
காங்கயம் 🦁 லைன்ஸ் ஆன்மீக தளம்
February 9, 2025 at 03:17 PM
*வேல் மாறல் - பாகம் 1*
*முருகப் பெருமானின் வேலின் மகிமைகள்*
முருகப் பெருமானின் வேலின் மகிமையை அறிந்து கொள்ளும் முன்னர் முருகப் பெருமானின் அவதாரத்தை அறிந்து கொள்வது அவசியம் ஆகும். அது என்ன? சனத்குமார முனிவர் என்பவர் பிரும்மாவின் மன எண்ணத்தில் இருந்து தோன்றியவர். அவர் ஒரு பிரம்ம ஞானி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று உணர்ந்திருந்தவர். வெளி வந்தது முதலே அவர் ஆழ்ந்த தவத்திலேயே இருந்தார். இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஒரு கனவு வந்தது. அந்த கனவில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் சனத்குமாரர் தேவ சேனாபதியாக இருந்தவாறு யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் அழிக்கிறார். அந்த கனவைக் பார்த்துக் கொண்டிருந்த சனத்குமாரர் விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் தனது கனவைக் குறித்து கூறி அதற்கான அர்த்தம் என்ன என்று கேட்டார்.
அதைக் கேட்ட பிரும்மா அவரிடம் கூறினார் ‘மகனே நீ பூர்வ ஜென்மத்தில் வேத அத்யயனம் (அத்யயனம் என்றால் கற்றுக் கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது என்பது பொருள். வேதத்தை நாம் குருவிடம் இருந்து செவி வழியே கேட்டு, மறுபடியும் மறுபடியும் அதை பலமுறை சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது) செய்தாய். அதில் அசுரர்களுடன் யுத்தம் என்று வருவது உன் மனதில் ஆழப் பதிந்து விட்டது. வேதங்கள் ஓதி வேள்வி வளர்த்து தேவர்களை மகிழ்விக்கும் போது அதனால் மனம் மகிழ்ந்து அருள் புரிபவர்கள் தேவர்கள். அப்படிப்பட்டவர்களை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் ஆழ்ந்த பிடிமானம் இருந்ததினால், அசுரர்களையெல்லாம் நாமே அழித்து விட மாட்டோமா?’ என்று பூர்வ ஜன்மத்தில் நினைத்தாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜென்மாவிலும் தொடர்ந்து கனவாக வெளியாகி உள்ளது. உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது உண்மையில் நடந்து விடும். அதனால் நீ ஒருநாள் தேவ சேனாதிபதியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டு அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ ‘தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்’ என்றார்.
சூரபத்மனின் கொடுமைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க ஒரு மகனை பிறப்பிக்க வேண்டும் என்பது விதியாக இருந்ததினால் அதை நிறைவேற்றும் சமயம் வந்து விட்டதை உணர்ந்து கொண்ட சிவபெருமான் தனது மனைவி பார்வதியுடன் தவத்தில் இருந்த சனத்குமாரரின் முன் தோன்றி அவரை தனது குழந்தையாக பிறக்குமாறு கூறினார். அதை ஏற்றுக் கொண்ட சனத்குமாரர் ‘சரி உனக்கு மகனாக பிறக்கின்றேன்’ என்று வாக்கு கொடுத்தார். அவர் பிரும்ம ரிஷி என்பதினால் யோனி மூலம் பிறப்பு தொடர்பான பாவங்களைத் தவிர்ப்பதற்காக பார்வதி தேவியின் மூலம் பிறக்க வேண்டாம் என முடிவு செய்து ‘உனக்கு மகனாக பிறக்கின்றேன்’ என சிவபெருமானிடம் வாக்கு கொடுத்தவர் பார்வதியையும் சேர்த்து ‘உங்களுக்கு மகனாக பிறக்கின்றேன்’ என வாக்கு கொடுக்கவில்லை. ஆகவே பார்வதி இன்றி எப்படி சிவபெருமானுக்கு மகனாக பிறப்பது?
அதனால்தான் சிவபெருமான் சனத்குமாரனை தனது மனதில் ஏந்திக் கொண்டு தனது நெற்றி பொட்டில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளியிட்டு அக்னி தேவனிடம் (நெருப்புக் கடவுள்) அவற்றைக் கொடுக்க, அவர் சூடு தாங்காமல் அதை பூமாதேவியிடம் (பூமி தெய்வம்) கொடுத்து விட, அவளால் அந்த சூட்டை கையில் வைத்துக் கொள்ள முடியாமல் போய், கங்கா (பார்வதி மாதாவின் சகோதரி) மாதாவிடம் கொடுக்க, அதைப் பெற்றுக் கொண்ட பூமா தேவி அதை வெந்நீராக மாற்றி புதருக்குள் தள்ளி விட்டாள். அதையே ஆறு சப்த கன்னிகைகள் எடுத்து பாலூட்ட, அவர்களிடம் இருந்து அந்த ஆறு குழந்தைகளையும் பெற்றுக் கொண்ட பார்வதி தேவி அவர்களை அணைத்துக் கொள்ள, அந்த ஆறு குழந்தைகளும், ஆறு முகம் கொண்ட ஒரே குழந்தையாக்கி விட்டார்கள். இப்படியாக சனத்குமாரரே இன்னொரு பிறவி எடுத்து முருகனாக அவதரித்தார் என்பதாக புராணக் கதை உள்ளது. சனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் சொல்லப்பட்டு உள்ளதாம்.
🙏
1