் சேர வேண்டிய நிதியை உடனடியாகத் தராவிட்டால் வரி செலுத்த முடியாது என்பதை வலியுறுத்தியும், புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்பதைத் தெளிவுபடுத்தியும் உடனடியாகச் சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, இந்தியாவின் ஒருமைப்பாட்டைச் சிதைத்து, கூட்டாட்சி தத்துவத்தைக் கேலிக்கூத்தாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை கைவிட்டு தமிழ்நாட்டுப் பள்ளி குழந்தைகளுக்குச் சேர வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். https://x.com/Seeman4TN/status/1891412747038216286 - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி