Haranprasanna WhatsApp Channel

Haranprasanna

454 subscribers

About Haranprasanna

Writings of Haranprasanna, Tamil, India. தமிழ், இந்தியா, ஹரன் பிரசன்னா

Similar Channels

Swipe to see more

Posts

Haranprasanna
Haranprasanna
6/1/2025, 2:05:23 PM

ஔசப்பின்டெ ஒசியத்து (M) - நல்ல திரைப்படம். அசல் மலையாளத் திரைப்படம். மெல்ல நகரும் திரைப்படம் என்றாலும் முழுக்கப் பரபரப்பைத் தனக்குள்ளே தக்க வைத்திருக்கிறது. போலீசின் தேடுதல் காட்சிகள் ஆரம்பித்த பிறகு, ஒரே போன்ற காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். படத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ உயில் சம்பந்தப்பட்ட திரைப்படம் என நினைத்து விட்டேன். இல்லை. இதுவும் ஒரு வகையில் திரில்லர் போன்றதுதான். ஆனால் இந்த முறை கடுமையான கொலை, தேடல் என்றெல்லாம் இல்லாமல், ஏன் எதற்கு கொலை என்பதெல்லாம் முதலிலேயே காட்டிவிட்டு, அதை ஒரு பாசப் போராட்டமாகச் சித்திரித்து இருக்கிறார்கள். அனைத்து நடிகர்களின் நடிப்பும் அருமை. அதிலும் திலீஷ் போத்தன் அட்டகாசம். கலங்கடிக்கிறார். அதேபோல் விஜயராகவன். அருமையான நடிப்பு. எந்த நடிகருக்கு என்ன விருது கிடைக்கப் போகிறது என்பதை அடுத்த வருடம் தெரிந்து கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு திரைக்கதையை இறுக்கி இருந்தால் படம் இன்னும் வேறு தளத்திற்குப் போயிருக்கும். இப்போதே கூட தவறவிடக் கூடாத படமே. வழக்கம் போல கேரளத்தின் நிலமும் இயற்கையும் ஒரு கதாபத்திரத்தைப் போலவே திரைப்படம் முழுக்கத் தொடர்ந்து வருகிறது. கேரளத் திரைப்படத்துக்குள் நம்மை சட்டென இழுத்துக் கொள்வது அவர்கள் தேர்ந்தெடுக்கும் லொகேஷன்தான். நாராயணின்டெ மூணான்மக்கள் திரைப்படம் போன்ற ஒரு மனநிலை கொண்ட திரைப்படம்தான் என்றாலும், அந்தத் திரைப்படம் தந்த எரிச்சலை இந்தப் படம் போக்கி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்

👍 🙏 3
Haranprasanna
Haranprasanna
6/1/2025, 8:10:45 AM

கிட்டத்தட்ட 13 வருடங்கள் வருடங்களுக்குப் பிறகு ஒரு ஐபிஎல் சீரியஸை முழுமையாகப் பார்க்கிறேன். மொத்தமாக ஒன்று இரண்டு ஆட்டங்கள் அதிலும் அந்தந்த ஆட்டங்களின் பாதி பாதி பார்க்காமல் போய் விட்டிருக்கலாம். எப்போதும் மும்பை அணி வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை. காரணம் முன்பு சச்சின். இப்போது ரோகித் சர்மா. ஆனால் இந்த முறை மும்பை தவிர பல அணிகளின் பல ஆட்டக்காரர்களை மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், சாய் சுதர்சன், மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி என்று பலர் திறமையாக விளையாடி ஆச்சரியப்படுத்தினார்கள். பும்ராவைத் தனியே சொல்ல வேண்டியது இல்லை. இவர்களெல்லாம் இந்தியாவின் எதிர்காலத் தூண்கள். வெளிநாட்டு ஆட்டக்காரர்கள் நன்றாக ஆடினால் ரசிப்பேன் என்பதைத் தாண்டி இந்திய அணிக்கான எதிர்கால ஆட்டக்காரர்களைப் பார்க்கும் அளவுக்கு விருப்பத்துடன் நான் பார்ப்பதில்லை. இன்று நடக்க இருக்கும் பஞ்சாப் மற்றும் மும்பை இடையிலான எலிமினேட்டர் சுற்றில் மும்பை வெல்ல வேண்டும் என்பதே ஆசை. பஞ்சாப் போன்ற அணி தோற்கிறதே என்ற வருத்தத்தையும் சொல்லி மாளாது. எனவே 51 - 49 என்ற ஆதரவில் மும்பை - பஞ்சாப் ஆட்டத்தை நான் இன்று பார்க்கப் போகிறேன். ஸ்ரேயாஸ் ஐயரை போன்ற ஒருவரை டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணிக்கான கேப்டனாகப் போடாதது பெரிய தவறு. ஆர்சிபி அணி எனக்கு அத்தனை இஷ்டமானது அல்ல என்றாலும், கோலியின் அர்பணிப்பும் ஆட்டமும் உலகத்தரம். ஏன் கோலி எல்லா வகை ஆட்டங்களிலும் கொண்டாடப்படுகிறார் என்றால், அவரது அந்த அர்ப்பணிப்பு உணர்வுதான். சில சமயம் அவர் அதீதமாகக் கத்துவது எரிச்சலைத் தந்தாலும் கூட, இந்த வயதிலும் 18 வயது ஆட்டக்காரரின் மனோபாவத்தை அவர் கைக்கொண்டிருப்பதே அவரது வெற்றிக்கு அடித்தளம் என்றும் நினைக்கிறேன்.

❤️ 1
Haranprasanna
Haranprasanna
6/9/2025, 5:25:20 PM

மாஞ்சோலை 1349/2 எனும் நான். நூல் அறிமுகம். https://www.youtube.com/watch?v=xaerbsg3x1s

😮 1
Haranprasanna
Haranprasanna
6/4/2025, 2:34:46 AM

இரு குரல்கள் ஒரு பேருக்காக இரண்டு குரல்கள் என்று தலைப்பு வைத்திருந்தாலும் பல்வேறு விஷயங்களைக் கலந்தடித்துச் சொல்லப் போகிறேன். கமல் ரசிகர்கள் இப்போதே இங்கிருந்து விலகிப் போய்விடும். குறிப்பாக கமல் குரல் மிகவும் பிடிக்கும் என்பவர்கள் நிச்சயம் போய் விடுங்கள். ஆரம்பக் காலத்தில் எனக்கும் கமல் குரல் என்னவோ பிடித்துத்தான் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் கமல் குரலைக் கேட்கவே ஒரு எரிச்சல் வருகிறது. சமீபத்தில் வந்த திரைப்படம் ஒன்றில் தொடக்கக் காட்சியில் கமல் குரலைக் கேட்டபோது, இந்தக் கொடுமையைப் பார்க்கத்தான் வேண்டுமா என்று தோன்றியது. கமல் நடிப்பில் புகுந்துகொண்டுவிட்ட செயற்கைத் தனம், அவரது குரலிலும் புகுந்துகொண்டு, மிகவும் சாதாரணப் பேச்சிலும் புகுந்துகொண்டு விட்டது. கதவு திறந்திருக்கிறது, போய்விடலாம் என்று அரசியல் பேச்சிலும் சரி, நாட்டுக்காக வந்திருக்கிறேன் என்ற அரசியல் பதிலிலும் சரி, முழுக்க செயற்கைத்தனமே. சமீபத்தில் வெளிவந்த மெய்யழகன் படத்தில் கமல் பாடிய ‘யாரோ இவன் யாரோ’ பாடலும் எனக்கு அப்படித்தான். அப்படியே சோகத்தைப் பிழிகிறாராம். சிலர் இப்பாடலை தென்பாண்டிச் சீமையிலே பாட்டுடன் ஒப்பிட்டார்கள். இனி தென்பாண்டிச் சீமையிலே பாடலும் பிடிக்காமல் போய்விடக் கூடாது முருகா என்று வேண்டிக் கொண்டேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தக் லைஃப் படத்தில் வந்திருக்கும் முத்தமழை பாடலை சின்மயி பாடி இருக்கிறார். படத்தில் பாடி இருக்கும் தீ-யை விட இவர் நன்றாகப் பாடுகிறார் என்று அனைவரும் சொல்கிறார்கள். (எனக்கு தீ பாடியதே பிடித்திருக்கிறது. காரணம், அதில் ஒரு புதுமை இருக்கிறது. சின்மயி அட்டகாசமாகப் பாடி இருக்கிறார் என்றாலும் அது எப்போதும் போல் இருக்கிறது.) இப்படி ஒரு பாடலை இன்னொருவர் பாடமாட்டாரா என்று நான் யோசித்த காலங்கள் உண்டு. அது பின்னர் நினைவானது. யேசுதாஸ் பாடிய சில பாடல்களை எஸ்பிபி பாடிக் கேட்டேன். ஆனாலும் என்னவோ ஒரு நிறைவின்மை. ஏனென்றால், எஸ்பிபியோ யேசுதாஸோ பாடலைப் பாடிக் கெடுத்ததில்லை. இதனால் ஒருவர் பாடலை மற்றவர் பாடுவதில் ஓர் ஆர்வம் தாண்டி பெரிய கிக் இருக்க வாய்ப்பில்லை. முன்பு கமல் நடித்து சத்யா என்று ஒரு திரைப்படம் வந்தது. அதில் அவர் ஆங்கரி யங் மேன். கோபக்கார இளைஞன் என்பதை கமல் எப்படிப் புரிந்து கொண்டாரோ, எல்லாக் கட்சியிலும் எரிந்து எரிந்து விழுந்து கொண்டிருந்தார். முகத்தை என்னவோ போல வைத்துக்கொண்டு நடித்துக் கொண்டிருந்தார். அதில் கமல் பாடிய பாடல் தோட்டா துடிக்குது துடிக்குது. அந்தக் குரல் எனக்குச் சுத்தமாக பிடிக்கவில்லை. எஸ்பிபி பாடியிருந்தால் அந்தப் பாடல் வேறு தளத்திற்குப் போயிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அதேபோல் கமல் குரலில் பாடிய ‘விகரம்’ பாடலை வேறு யாராவது பாட மாட்டார்களா என்று நினைத்திருந்தேன். இப்படி வேறு யார் பாடினாலும் எனக்கு மிக முக்கியமாக, மூலப் பாடலின் பாவம் மாறாமல் இருக்க வேண்டும். சில சமயம் எஸ்பிபி மேடைகளில் தன் இஷ்டம் போல் மாற்றிப் பாடி விடுவார். எனக்கு அது சுத்தமாகப் பிடிக்காது. பாடகர் ஒழுங்காக மாற்றாமல் பாடினால், பின்னணி இசை சிறப்பாக அமையாது. இப்படி எந்தச் சிக்கலும் இல்லாமல் எந்த மாற்றமே இல்லாமல் அதே பாடலை வேறொருவர் பாடிக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன். அப்படி நான் நினைத்துக் கொண்ட இன்னொரு கமல் பாடல் சுந்தரி நீயும் சுந்தரி ஞானும் பாடல். இதில் கமல் குரலைக் கேட்கவே எரிச்சலாகத்தான் இருந்தது. சமீபத்தில் ஏதோ ஒரு youtube சேனலில் விக்ரம் பாடலை பாடகர் கார்த்திக் பாடிக் கேட்டபோது அப்படியே மனம் அள்ளிக் கொண்டது. இந்தப் பாடலை கமல் கட்டைக் குரலில் பாடிக் கெடுத்து வைத்திருந்திருப்பார். அதையே தொழில்முறை பாடகர் கார்த்திக் பாடும் போது அதே பாடல் எங்கயோ போய் விட்டது. கார்த்திக்கின் வாழ்நாள் பாடலாக இது இருக்கும். இல்லையென்றாலும், எனக்கான கார்த்திக்கின் வாழ்நாள் பாடல் இதுவே. மிகவும் உச்ச ஸ்தாயியில் கமல் பாடிய பாடல் என்று ‘நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம்’ பாடலைச் சொல்வார்கள் அவரது ரசிகர்கள். அதில் அவர்களுக்கு ஒரு பெருமை. ஆனால் கமல் அந்தப் பாடலில் காட்டுக் கத்தலாகக் கத்தித்தான் பாடி இருந்தார். அந்த பாடலையும் கார்த்திக் பாடினால் அதையும் பொக்கிஷமாக சேமித்து வைத்துக் கொள்ளலாம். கமல் ரசிகர்கள் பொதுவாக எந்த நடிகர் கமலைப் போலப் பாட முடியும் என்பார்கள். அவர்கள் கன்னட நடிகர் ராஜ்குமாரின் பாடல்களைக் கேட்கலாம். குரலில் தேன் வழிகிறது என்றால் அது ராஜ்குமாரின் குரலில்தான். இரண்டு குரல்கள் என்று தலைப்பிட்டுவிட்டு இரண்டு மாற்றுக் குரல்களாகப் பேசுகிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். இல்லை. எனக்கு இரண்டு குரல்கள் சுத்தமாகப் பிடிக்காது. அதில் ஒன்றைப் பற்றி விலாவாரியாகச் சொல்லிவிட்டேன். இன்னொரு குரல் விஜய் சேதுபதி குரல். Karthik's vikaram song https://www.youtube.com/watch?v=kAexBq3z9KM

👍 3
Haranprasanna
Haranprasanna
6/5/2025, 9:18:37 AM

தக் லைஃப் விமர்சனம்... இயர் வைத்துக் கேட்கவும். பாடப் போகிறேன் என்று பயப்படவேண்டாம். முதல் சில நொடிகள் ஆடியோ பிரச்சினை! https://youtu.be/w0BoI8-4VNg

👍 1
Haranprasanna
Haranprasanna
6/1/2025, 7:11:27 AM

நினைவூட்டல் மொத்தம் ஒரு லட்சம் பரிசுத் தொகை. -- சுவாசம் பதிப்பகம் மற்றும் எழுத்தாளர். ராமச்சந்திரன் உஷா இணைந்து நடத்தும் வரலக்ஷ்மி அம்மாள் நினைவு நாவல் போட்டி – 2025 முதல் பரிசு ரூ.50,000 இரண்டாம் பரிசு ரூ.25,000 மூன்றாம் பரிசு ரூ.10,000 ஆறுதல் பரிசு ( மூன்று கதைகளுக்கு தலா) ரூ.2,000 சுவாசம் பதிப்பகம் நடத்துகின்ற இப்போட்டி எழுத்தாளர் ராமசந்திரன் உஷாஅவர்களின் பாட்டியும் தேர்ந்த வாசகியுமான 'வரலக்ஷ்மி அம்மாள்' அவர்கள் பெயரில் 'வரலக்ஷ்மி அம்மாள் நினைவு நாவல் போட்டி 2025' என அறிவிக்கப்படுகிறது. நோக்கம் புதிய படைப்பாளர்களைக் கண்டுபிடிப்பது. படைப்புத் திறனை ஊக்குவிப்பது. படைப்பு வெளியை விரிவடையச் செய்வது, வாசிப்புச் சூழலை வளர்த்தெடுப்பது ஆகிய நோக்கங்களைப் பிரதானமாக முன்வைத்து இந்தப் போட்டி அறிவிக்கப்படுகிறது. விதிமுறைகள் *இந்த நாவல் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். * ஒரு நபருக்கு ஒரு நாவல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. * நாவலின் அளவு குறைந்தபட்சம் 32000 முதல் 50000 வார்த்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். * நாவல்கள் எந்த வகைமையைச் சார்ந்ததாகவும் இருக்கலாம் (சமூகம் அரசியல், சூழலியல், பின்நவீனத்துவம், அறிவியல், புனைவு, வரலாற்றுப்புனைவு, யதார்த்தவாதம், கற்பனாவாதம், துப்பறியும் கதை உள்ளிட்ட வகைமை....) அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: [email protected] படைப்பினை அனுப்புவதற்குக் கடைசி நாள் : 31 ஜூலை 2025. போட்டி முடிவுகள் நவம்பர் 1ம் தேதி அறிவிக்கப்படும். * போட்டி முடிவு வெளியாகும் வரை நடுவர்கள் யார் எனக் கண்டறிவது அவர்களோடு தொடர்பு கொள்வது என எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. உறுதிமொழி படைப்பை அனுப்பியதில் இருந்து போட்டி முடிவு வெளியாகும் வரை அதனை வேறு எந்த இதழுக்கோ அல்லது அச்சிற்கோ அல்லது டிஜிட்டல் வடிவிலோ அனுப்புவதாக இல்லை என உறுதிமொழி அளிக்க வேண்டும். எந்த ஒரு மதத்தையோ ஜாதியையோ இனத்தையோ காழ்ப்புடன் தாழ்த்திச் சொல்லும் படைப்பு ஏற்கப்படாது. ஏற்கெனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புத்தகம் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்கிற உறுதிமொழியும் இருத்தல் வேண்டும். மேலும் படைப்பானது தனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் அது எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிற உறுதிமொழியும் இணைத்திருக்க வேண்டும். படைப்புகளை MS WORD FILE-ல் UNICODE முறையில் மட்டுமே அனுப்பவேண்டும் PDF FILE-கள் நிராகரிக்கப்படும். தேர்வும் பரிசும் * இப்போட்டியின் முடிவில் பதினைந்து நாவல்கள் Shortlist செய்யப்படும். * இந்தப் பதினைந்து நாவல்களிலிருந்து பரிசுக்குரிய புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசுகள் வழங்கப்படும். * பரிசு பெற்ற நாவல்கள் சுவாசம் பதிப்பகம் மூலம் வெளியிடப்படும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: [email protected]

Haranprasanna
Haranprasanna
5/31/2025, 4:21:04 PM

துடரும் (M) - இந்தத் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்திருக்க வேண்டும். எப்படியோ தவறிப் போய்விட்டது. இன்றுதான் பார்த்தேன். (ஜியோ ஹாட்ஸ்டார்.) ஒரு கமர்சியல் திரைப்படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது. முதல் இருபது நிமிடங்கள் படம் மெல்ல சம்பந்தமில்லாமல் போவது போல் தோன்றினாலும் பின்னர் முடியும் வரை ஒரு நொடி கூட திரையிலிருந்து கண்ணை விலக்கத் தோன்றவில்லை. அப்படி ஒரு இறுக்கமான திரைக்கதை. இடைவேளைக் காட்சியும் அதன் பிறகு வரும் போலீஸ் ஸ்டேஷன் விசாரணைக் காட்சியும் பதற வைக்கும் மாஸ் காட்சிகள். இப்படி இரண்டு காட்சிகள் ஒரு படத்திற்கு இருந்து விட்டால் நிச்சயம் அது பெரும்பாலான மக்களால் ரசிக்கப்படும். வசூலுக்கும் பஞ்சம் இருக்காது. இந்தப் படம் 200 கோடி வசூலித்தது எந்தவித ஆச்சரியமும் இல்லை. மோகன்லால் அதகளப்படுத்தி விட்டார். போலீசாக வரும் பிரகாஷ் வர்மா மோகன்லாலையும் மிஞ்சி விட்டார். சிறந்த வில்லனுக்கான விருது இவருக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதேபோல் இன்னொரு போலீசாக வரும் நடிகரும் கலக்கி விட்டார். இந்த மூவரும் திரைப்படத்தை எங்கோ கொண்டு போய் விட்டார்கள். படத்தின் ஒரே மைனஸ் பாயிண்ட் ஷோபனா. மோகன்லால் ஷோபனா கெமிஸ்ட்ரி மேல் அந்தக் கால மலையாளிகளுக்குப் பெரிய ஈர்ப்பு உண்டு. அதை நம்பி இப்படி ஜோடி வைத்திருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கூட எடுபடவே இல்லை. இந்தப் படத்தில் நிறைய தமிழ்த் திரைப்படங்கள் ரெஃபரன்ஸ் வருகின்றன. இளையராஜாவின் பாடல்கள் ஆங்கங்கே ஒலிக்கின்றன. தமிழில் பார்க்காமல் மலையாளத்தில் பாருங்கள். கேரளாவின் காடுகளும் மழையும் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளும் பின்னணி இசையும் மறக்க முடியாத கமர்சியல் திரைப்பட அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்.

❤️ 👍 😮 10
Haranprasanna
Haranprasanna
5/29/2025, 7:53:25 AM

அக்ஞாதவாசி (K) – தொடக்கத்தில் படம் எங்கெங்கோ அலைபாய்ந்தாலும், பலப் பல கதாபாத்திரங்கள் வந்தாலும், சீரியஸ் திரைப்படமா அல்லது டார்க் காமெடி வகையா என்கிற குழப்பத்தை ஏற்படுத்தினாலும், ஒரு கட்டத்தில் படம் சுதாரித்துக் கொள்கிறது. படத்தை முழுமையாக, கொஞ்சம் கூட ஓடவிடாமல் பார்க்க வைப்பவை – படத்தின் மேக்கிங் (கேவலமான கிராஃபிக்ஸ் நீங்கலாக), கேமரா, பின்னணி இசை, கதை நிகழும் கிராமம், நடிகர்களின் நடிப்பு, முக்கியமாக ரங்காயன ரகு, சரத் லோகிதஸ்வாவின் நடிப்பு, இன்னும் குறிப்பாக கதாநாயகி பாவனா கௌடாவின் அநாயசமான நடிப்பு. ஒரு கொலை, அதற்கான தேடல்தான் கதை என்றாலும், படம் நிகழ்வது இரண்டு தளங்களில் என்பதுவும், நேர்க்கோடற்ற கதை சொல்லலும் படத்தைச் சுவாரஸ்யமாக்குகின்றன. ஆஹா ஓஹோ திரைப்படமல்ல. ஆனால் நிச்சயம் பாருங்கள். தொடக்கக் காட்சிகளைப் பார்த்துச் சலிப்பில் பார்க்காமல் விட்டு விடாதீர்கள்.

👍 ❤️ 4
Haranprasanna
Haranprasanna
2/24/2025, 5:01:08 AM

பேகம்களின் கண்ணீர் பென்னேசன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் முக்கியமான நூல். 1857ல் நடந்த சிப்பாய்ப் புரட்சிக்குப் பிறகு ஆங்கிலேய அரசு அன்றைய ஆட்சியாளர்களை எப்படிப் பந்தாடியது என்பதை விளக்கமாகப் பதிவு செய்யும் நூல். இப்புரட்சியை அடக்காதவர்கள் என்று நினைத்தோ அல்லது புரட்சிக்கு உதவி செய்தார்கள் என்று நினைத்தோ அல்லது ஜாஃபர் ஷா புரட்சியில் பங்கெடுத்தார் என்பதற்காகவோ அல்லது இவை எல்லாவற்றுக்குமாகவோ, அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ் அரசால் கொடூரமாக ஒடுக்கப்பட்டார்கள். அன்று உயிருக்காகத் தப்பிப் பிழைத்தவர்களின் நினைவை, அன்றிலிருந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு பேட்டி எடுத்துத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் க்வாஜா ஹஸன் நிஜாமி. இந்தப் பேட்டி எடுக்கப்படும்போது பலர் பிரிட்டிஷ் அரசு தரும் உதவித் தொகையான ஐந்துக்கும் பத்துக்கும் ஏங்கித் தங்கள் வாழ்க்கையைக் கழிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். தங்கள் அரசப் பாரம்பரியம் தங்கள் கண்முன்னே பறிக்கப்பட்டதை ரத்தமும் வலியுமாக இந்த நூலில் அவர்கள் பதிவு செய்கிறார்கள். தன் தந்தை தன் கண்ணெதிரே கொல்லப்பட்டதை, ரம்ஜானுக்கு வீட்டில் குந்துமணி கோதுமை கூட இல்லாததை, வேலைக்காரர்களை ஏவி ஏவி ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கூலி வேலை செய்து பிழைப்பதை, உயிருக்கும் உடைமைக்கும் அஞ்சி மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு ஓடியதை எல்லாம் இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம். உருதுவில் இருந்து பென்னேசன் நேரடியாக தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். அனாவசியமான சொல்லாடல்களோ தேவையற்ற திருகல் மொழியோ இல்லை. இந்த நூலுக்குத் தேவையான நேரடி மொழி. மிகச் சிறப்பான பணியைச் செய்திருக்கிறார் பென்னேசன். இந்த நூல் படிக்கும்போது இன்னொரு நினைவும் ஒருசேர எழுந்துவந்ததை மறைக்க முடியாது. இந்த நூலில் பேசுபவர்கள் அனைவரும் தாங்கள் செங்கிஸ்கானின் வம்சம், பாபரின் பேரர்கள் என்று பழம்பெருமை பேசுவதைத் தொடர்ந்து பார்க்கலாம். பாபரும் செங்கிஸ்கானும் இன்று பிரிட்டிஷ் அரசு இவர்களுக்குச் செய்த அதே கொடூரத்தை அன்று மற்றவர்களுக்குச் செய்தவர்கள்தான். அப்படிச் செய்துதான் இவர்கள் இந்த நாட்டில் காலூன்றவே முடிந்தது. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று சொன்னவன் சும்மா சொல்லிவிட்டுப் போகவில்லை. வன்மத்துடன் நான் இதைச் சொல்லவில்லை, நிதர்சனம் இது என்கிற வகையில் சொல்கிறேன். கன்ஃப்யூஸ்ட் தேஸி என்பதைப் போல, இந்த வம்சாவளியினருக்குத் தாங்கள் யார் என்பதில் குழப்பம் இருக்கிறது. பழம்பெருமைகளில் தோயும்போது தங்களை பாபரின் சந்ததி என்று நினைத்துக்கொள்கிறார்கள். அதே சமயம் இந்தியாவே இவர்களது யதார்த்தமான தாய்நாடு என்பதும் இவர்களுக்குப் புரிகிறது. இந்த இரண்டு நிலைகளுக்கு இடையேயும் ஊடாடுகிறார்கள். பாவம்தான். இதில் ஒரு கதை என்னை மிகவும் கவர்ந்தது. பாதுஷாவின் மகள் ஒருவர் மெக்கா செல்கிறார். இவர் அரச வம்சம் என்பதால் மெக்கா சுல்தான் இவருக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் செய்து தருகிறார். தங்குவதற்கு வீடும், கூடவே மாதச் செலவுக்குப் பணமும் தருகிறார். இந்தியாவில் அல்லல்பட்டு மாதப் பணத்துக்காக பிரிட்டிஷ் அரசிடம் கையேந்த வேண்டிய தேவை இனி இல்லை. கூடுதலாக மெக்காவில் சுல்தானின் தயவால் மரியாதையும் கிடைக்கிறது. ஆனாலும் சில வருடங்களில் இவர் இந்தியா வருகிறார். தன் நாடு இந்தியா என்று உணர்வதால் அவரால் மரியாதையோடு கூட பாக்தாத்தில் வாழ முடியவில்லை. கன்ஃப்யூஸ்ட் தேசிகளுக்கு மத்தியில், பாபரின் வழித் தோன்றல் என்றாலும் தன் நாடு இந்தியா என்று வந்த அந்த மனிதருக்கு, இந்தக் கதையில் வரும் அத்தனை இன்னல்களும் சமர்ப்பணம் ஆகட்டும். புத்தகத்தை வாங்க: https://www.swasambookart.com/books/9788119550999 இபுத்தகமாக வாங்க: https://www.amazon.in/dp/B0DX9HT3SW

❤️ 👍 4
Haranprasanna
Haranprasanna
2/6/2025, 7:51:54 AM

அச்சுப் புத்தகத்தை வாங்க https://www.swasambookart.com/books/9788119550814 அமேசானில் வாங்க https://www.amazon.in/dp/B0D6KPN3BC Ebook வாங்க https://www.amazon.com/dp/B0CX4QHZY6 ஆடியோ புத்தகமாக வாங்க https://tinyurl.com/india-pirivinai-audio-book போன் மூலம் வாங்க 8148066645

Link copied to clipboard!