Aran Mahendra Podcast
Aran Mahendra Podcast
May 13, 2025 at 01:42 PM
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் புகார் தந்தும் 10 நாட்களுக்கு மேலாக எஃப்.ஐ.ஆர் போடாமல் இழுத்தடித்தது அன்றைய காவல்துறை. மக்களிடையே ஏற்பட்ட கடும் அதிருப்திக்கு பிறகே 2019 பிப்ரவரி 12 ஆம் தேதி புகாரை ஏற்று ஆரம்பக்கட்ட விசாரணையை பொள்ளாச்சி காவலர்கள் தொடங்கினர். 2019 பிப்ரவரி 24 FIR பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது CBCIDஇன் விசாரணையில் நம்பிக்கை இழந்த மக்கள் இயக்கங்கள், மகளிர் அமைப்புகள் இதற்கு எதிராக பெரியவர் கோவை ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையிலான கோவை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டியக்கம் என்ற அமைப்பை உருவாக்கி போராட்டத்தில் இறங்கினர். இதில் திருநாவுக்கரசு உள்ளிட்ட பாலியல் குற்றவாளிகள் பெண்களை அடித்து துன்புறுத்தும் ஆடியோ வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையே உறைய வைத்தது. இதைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. காவல்துறை பொள்ளாச்சிக்குள் நடத்திய அராஜகம் கொஞ்சம் நஞ்சமல்ல... தொடர் அழுத்தம், ஆர்ப்பாட்டம், போராட்டத்திற்குப் பின் அவ்வழக்கு விசாரணையை ஜூன் மாதத்தில் அதிமுக அரசு CBI வசம் ஒப்படைத்தது. அதன் பிறகுதான் ஒரே நாளில் 100க்கும் அதிகமான பெண்கள் புகார் அளித்தனர். வழக்கு விசாரணை வேகமெடுத்தது. இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 48 பேர் மட்டுமே, CBI அதிகாரிகளால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக கைதான சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக 2019 மே 24 அன்று முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. CBI வசம் வழக்கு வந்தபின்பு, இந்த வழக்கில் அருளானந்தம், ஹெரன்பால் மற்றும் பாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 3 குற்றவாளிகள் மீதும் 2021 பிப்ரவரி 22 அன்று இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிக்கை, கோவை மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது நபராக அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குற்றப்பத்திரிக்கை, 2021 ஆகஸ்ட் 16 அன்று, கூடுதல் குற்றப்பத்திரிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. முதல் குற்றப்பத்திரிகை துவங்கி இறுதிவரை மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிக்கையை CBI தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் எலக்ட்ரானிக் பொருட்களே முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. ஐஃபோனில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து குற்றம் நடந்த தேதி, நேரம் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிக்கைகளில் இவர்கள் மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 12 ஆவணங்கள் குறித்துத் தரப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து நீதிமன்றம் தானாக 11 ஆவணங்களை எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு விசாரைணயில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கியமான 30 பொருட்கள் ஆதார ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை. CBI தரப்பில் இருந்து எல்லா விதமான ஆதாரங்களை கொடுத்து இருக்கிறார்கள். CBI கொடுத்த ஆதாரங்களை நீதிமன்றம் முழுமையாக விசாரித்து ஏற்றுக்கொண்டது. 2019 - 2025 வரை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சி. பணம், அரசியல் அதிகாரம்,ஜாதி மேட்டிமையின் கொடூர முகங்களான இந்த குற்றவாளிகளின் வசதி படைத்த உற்றார் உறவினர்கள் மேல்முறையீடு, உச்சநீதிமன்றம் என்று வருங்காலத்தில் நகர்வுகளை உறுதியாய் முன்னெடுப்பர். அதையெல்லாம் மக்கள் இயக்கங்கள் சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும். பொள்ளாச்சி பாலியல் வன்கொடூர குற்றங்கள் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நடந்ததால் இப்போது திமுக ஆதரவாளர்கள், முன்களப்பணியாளர்கள் கோபம் கொந்தளிக்க நீதி வென்றது என்கிறார்கள். அவர்களில் பலர் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு விவகாரத்தில் மௌனித்தே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சி கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கினை CBCID வசமிருந்து CBIயிடம் EPS ஒப்படைத்தது போல அண்ணா பல்கலைகழக வழக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் CBI-க்கு மாற்றலாமே? பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை வழக்கிலும் உரியமுறையில் விசாரணை நடைபெற வேண்டுமானால், அவ்வழக்கையும் CBIயிடம் ஒப்படையுங்கள். குறிப்பு: அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க , மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய அரசு எந்த அரசு?
Image from Aran Mahendra Podcast: பொள்ளாச்சி பாலியல் வழக்கில்  பாதிக்கப்பட்ட பெண் புகார் தந்தும் 10 நாட்...
👍 ❤️ 😢 🙏 👌 🥲 13

Comments