Para
February 5, 2025 at 05:01 AM
கடிதம் - ரமணன்
அன்பின்,
வாட்சப் சேனலில் தெரிவித்த வாழ்த்துக்கு உடனடியாக மறுமொழியளிக்காமைக்கு மிக்க வருத்தங்கள். சில சமயங்களில் சூழல் சிறைவைத்து விடுகிறது.
வாழ்த்துக்கு நன்றி சார். என் வாழ்நாளெல்லாம் நான் ஜந்து தொடருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
'எழுத்து நன்றாக இருந்தால் ஒருபொட்டுச் சர்க்கரையைக் கண்ட எறும்பாக எங்கிருந்தாவது வாசகர்கள் வந்து விடுவார்கள்' என்று எழுதுதல் பற்றிய குறிப்புகள் புத்தகத்தில் எழுதியிருந்தீர்கள். அந்த ஒரு பொட்டுச் சர்க்கரையாக எனக்கு அமைந்தது நிலமெல்லாம் ரத்தம். பலராலும் கொண்டாடப்பட்ட அந்தப் புத்தகம் எனக்கு மட்டும் ஏனோ சென்ற வருடம்தான் கண்ணில் பட்டது. சரி, அனைத்திற்கும் காலம் வரவேண்டுமல்லவா?
சர்க்கரையைச் சுவைத்த இந்தச் சிறிய எறும்பு உங்களை ஃபேஸ்புக்கில் பின்தொடர ஆரம்பித்தது. அப்போதுதான் 'ஜந்து'நாவல் போட்டி அறிவிப்பு வந்தது. விளையாட்டாக மதிப்புரை எழுதத் தொடங்கினேன். எனக்கெல்லாம் ஓரளவு எழுத வருமென்பதே அப்போதுதான் தெரிந்தது.
தொடர்ந்து வந்த ஜென் கதைகள், புரிந்துகொள்வதற்கு மிகுந்த அர்ப்பணிப்பைக் கோரின. புரிந்தவரையில் எழுதினேன். மனமாரப் பாராட்டினீர்கள். உண்மையில் நெகிழ்ந்து போனேன். அலுவலக நண்பர்களிடமெல்லாம் சொல்லிச்சொல்லி மகிழ்ந்தேன்.
தங்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. 'உனக்கு எழுதவரும். எழுது' என்றீர்கள். ஆலோசனைகள் தந்தீர்கள். ஒரு நாள் திடீரென மெட்ராஸ் பேப்பரில் எழுத வாய்ப்பளித்தீர்கள். உண்மையில் அன்று நான் உறங்கவில்லை. இந்த வாய்ப்புக்காக எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்பதை நானறிவேன். பதற்றமாக இருந்தது.
எழுதுவதொன்றே நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றும் என உணர்ந்தேன். அனுபவமில்லாத புதியவன்தானே என்றெண்ணாமல் மெட்ராஸ் பேப்பர் நண்பர்கள் என்னை இருகை நீட்டி அணைத்துக்கொண்டனர். அக்கறையுடன் ஆலோசனைகள் வழங்கினர். இதோ பதின்மூன்று வாரங்கள் ஓடிவிட்டன.
நானெல்லாம் மெட்ராஸ் பேப்பரில் எழுதுவேன் என்று சென்ற வருடம் யாராவது சொல்லியிருந்தால் சிரித்திருப்பேன். அவ்வளவு ஏன்? பாரா உன்னை அழைத்துப் பேசுவார் என்று யாராவது சொல்லியிருந்தால் கூடப் பகடி செய்வதாக எண்ணியிருப்பேன். ஜந்துவுக்கு நான் முதன்முதலாக அனுப்பிய மீமுக்கு 'அட்டகாசம்' என்று மறுமொழி அளித்திருந்தீர்கள். அதை என் அலுவலகத்தில் அத்தனை பேரிடமும் சொல்லிப் பெருமையடித்திருக்கிறேன்.
அந்த நிலையிலிருந்த எனக்கு இன்று கிடைத்திருக்கும் இடம், ஒரு சிறிய வாசகப் பங்களிப்பினால் என்பதை எண்ணிப்பார்க்கையில் வியப்பாய் இருக்கிறது. நான் தங்களால் அறியப்பட்டேன். தாங்கள் என்னைப் பலரும் அறியச்செய்தீர்கள். எழுத்துடனும் எழுத்தாளர்களுடனும் பயணிக்கும் வாய்ப்பு தந்தீர்கள்.
தங்கள் உறவினரைப்போல் முகம் தெரியாத பலரின் அன்பைப் பெற்றேன். இன்னமும் கூட என் ஃபேஸ்புக்கில் ஜந்துவுக்கும் ஜென் கதைகளுக்கும் எழுதிய விமர்சனத்தைப் பாராட்டும் முகமறியாதவர்கள் இருக்கிறார்கள். பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கும்.
வாசிப்பதும் அதைப்பற்றிச் சில வரிகள் எழுதுவதும் ஒருவரை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்பதற்கு நானோர் உதாரணம். ஜந்துவுக்கும் ஜென் கதைகளுக்கும், அவற்றைத் தாங்கள் எழுதுமாறு தூண்டிய பிரபஞ்சத்துக்கும் நான் தீராக்கடன் பட்டுவிட்டேன்.
தற்போது சேனலில் விமர்சனங்கள் எழுதும் நண்பர்களைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. எவ்வளவு நன்றாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள்! இவர்களைக் கண்டறிய இப்படிப்பட்ட ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்பவர்கள் நிச்சயம் மிளிர்வார்கள். வெற்றியாளர்களை அறிந்துகொள்ள ஆவலாக உள்ளது.
இறுதியாக,
நன்றி சொல்லித் தீரப்போவது எதுவுமில்லை. இருந்தாலும் சம்பிரதாயமாக, நன்றி சார் :-)
- வ. ரமணன்
பி.கு.: தங்கள் உறவினருக்கு என் நன்றி சார்.
❤️
👍
💐
🙏
👏
26