Para
February 3, 2025 at 04:49 AM
படித்து ரசித்தேன்- த. செந்தமிழ்
நூல் : சாத்தானின் கடவுள்
ஆசிரியர் : பா. ராகவன்
குறிப்பு : இது மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில்
வாசிக்கப்பட்டது.
கடவுள்னா யாரு? எங்க இருக்காரு? கடவுள்ன்றது அவனா, அவளா,
இல்ல அதுவா? கடவுளை அடைவதற்கான வழி தான் என்ன?
கடவுள் என்னும் கருத்துரு ஒரு மனிதனுக்கு
அறிமுகமாவதிலிருந்து இது போன்று நூற்றுக்கணக்கான கேள்விகள்
எழுகின்றன. யார்தான் இதற்கெல்லாம் பதில் கூறுவர்? அதைத்தான்
மதங்களின் மூலமும் இன்னபிற அமைப்புகளின் மூலமாகவும்
காலங்காலமாக போதித்து வருகின்றார்களே, பாரா என்ன
விசேஷமாக சொல்லிவிடப் போகிறார் என்று கேட்பீர்களானால்,
பள்ளியில் புரியாத பாடத்தை ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதற்கும்
நண்பன் ஒருவன் சொல்லிக் கொடுப்பதற்கும் உள்ள வித்தியாசம்
தான்.
பாரா தன்னுடைய இளம்பிராயத்தில் ஆரம்பித்து, கடவுள் என்னும்
கருத்துரு எவ்வாறு அவருக்கு அறிமுகமாகியது, அன்றிலிருந்து
பரம்பொருள் குறித்தான தேடலில் அவர் கண்டடைந்தவை
என்னென்ன, அவர் வந்தடைந்த பாதை எதுவென்று சொல்லி,
வரலாற்று நோக்கில் மன்னன்-கடவுள்-மதம் என பல கோணங்களை
தொட்டுக் காட்டியிருக்கிறார்.
ஒரு புனைவுக்கான களம் போல் ஆரம்பித்து, தத்துவ நூலாகவோ
ஆன்மீக நூலாகவோ இல்லாமல் ஒரு தனிமனிதனின்
பரம்பொருளை அடையும் முயற்சியில் தான் கண்டவற்றை
தொகுத்தெழுதும் நூலாகவே இது வந்துள்ளது. பிரம்மம் எனும்
கருத்தாக்கத்தை ஏற்க, அவர் வந்த பாதையை வேதங்கள்- சித்தர்கள்-
வள்ளலார்- தயானந்த சரஸ்வதி என்று தொகுக்கலாம். நூல்
முழுமையும் படித்து ஒருவர் எளிதாக வந்தடையும் முடிவு
என்னவென்றால் மதத்திலிருந்து ஆன்மீகத்தை விளக்கிப் பார்க்க
வேண்டும் என்பதுதான். மதங்களால் உருவாக்கப்பட்ட பிரதிகளின்
வழியே பரம்பொருளை அடைய எண்ணி அம்முயற்சியில் ஆசிரியர்
தோல்வியும் அடைந்திருக்கிறார். மதத்தின் வழியாகவும்
பரம்பொருளை அடைந்தவர்கள் உண்டு. பாராவின் பாதை மதத்திற்கு
எதிரான சித்தர்கள் காட்டும் வழி.
சரி, இந்நூலைப் படித்தால் முதல் பத்தியில் உள்ள
கேள்விகளுக்கெல்லாம் விடைகிடைக்குமா என்றால், நிச்சயமாக
இல்லை என்று சொல்லலாம். ஆனால், அக்கேள்விகள் குறித்து
இன்னும் ஆழமாக சிந்திக்கத் தொடங்குவீர்கள். கடவுளை
அறிவதொன்றும், "முப்பது நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி?"
புத்தகத்தை வாங்கி ஆங்கிலம் கற்பது போலல்லவே. அவரவர்
தேடல். அவரவர் பாதை.
❤️
3