
அர்ஜூன் சண்முகம் பக்கம்
February 4, 2025 at 04:58 PM
உங்களுக்கு மனித ஊழியம் சுத்தமாகப் பிடிப்பதில்லை என்பது வாஸ்தவம்
_________________________________________
அடிபணியதான் வேண்டுமா
அதற்கு கூட சரி
உங்களுக்குப் பிடித்த மாதிரி அதைச்செய்வதுதான் யாதென அறியேன்
உங்களுக்கு மனித ஊழியம் சுத்தமாகப் பிடிப்பதில்லை என்பது வாஸ்தவம்
உங்களுக்கு இயல்பாகவே ஒட்டகங்களை பிடிப்பதில்லை
பாதி உடல் வணைந்து குழைந்து குந்தினாலும்
மீதி உடலால் திட்டமாக நிற்கும் நாகத்தை
பிடிப்பதில்லை
யாரைப்பற்றியாவது விசாரிக்க அழைக்கும் இன்னொரு யாரோ
ஒரு நரி மாதிரி வருவதாகப் பிடிப்பதில்லை
திடீரென சிங்கம் போல் தங்களை பாவித்துக்கொள்கிறீர்கள்
ஒரு கோப்பை தண்ணீரோடு எதிரே வருபவர் எலியோ வென சற்று அச்சமடைகிறீர்
உங்களுக்கு மனித ஊழியம் சுத்தமாகப் பிடிப்பதில்லை என்பது வாஸ்தவம்
ரோபோட்கள் சந்தையில் இன்னும் மலிவு காணவும்;
அரசே அதை மேற்பதவியருக்கென பிரத்யேகமாக கொள்முதல் செய்யவும்
நெடுங்காலமிருப்பது
தங்களுக்கு வெகுவாக வேதனையளிப்பது புரிகிறது
உங்களுக்கு மனித ஊழியம் சுத்தமாகப் பிடிப்பதில்லை என்பது வாஸ்தவம்
விடுமுறை நாளொன்றில்
நீங்கள் மட்டும் அறையில் இருந்த சமயம்
அருந்த தேநீரை நீங்களே தயாரித்தீர்கள்
உங்கள் நாற்காலியின் எதிர்புறமிருந்து மேசையில் கிடத்தி
உங்கள் நாற்கலிக்கு நீங்களே நகர்த்தித்தந்தீர்கள்
அது மேலும் கொஞ்சம் கைகளுக்கு எட்டும்படி இல்லை என்றதும்
தங்கள் கால்கள் நிலைகொள்ளாமல் பதற்றமானபோது
உங்களுக்கு எல்லாம் அப்போது புரிந்து போயிற்று.