
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
June 12, 2025 at 01:49 AM
இலட்சியமில்லா சமூகத்தில்
இரசிகச் சீரழிவுகள் கொடிநாட்டும்!
(பகுதி - 1)
============================
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
============================
கர்நாடக மாநிலத்திற்கான மட்டைப்பந்து அணியினர் அண்மையில் (3.6.2025) ஆமதாபாத்தில் நடந்த இந்திய முதன்மை கூட்டிணைவு - இ.மு.கூ. - Indian Premier League (IPL) போட்டிகளில் வென்று 4.6.2025 அன்று பெங்களூர் திரும்பியபோது அவர்களை நேரில் பார்த்து பாராட்ட இலட்சக் கணக்கான இரசிகர்கள் கூடினார்கள். முப்பத்தைந்தாயிரம் பேரை மட்டுமே கொள்ளக் கூடிய சின்னச்சாமி விளையாட்டு வளாகத்திற்குள் நுழைய மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்டோர் முட்டிமோதி போட்டிபோட்டனர்.
பக்கத்தில் உள்ளவர்களைத் தள்ளி வீழ்த்தியும், கீழே கிடந்து துடிக்கின்ற மனிதர்களை மிதித்து ஏறியும் வளாகத்திற்குள் நுழைய முன்னேறினர். முரட்டு இரசிகர்களின் மோதலால் முடியாத இரசிகர்கள் 11 பேர் அங்கேயே பிணமாகக் கிடந்தார்கள். ஐம்பது பேர் காயம்பட்டு வீழ்ந்தனர். அடுத்து முன்னேறியவர்கள் அவர்களை மிதித்துச் சென்றனர்!
உயிரிழந்த அத்தனை பேர்க்கும் உண்மையான துயரத்துடன், வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுபோன்ற மிகை இரசிகக் களியாட்டங்கள் இலட்சிய அரசியல் வளராமல் சிதைக்கின்றன. இந்த மிகை இரசிகத் தன்மை இளைஞர்களைக் கவ்வி பொறுப்பான இலட்சியத் தேடலுக்குப் போகாமல் சிதைக்கின்றன; சீரழிக்கின்றன.
கர்நாடகத்தில் மட்டுமே இது நடந்தது என்று கடந்து போக முடியாது. நாளை தமிழ்நாட்டிலும் இப்படி நடக்கலாம்!
பார்த்து இரசிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் மனிதமனம், பங்கேற்றுச் செயல்படுவதில் தயக்கம் காட்டும்! எது ஒன்று மக்கள் ஆதரவைப் பெற்று செல்வாக்கு அடைகிறதோ, அதனுடன் தன்னையும் இணைத்துக் கொண்டு அந்தப் பெருமையில் தனக்கும் பங்கு கோரும் அந்த மனம்!
சமகாலத்தில் சமூகத்திற்குத் தேவையான உயர்ந்த இலட்சியங்களை, சான்றோர்களும், கட்சித்தலைவர்களும், சிந்தனையாளர்களும் மக்கள் சமுதாயத்தின் முன் வைக்க வேண்டும். அந்த இலட்சியப் பாதையில் மக்களை அணிவகுக்கச் செய்ய வேண்டும். இலட்சியப் பயணத்தில் மக்கள் களிப்படைய வேண்டும். அப்போது அவர்களிடம் அறம், வீரம் கண்ணியம் இருக்கும். அவ்வாறில்லாத சமூகங்கள், கண்டகண்ட இடங்களுக்குச் சென்று களிப்படையும். அங்கங்கே தன் தனிமனித அடையாளங்களைப் பதிக்க ஆசைப்படும். இவ்வாறான தனிமனித முனைப்பாளர்களுக்கு, பொதுவான தனி மனிதர் ஒருவரோ அல்லது சிலரோ அரசியல் தலைவராக - திரைப்படக் கதாநாயகராக - விளையாட்டு வீரராக அமைவார்கள்.
உண்மையான சமூக இலட்சியம் இல்லாத அரசியல் தலைவர்கள், தங்களின் அரசியல் இரசிகர்களைக் கவர பலவகை சித்துகளைச் செய்வார்கள்! மக்களின் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவர்கள், தங்களுக்குள் எதிர் - எதிரானவர்களோடு செயற்கையான பகை வளர்த்து, அவரவர் இரசிக முகாம்களை விறுவிறுப்பாக வைத்துக் கொள்வார்கள். நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள முயல்வார்கள். திரைப்படக் கதாநாயகர்கள், தங்களின் இரசிகர்களைத் தக்க வைத்துக் கொள்ள - வளர்த்துக்கொள்ள - ஒவ்வொருவரும் நடிப்பிலும், படங்களிலும் தனித்துவம் காட்டுவார்கள்! விளையாட்டு வீரர்களும் அப்படியே!
கர்நாடக மட்டைப்பந்து அணி வெற்றிபெற்றுத் திரும்பும்போது, அவர்களை வரவேற்க, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரும் அதிகாரிகள் பட்டாளமும் பெங்களூர் வானூர்தி நிலையம் சென்றது.
டி.கே. சிவகுமார் அவ்வீரர்களை வானூர்தி நிலையத்திலிருந்து நேரே கர்நாடக சட்டமன்ற தலைமைச் செயலக வளாகத்திற்கு அழைத்து வருகிறார். அங்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவும் மற்ற அமைச்சர்களும் காத்திருந்து வரவேற்கிறார்கள்.
கர்நாடகக் காங்கிரசு அமைச்சரவை மட்டைப்பந்து வீரர்களுக்கு இவ்வளவு மிகை முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? அந்த மட்டைப் பந்து வீரர்களுக்குக் கர்நாடகத்தில் இலட்சோபலட்சம் இரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவையும் வாக்குகளையும் வரவு வைப்பதற்காகவே இவ்வளவு பெரிய வரவேற்பு!
மேலும் ஐ.பி.எல். வெற்றியில் கன்னட இனவாதம் ஏற்கெனவே கலந்து மக்களிடம் வெளியிடப்பட்டுள்ளது. பஞ்சாப் அணியைக் கன்னட அணி வீழ்த்தியது என்ற இனப் பெருமை இதில் மிதமிஞ்சி வெளிப்பட்டது.
ஆனால் வெற்றி பெற்ற கர்நாடக மட்டைப்பந்து அணியில் கன்னடர் ஒருவர் மட்டுமே உள்ளார். மற்றவர்கள் எல்லாம் வெளிமாநிலத்தவர்கள்!
மேற்படி கர்நாடக அணியின் தலைவர் (கேப்டன்) ரஜத் பட்டிதார், மத்தியப்பிரதேசம் -இந்தூர்! இவ்வணியில் உள்ள நாடறிந்த வீரர் விராட்கோலி - டெல்லி; யாஷ் தயாள்,- அலகாபாத்; பிரயாக் ராஜ் - உ.பி.; ஜித்தேஷ் சர்மா - அமராவதி, மகாராட்டிரா; மேலும் குரசாத், ஜம்மு-காஷ்மீர், கேரளா என்று பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கர்நாடக அணியினர்.
இவர்களில் மனோஜ் பாண்டகே என்ற ஒருவர் மட்டுமே கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்று குறிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் வெளி மாநிலத்தவர். இந்த வெளி மாநில வீரர்களின் வெற்றியைக் கன்னட வெற்றியாகக் கற்பித்துக் கொண்டு களியாட்டம் போட்ட போதுதான் இவ்வாறான பேரிழப்பு - மனித உயிரிழப்பு ஏற்பட்டது!
சென்னை மட்டைப்பந்து ஐ.பி.எல். அணியிலும் வெளிமாநில வீர்களே அதிகம் என்கிறார்கள்!
மட்டைப்பந்து ஒரு விளையாட்டு என்ற வரையறையைக் கடந்து - கார்ப்பரேட் கொள்ளையர்களின் வசூல்வேட்டை வடிவமாகிப் பல ஆண்டுகள் ஓடிவிட்டன! இந்த விளையாட்டுக் கார்ப்பரேட்டுகளுடன் அரசியல் கார்ப்பரேட்டுகளும் இணைந்துள்ளன! காரணம் ஏராளமாகக் குவியும் இரசிகர்கள்! அவ்விளையாட்டில் பல வடிவங்களில் வரும் பணவரவுகள்.
மேலைநாட்டுச் சமூகச் சிந்தனையாளர்கள் சொன்னார்கள், “உயர்ந்த இலட்சியம் ஒன்றை மக்கள் முன்வைத்து அதை நோக்கி ஓடும்படி மக்களை விரட்ட வேண்டும்! அவ்வாறு பயணம் செய்ய இலட்சிய இலக்கில்லாத சமூகம் பல கூறுகளாகப் பிரிந்து கண்டகண்ட பக்கங்களில் சிதறிச் சென்று சீரழியும்” என்றார்கள்!
அந்தச் சீரழிவுதான் இப்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டுள்ளது. கர்நாடகத்தில் அரசியல் சீரழிவுகள் உண்டு! ஆனால் தமிழ்நாடுபோல் மிகைச் சீரழிவு இல்லை. அம்மாநில மக்களிடம் கன்னட இனப்பற்றை - காங்கிரசு - பாசக உட்பட எல்லாக் கட்சிகளும் வளர்த்துள்ளன. ஆனால், அந்த கன்னட இனப்பற்று, கன்னட இன வெறியாக மாறி – நிரந்தரமான தமிழர் எதிர்ப்பகையாக வளர்க்கப்பட்டிருப்பதைத்தான் நாம் கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்!
தமிழ்நாட்டில் “தமிழ் இனம்” என்று சொல்வதையே பல ஆண்டுகளாக ஈ.வெ.ரா. வாதிகளும், திராவிடக் கட்சிகளும் மடைமாற்றி – திராவிட இனம் என்ற ஆரியக் கற்பனையை பட்டணத்திலிருந்து பட்டி-தொட்டிவரை விதைத்து வளர்த்துவிட்டன!
“திராவிடன் என்ற சமூகப் பிரிவு நால்வருணத்தில் சீரழிந்த கீழ்ப்பிரிவு என்கிறது மனுதர்மம் (மனுதர்ம சாஸ்திரம் என்கிற மனுநீதி)”
– அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மாள், அத்தியாயம் 10; பக்.596 சூத்திரம் 33.
காங்கிரசு – பா.ச.க. கட்சிகள் இந்தியன் – பாரத்தீயன் என்ற ஆரியத்துவா இனப் பெயர்களைத் தமிழர்கள் மீது திணித்துப் பரப்பி வருகின்றன. பாரத்தீயன் – இந்தியன் என்பது மேல் - கீழான வருணப்பிரிவுகள் கொண்ட இனம் என்ற பொருள் கொண்டது. இயற்கையான தமிழ் இனத்தைச் மறைத்து, மறுத்து, திராவிடன் – இந்தியன் என்ற இரண்டு ஆரிய – வர்ணாசிரம இனங்களைத் நம் மீது திணித்துள்ளன.
( பகுதி - 2 - நாளை வெளிவரும்)
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================