
Infotech Registration
February 16, 2025 at 07:01 AM
ஐபிஎஸ் அதிகாரி ஆவது எப்படி?
அகில இந்திய குடிமை பணிகளுக்குத் (IAS) தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் முதலில் ஏதேனும் ஒரு பாட பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். இதுதான் இதன் சிறப்பம்சம் எனவும் கூறலாம்.
இது உங்கள் அறிவுத்திறனை மட்டும் அல்ல, உங்கள் பொறுமையையும், விடாமுயற்சியையும் சோதிக்கும் தேர்வு எனலாம். ஆதலால் மனத்தைத் தயார்படுத்திக் கொண்டு இந்த பயணத்தைத் தொடங்குங்கள்.
முதலில் UPSC தளத்தில் வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தை நன்றாக வாசியுங்கள். இது 3 நிலைகளைக் கொண்டுள்ளது. ஆரம்ப நிலை, முக்கிய நிலை மற்றும் நேர்முகத் தேர்வு .
ஆரம்ப நிலை:
இதில் சரியான விடையைத் தேர்வு செய்து OMR தாளில் குறித்தால் போதுமானது.
முதல் தாள்
இதில் பொதுப்பாட பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன. இந்திய வரலாறு, கலை, கலாச்சாரம், இந்திய மற்றும் உலகப் புவியியல், பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, பொது அறிவியல், சூழ்நிலையியல், காலநிலை மாற்றங்கள் மற்றும் நடப்பு செய்திகள் போன்றவைகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு தரமான செய்தித்தாளை உங்கள் நண்பராக்கிக் கொள்ளுங்கள்.
இரண்டாம் தாள்:
அடிப்படை எண் கணிதம், தர்க்கரீதியான கேள்விகள், முடிவெடுக்கும் திறமை, ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்தில் பத்தியைக் கொடுத்து அதில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன.
உங்கள் மனோநிலை, முடிவெடுக்கும் திறமை மற்றும் புரிந்து கொள்ளும் தன்மையும் இந்த தேர்வின் மூலம் பரிசோதிக்கப்படுகிறது.
இந்தத் தேர்வு உங்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல மட்டுமே. இதில் நீங்கள் பெரும் மதிப்பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.
முக்கிய நிலை:
இது பல தேர்வுகளைக் கொண்டுள்ளது. இதில் நீங்கள் விரிவாக பதில் எழுத வேண்டும். மொத்தம் 9 தாள்கள் எழுத வேண்டும், பதறி விடாதீர்கள். வாழ்க்கையில் எவ்ளவோ பரீட்சைகளை எழுதியவர்கள் நாம், 9 தாள்கள் தானே!!!
எழுதலாம், ஆனால் மெத்தனம் காட்டி விடாதீர்கள். 9 தாள்களில் 2 தாள்களின் மதிப்பெண்கள்தான் அடுத்த தாள்களை திருத்த வேண்டுமா/வேண்டாமா என்பதை தீர்மானிக்கும்.
இந்த 2 தாள்களின் மதிப்பெண்கள் தகுதிப் பட்டியல் தயார் செய்யும்போது சேர்க்கப்படுவது இல்லை. கேள்விகள் இந்த இரு தாளிலும் சுலபமாகவே கேட்கப்படும். இது உங்களை அடுத்த தாள்களை எழுதுவதற்குரிய மனோநிலையை கொடுப்பதற்கே.
தாள்-அ:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு இந்திய மொழியில் நீங்கள் தேர்வு எழுத வேண்டும். (நிச்சயமாக ஆங்கிலம் வராது) அந்த மொழிகளுக்கான இணைப்பு இதோ Eighth Schedule to the Constitution of India - Wikipedia
தாள் -ஆ: ஆங்கிலம்
அடுத்துதான் நீங்கள் பட்டையைக் கிளப்ப வேண்டும். ஏனெனில் அடுத்து நீங்கள் எழுதும் தாள்கள் தான் உங்களை தகுதிப் பட்டியலில் இடம் பெற வைக்கும்.
தாள் 1: கட்டுரை
அடுத்த தாள்கள் பொதுப் பாடப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
தாள் 2:
பொதுப் பாடப்பிரிவு 1: இந்தியக் கலை, கலாச்சாரம், நமது சமுதாயம் மற்றும் உலக வரலாறு மற்றும் புவியியல்.
தாள் 3:
பொதுப் பாடப்பிரிவு 2:ஆட்சி அமைப்பு, அரசியல் அமைப்புச் சட்டம், சமூகநீதி மற்றும் சர்வதேச தொடர்புகள்.
தாள் 4:
பொதுப் பாடப்பிரிவு 3: தொழில்நுட்பம், பொருளாதார மேம்பாடு, பல்லுயிர் தன்மை, சூழ்நிலையியல், பாதுகாப்பு மற்றும் பேரழிவு மேலாண்மை.
தாள் 5:
பொதுப் பாடப்பிரிவு 4: நெறிமுறைகள், நேர்மை மற்றும் சூட்சும புத்தி.
அடுத்த தாள் 6 வது மற்றும் தாள் 7 தாள்களை எழுதுவதற்கு நீங்கள், யூபிஎஸ்சி கொடுத்துள்ளப் பட்டியலில் , உங்களுக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு பாடப் பிரிவை எடுத்து கொள்ளுங்கள். அதை நன்றாக படித்து எழுதுங்கள். அந்தப் பாடப் பிரிவுகளுக்கான இணைப்பு Civil Services Examination (India) - Wikipedia
நேர்முக தேர்வு:
இதில் உங்கள் ஆளுமை திறன் பரிசோதிக்கப்படுகிறது. இந்த பத்தியை விளக்கும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை. ஏனெனில் நான் குடிமை பணியாளருக்கான நேர்முக தேர்வை சந்தித்தது இல்லை. ஆனால் நான் இதைப் பற்றி நிறைய படித்து இருக்கிறேன். மேலும் யூடியூபில் பலரின் அனுபவத்தை கேட்டு அறிந்து இருக்கிறேன். அதை வைத்து இந்த பத்தியை எழுதுகிறேன்.
1. இந்த நேர்முக தேர்வில் உங்களிடம் கேள்வி கேட்பதற்கு 5 பேர் இருப்பார்கள். கல்லூரி வாழ்க்கையில் வாய் மொழி தேர்வில், நாம் அலேக்காக அல்வா கொடுத்திருப்போம். இங்கு அந்த எதிர்பார்ப்புடன் யாரும் செல்ல வேண்டாம். உங்களிடம் கேள்வி கேட்க உங்கள் முன்பு அமர்ந்திருப்பவர்கள், அவரவர்கள் துறையில் கற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் உளவியலாளர்கள். நிச்சயமாக 60 வயது நிரம்பியவர்களாக இருப்பார்கள். ஆக 300 (5*60=300) வருட அனுபவம் கொண்ட அந்த மக்கள், 30 வயதுக்குள் (தகுதிப்படி உங்கள் வயது) இருக்கும் உங்களை அரை மணி நேரத்திற்குள் புடம் போட்டுப் பார்த்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்வார்கள்.
2. நம்மவர்கள் மற்றவர்களைப் பற்றிக் கேட்டால் நன்றாக கூறுவார்கள். நம்மை பற்றி கேள்விகள் கேட்கும்போதுதான் தடுமாற்றம் நிகழும். உங்களைப் பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்.
3. நேர்மையாக பதில் அளியுங்கள்.
4. அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் எல்லாருக்கும் தெரிவதில்லை. தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஒரு வேளை பதில் தெரியவில்லை என்றால், பதட்டப்படாமல் பொறுமையாகத் தெரியாது என்று கூறுங்கள்.
5. குறிப்பாக நல்ல உடை உடுத்தி கொள்ளுங்கள்.
6. உள்ளே நுழைந்தவுடன் அவர்களை வாழ்த்திவிட்டு, அவர்களுடன் கை குலுக்குங்கள். அந்த கைகுலுக்கலில் இருந்தே நீங்கள் எவ்வளவு நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள ஒரு வழியை ஏற்படுத்துங்கள்.
அப்புறம் உங்கள் மதிப்பெண்களை வைத்து உங்களுக்கு IAS/IPS/IRS என வழங்கப்படும்.
மதிப்பெண் பட்டியல் :-
=======================
ஆரம்ப நிலை :-
தாள் 1–200 மதிப்பெண்கள் (2 மணி நேரங்கள் )
தாள் 2–200 மதிப்பெண்கள் (2 மணி நேரங்கள் )
முக்கிய நிலை :-
தாள்-அ -300 மதிப்பெண்கள் (3 மணி நேரங்கள் )
தாள் -ஆ-300 மதிப்பெண்கள் (3 மணி நேரங்கள் )
தாள் 1 –250 மதிப்பெண்கள் (3 மணி நேரங்கள் )
தாள் 2 –250 மதிப்பெண்கள் (3 மணி நேரங்கள் )
தாள் 3 –250 மதிப்பெண்கள் (3 மணி நேரங்கள் )
தாள் 4 –250 மதிப்பெண்கள் (3 மணி நேரங்கள் )
தாள் 5 –250 மதிப்பெண்கள் (3 மணி நேரங்கள் )
தாள் 6 –250 மதிப்பெண்கள் (3 மணி நேரங்கள் )
தாள் 7 –250 மதிப்பெண்கள் (3 மணி நேரங்கள் )
நேர்முக தேர்வு :-
நேர்முக தேர்வு -275 மதிப்பெண்கள்
மொத்தம் -2025 மதிப்பெண்கள்.
அப்புறம் பல நாள் முயற்சிக்குப் பிறகு உங்களது பெயர் தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுவிட்டால் உங்களுக்கு LBSNAA-வில் பயிற்சி வழங்கப்படும்.
முதல் இரண்டு வாரங்கள் மட்டும் அனைவரும் LBSNAA-வில் இருப்பார்கள். அப்புறம் IAS மட்டும் இங்கு இருப்பார்கள். மற்றவர் அவரவர்களுக்கான பயிற்சி பெரும் இடங்களுக்கு நகர்வர்.
பயிற்சி முடிந்தவுடன், ஒரு நாள் நீங்கள் இந்தியாவின் ஏதோ ஒரு மாவட்டத்தின் முதல் குடிமகனாக /குடிமகளாக இருப்பீர்கள்.
இது LBSNAA-வின் காணொளி. இது உத்தரகாண்டில் உள்ள முஸோரியில் அமைந்துள்ளது. ( https://en.m.wikipedia.org/wiki/Lal_Bahadur_Shastri_National_Academy_of_Administration )
குறிப்பு:
* இந்த பயணம் வித்தியாசமானது. நம்பிக்கை என்னும் ஊன்றுகோல் மிக முக்கியமான ஒன்று. இந்த பயணத்தை நீங்கள் மேற்கொள்ளும்போது தீடீரென்று உங்கள் ஊன்றுகோல் கையில் இருந்து நழுவும். தட்டுத் தடுமாறி அதை எடுத்து, மீண்டும் ஊன்றி, தைரியமாக வீறு நடை போடுபவர்களே இதை வெற்றி கொள்கிறார்கள்.
* அப்படி வெற்றி கொண்ட ஒருவரின் பதிவு இதோ Ram Prakash's answer to Can you narrate your UPSC journey? ( https://www.quora.com/Can-you-narrate-your-UPSC-journey-1/answer/Ram-Prakash-566?ch=10&share=345ee6b9&srid=7WRtB )
* நான் பெரிய அறிவாளி இல்லையே என்று கவலை கொள்ளாதீர்கள்.
கடின உழைப்பு மற்றும் முயற்சியைக் கைவிடாதீர்கள்.
* இந்தப் பயணத்தை நீங்கள் மேற்கொள்ளும் போது சுற்றி இருக்கும் பல தீய சக்திகள் ,அவர்கள் வாய் சொற்களால் உங்களை தடம் புரள வைக்க எண்ணுவார்கள். அந்த வார்த்தைகளுக்கெல்லாம், எதிர்ப்புசக்தி கொண்டவர்களாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
* உங்கள் வெற்றியை நீங்கள் தூரத்தில் இருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருப்பீர்கள். அந்த நாள் என்று என் கையில் சேரும் என்று உங்கள் மனது ஏங்கும். உங்களுக்குள் இருக்கும் தீயை அணைத்து விடாதீர்கள்.
* அஜித் ஏதோ ஒரு படத்தில் கூறுவது போல உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் நீங்கள் செதுக்குங்கள்.
* உங்களுக்கான படிக்கும் திட்டத்தை நீங்கள் வகுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுடையதை அப்படியே நகல் எடுக்காதீர்கள்.
* ஒரு முறை வாசித்து விட்டு அப்படியே விட்டு விடாதீர்கள் . ஒரு முறை வாசித்தல் என்பது ஒரு எலும்பு கூட்டை உருவாக்குவதற்கு சமம்.அதில் சதையை திணிக்க வேண்டுமெனில் திரும்ப, திரும்ப படியுங்கள்.
* எழுத்துப் பயிற்சி மிக முக்கியமான ஒன்று.
* சமூக வலைத்தளங்களில் இருந்து விடுபடுங்கள்.
இந்தியக் குடிமை பணியாளராக மாற வேண்டும் என்ற எண்ணத்துடன் படிக்கும் அனைத்து வீர உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .
வெல்லுங்கள் !!!
வீறு நடை போடுங்கள் !!!
முக்கியமாகக் குடிமை பணியாளர் ஆனவுடன், தாம் ஒரு பொதுப் பணியாளரே,எஜமானர் அல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள் !!!
நன்றி !!!