காங்கயம்  🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
காங்கயம் 🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
February 9, 2025 at 05:22 AM
வீட்டில் வைக்கக்கூடாத தெய்வங்கள் பொதுவாகவே நம் முன்னோர்கள் சாந்தஸ்வரூபமாக இருக்கக்கூடிய தெய்வ விக்கிரகங்களை மட்டுமே வீட்டில் வைத்து வழிபடுவார்கள். படமாக இருந்தாலும், இதே நிபந்தனை தான். ஒரு விரல் நீளத்திற்கு மேலே தெய்வ உலோக விக்கிரகங்களை வீட்டில் வைத்திருந்தால், அதை முறைப்படி பூஜை செய்ய வேண்டும் என்பது ஆகம விதியாகும். அப்படி செய்ய முடியாதவர்கள், அதனை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்பது நம் முன்னோர் கூற்று! அந்த வகையில் வீட்டில் வைக்கக்கூடாத தெய்வத்திரு உருவங்கள் எவை எல்லாம்? ஏன் வைக்கக்கூடாது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களைத் தான் இனி தொடர்ந்து காண இருக்கிறோம். தெய்வத்திரு உருவங்கள் உக்கரமாக இருந்தால் வீட்டிற்கு ஆகாது என்பார்கள். காளி, துர்க்கை அம்மன், நரசிம்மர் இது போன்ற உக்கிரமாக இருக்கக்கூடிய தெய்வங்களின் படங்களை வீட்டில் வைக்கக் கூடாது. இதே தெய்வங்கள் சாந்த ஸ்வரூபமான தோற்றத்தில் வைத்தால் தவறில்லை ஆனால் வதம் செய்வதைப் போல இவர்களின் திரு உருவங்கள் இருந்தால் அவற்றை தவிர்க்க வேண்டும் என்பது தான் இங்கு சூட்சமமாக சொல்லப்படும் உண்மை. வீடு என்பது எப்போதும் அமைதியாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். நாம் பார்க்கும் விஷயங்களும் கேட்கும் சப்தங்களும் கூட இனிமையாக இருக்க வேண்டும். அப்போது தான் நம்முடைய மனமும் அமைதியாகும். இதனாலேயே உக்கிர தெய்வங்கள் படத்தை வீட்டில் வைக்கக் கூடாது என்பார்கள். அடுத்து கிரக தோஷங்களை நீக்கக் கூடியது நவகிரகங்கள். இந்த நவகிரகங்களின் படங்களை வீட்டில் வைப்பது முறையானது அல்ல! நவகிரகங்களையும் நல்ல அதிர்வலைகள் நிரம்பியுள்ள, தெய்வீக அம்சம் கிடைக்கக்கூடிய கோவிலில் சென்று தான் வழிபட வேண்டும் என்பது நியதி! அப்போது தான் கிரக தோஷங்கள் விலகும். வீட்டில் நவகிரக படங்களை வைத்திருந்தால் தோஷங்கள் விலகாது. குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இருந்தால் தான் அந்த குடும்பத்திற்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். இதனால் நீங்கள் வைக்கக்கூடிய தெய்வ விக்கிரகங்களின் படங்களும் தாயாருடன் சேர்ந்தவையாக இருக்க வேண்டும். தாயார் இல்லாத சுவாமியின் படங்களை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதனால் குடும்பத்தில் அமைதி நிலைக்கும். “சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவமில்லை” என்பது போல தாயாரும், சுவாமியும் சேர்ந்து இருக்கும் படத்திற்கு தான் வலிமை அதிகம். மகாலட்சுமி ஆனவள் மென்மையானவள். இவள் நிற்கும் படியான படத்தையோ, விக்கிரகத்தையோ வைத்திருக்கக் கூடாது. தாமரை மலரில், மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கும் படியான படங்களையும், விக்கிரகங்களையும் வைத்திருந்தால் அங்கு செல்வத்திற்கு குறைவிருக்காது. இவளின் கால்கள் வலித்தால் வீட்டில் செல்வம் தங்காது என்பார்கள். ஆண்டி கோலத்து முருகன் சிலையையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்பது நியதி. முருகன், சாந்த ஸ்வரூபமாக இருக்கக் கூடியவர். இவர் ஆண்டி கோலத்தில் இருப்பது கோபத்துடன் இருப்பதற்கு சமமாகும். எல்லாவற்றையும் துறந்து, எதுவும் வேண்டாம் என்கிற நிலை என்பதால், அதனை குடும்பமாக வாழும் வீட்டில் வைத்திருப்பது ஆகாது என்பார்கள். இந்த முருகன் சிலையை வீட்டில் வைத்திருப்பது வறுமைக்கு வழிவகுக்கும். முருகன் வள்ளி, தெய்வானையுடன் வேலும், மயிலும் கொண்டு மலர்ந்த முகத்துடன் இருப்பதாக இருந்தால் என்றென்றும் குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் சண்டையே வராது தவிர்க்கலாம். சுவாமி ஐயப்பன் படத்தையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது. மிகுந்த சுத்தபத்தமும், பக்தியும் இருப்பவர்கள் இவற்றை தாராளமாக வீட்டில் வைத்து வழிபடலாம், ஆனால் முறையாக எதையும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் ஆசைக்காக இவற்றை வைத்திருக்காமல், இவர்களுக்கு உரிய மரியாதை உடன் கோவிலுக்கு சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.
👍 1

Comments