
BABASAHEB
February 13, 2025 at 09:09 AM
Follow the BABASAHEB channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va5SfZsL7UVZfGON0F1n
*இந்தியாவில் முதன் முதலில் தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு சொத்துரிமை உறுதிப்படுத்தப்பட்டதா?*
*பல நேரங்களில் பல மேடைகளில் பல பேச்சாளர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முதன்முதலாக பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது என பேசுவதை காண்கின்றோம்.*
*பாலின சமத்துவம் குறித்த பேச்சுக்களும் பெண்கள் உரிமைகள் குறித்த பேச்சுக்களும் பரவலாக தமிழ்நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. சுதந்திரத்திற்கு முன்பும் சுதந்திரத்திற்கு பின்பும் அதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன என்பதில் ஐயமில்லை.*
*இந்தியாவில் பெண்களின் உரிமைகளை சட்டப்பூர்வமாக வடிவமைப்பதில் மிக முக்கியமான பங்காற்றியவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். பெண்களின் உரிமைகளுக்காக வாதிட்டது மட்டுமின்றி குறிப்பாக பெண்களுக்கு சொத்து உரிமையை உறுதிப்படுத்தியதில் டாக்டர் அம்பேத்கரின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.*
*இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தலைமையேற்று வரைந்தளித்ததினால் உலகத்தினரால் பெரிதும் கொண்டாடப்படும் பாபாசாகேப் அம்பேத்கர், பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் சொத்துரிமை உட்பட பெண் உரிமைகளை மேம்படுத்துவதில் மகத்தான பணியாற்றியுள்ளார் என்பதையும் நாம் ஊன்றி கவனிக்கவேண்டும்*.
*இந்திய சட்ட அமைச்சராக இருந்த காலத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களால் 1951-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்து சட்ட மசோதா பழமைவாதிகளால் மூர்க்கத்தனமாக எதிர்க்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படமுடியவில்லை.*
*டாக்டர் அம்பேத்கரின் இந்து சட்ட மசோதாவில் இருந்த பெண்களின் சொத்து உரிமைகள் அடங்கிய அம்சங்கள் இந்து தனிநபர் சட்டங்கள் தொடர்பான சட்டங்களை சீர்திருத்துவதற்கான ஒரு முக்கிய முயற்சியாகும். வாரிசுரிமை மற்றும் சொத்து விஷயங்களில் பெண்களுக்கு அதிக உரிமைகளை வழங்கும் விதிகளை அவர் வலியுறுத்தினார். பாரம்பரிய ஆணாதிக்கக் கட்டமைப்பிற்கு சவால் விடும் வகையில், ஆண்களுக்குச் சமமாக மூதாதையர் சொத்தைப் பெறுவதற்கான உரிமையை பெண்களுக்கும் வழங்குவது அவரது இந்து சட்ட மசோதாவின் அடிப்படை நோக்கமாகும்.*
*டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள், தீண்டாமையை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் சமூகநீதியை நிலைநாட்டுவதிலும் அதிக கவனம் செலுத்தினாலும், இந்தியாவில் பாலின சமத்துவத்துவம் மற்றும் சொத்துரிமை உட்பட பெண்களின் உரிமைகளுக்கான சட்ட அடித்தளத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. அவரது பங்களிப்புகள் இந்திய சட்டத்தில் பாலினம் மற்றும் சமூக சமத்துவம் பற்றிய சிந்தனைகளையும் விவாதங்களையும் தொடர்ந்து முன்னெடுத்து, பெண்கள் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.*
*இந்திய நாடாளுமன்றம் 1956 இல் இந்து வாரிசுச் சட்டத்தை (Hindu Succession Act, 1956) நிறைவேற்றியது. இது சொத்தின் வாரிசுரிமைக்கான தேசியச்சட்டமாகும். மாநிலங்கள் இயற்றும் சட்டங்களுக்கும் இது தான் அடிப்படை. இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர் இந்தியாவில் சொத்துரிமை என்பது பாரம்பரியமாக பரம்பரை பரம்பரையாக ஆண்களால் நிர்வகிக்கப்படும் முறையாக இருந்தது. அத்தகைய எண்ணற்ற விதிமுறைகள் மற்றும் மரபுகளை இச்சட்டம் எளிமைப்படுத்த முயன்றது. ஆண்களுக்கு நிகரான சொத்துரிமையில் பெண்களுக்கு முழு உரிமையை வழங்கியது. இந்து வாரிசுரிமை சட்டம் 2005-இல் மீண்டும் திருத்தப்பட்டது.*
*1956-ல் கொண்டு வரப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் அடிப்படையிலேயே கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களால் பெண்கள் சொத்துரிமை குறித்த சட்டங்கள் இயற்றப்பட்டன.*
1. *கூட்டு இந்து குடும்ப அமைப்பு (ஒழிப்பு) சட்டம், 1975, கேரளா (The Joint Hindu Family System (Abolition) Act, 1975, Kerala.*
2. *இந்து வாரிசுரிமை (ஆந்திரப் பிரதேசத் திருத்தம்) சட்டம், 1986 (The Hindu Succession (Andhra Pradesh Amendment) Act, 1986)*.
3. *இந்து வாரிசுரிமை (தமிழ்நாடு திருத்தம்) சட்டம், 1989 (The Hindu Succession (Tamil Nadu Amendment) Act, 1989).*
4. *இந்து வாரிசுரிமை (கர்நாடகா திருத்தம்) சட்டம், 1994 (The Hindu Succession (Karnataka Amendment) Act, 1994).*
5. *இந்து வாரிசுரிமை (மகாராஷ்டிரா திருத்தம்) சட்டம், 1994 (The Hindu Succession (Maharashtra Amendment) Act, 1994.*)
*மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள் சில மாநில அரசுகளால் நிறைவேற்றப்பட்டவை. கேரள மாநிலம் 1975 - ம் ஆண்டும், ஆந்திரப் பிரதேசம் 1986-ம் ஆண்டும், தமிழ்நாடு 1989-ம் ஆண்டும் சொத்துரிமை சட்டங்களை கொண்டு வந்துள்ளன. இவை அனைத்திற்கும் அடிப்படை 1956-ம் ஆண்டு இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம்; அதற்கு அடிப்படையாக இருந்தது 1951-ம் ஆண்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களால் தயாரிக்கப்பட்ட இந்து சட்ட மசோதாவும் 1950 ஜனவரி -26 அன்று முதல் அமலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டமும் ஆகும்.*
*உண்மைகள் இப்படி இருக்கையில், பெண்கள் உரிமைகளுக்காக நாங்கள் தான் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் சட்டம் கொண்டு வந்தோம். இதற்கெல்லாம் அவர் தான் காரணம், இவர் தான் காரணம்; நாங்கள் தான் கவிதை பாடினோம்; கட்டுரை வரைந்தோம்; கதை எழுதினோம்; என்றெல்லாம் பேசுவதை கேட்கிறோம். கதை கட்டுரை கவிதை இவற்றைக் கொண்டு பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முடிந்ததா? கதை கட்டுரை கவிதை எழுதியவர்கள் பெண்கள் உரிமைகள் குறித்து ஆங்கில ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை பேசினார்கள். எத்தனை மனுக்களை அளித்துள்ளனர். எத்தனை போராட்டங்கள் நடத்தினர்? எத்தனை மாநாடுகள் நடத்தியுள்ளனர்? எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்? அரசியல் அமைப்பு வடிவம் குறித்த விவாதங்களில் அல்லது அன்றைய மாகாண சபைகளில் எத்தகைய விவாதங்களை இவர்கள் முன்னெடுத்தனர்? அரசியல் நிர்ணய சபையில் பெண்கள் உரிமைகள் குறித்து எத்தகைய விவாதங்களை இவர்கள் முன்வைத்தனர்?; எத்தகைய சட்டப்பூர்வ ஆலோசனைகளை இவர்கள் அதிகாரப்பூர்வமாக அளித்தனர்? இவற்றுக்கெல்லாம் இவர்களிடத்தில் பதில் இல்லை; போகிற போக்கில் எல்லாவற்றையும் நாங்கள் தான் செய்தோம்; இந்தியாவிற்கே நாங்கள் தான் வழிகாட்டி என்பது போல் பேசுகின்றனர்...*
*டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களால் பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்திட இந்திய பாராளுமன்றத்தில் கொண்டு வந்த இந்து சட்ட மசோதாவை எத்தனை கட்சிகள் ஆதரித்தன? பழமைவாதிகள் பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் இந்து சட்ட மசோதாவை நிறைவேற்றவிடாமல் அமளியில் ஈடுபட்டபோது யார் யார் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர்? பெண்கள் வாழ்வில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வருவதற்கான முக்கிய செயல்திட்டங்களையும் அம்சங்களையும் கொண்டிருந்த அந்த இந்து சட்ட மசோதா தாக்கல் செய்ய முடியாததால் தம் மத்திய கேபினட் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பெரும் தியாகம் செய்தவரல்லவா டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்! அவருடைய சிந்தனைகள் தானே இன்றைய பெண்கள் உரிமைகளை நிலைநாட்டும் சட்டங்களாக வடிவம் பெற்றுள்ளன!*
பெண்கள் இன்றைக்கு பெற்று இருக்கின்ற உரிமைகளுக்கும் குறிப்பாக சொத்துரிமைக்கும், அவர்களின் உயர்வுக்கும் சமூக-பொருளாதார பாதுகாப்பிற்கும் காரணமாக இருந்தது டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் தான் என்பதை இன்றைய தலைமுறை உணர வேண்டும்.
ஜெய் பீம்!
--ஆ.கா.தனகுமார்
டாக்டர் அம்பேத்கர் இண்டல்லக்சுவல் சொசைட்டி
சென்னை
Follow the BABASAHEB channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va5SfZsL7UVZfGON0F1n
👍
🙏
6