
Let's talk with றாம்
February 15, 2025 at 04:18 AM
இரண்டாம் பருவம் குறித்து நண்பர் Mohammed Ibrahim எழுதி இருக்கிறார். தனதொரு நாளைத் தொடங்குவதற்காக வேண்டி, ஓர் எழுத்தாளன் கோருவதெல்லாம் இது போன்ற தருணங்களைத்தான். பதிவை வாசிக்க வாசிக்க இன்பம் பெருக்கெடுக்கிறது. இரண்டாம் பருவம் அதிகம் வரவேற்பு பெற்ற போதும் (வந்த புதுசிலும், இன்றும் //அந்த நூலை வாசித்துவிட்டு கருத்துரைப்பவர்கள் அநேகம்//) அவை யாவும் பதிவு செய்யப்படாதவை; எழுதுகிறேன் என்று தாங்களே முன் வந்து சொன்னவர்கள்கூட எழுதவில்லையே என்ற வருத்தம் எனக்குண்டு.
**
சட்டை வண்ண யானைகள் அச்சில் இருந்த தருணம் இப்ராஹிம் இரண்டாம் பருவத்தை வாங்கி வந்து கையொப்பம் இட்டுத் தாருங்கள் என்றார். இப்ராஹிம் அருமையான வாசகர். இன்னாரைப் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுக்குள் இன்னும் சிக்கிக் கொள்ளாத சுதந்திரமானவர். இரண்டாம் பருவம் அவருக்குப் பிடிக்கும் என்று ஊகம் பொய்க்கவிவ்லை. கண்காட்சி முடிந்து அடிக்கடி தொகுப்பின் கவிதைகள் குறித்து மெஸேஜ் போடுவார். ஒருநாள் மாலை அழைத்து தொகுப்பின் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். தொகுப்பை முழுமையாக உள்வாங்கிய அவருடைய பேச்சு இதமாக இருந்தது, ஆனால், எழுத்தானால் திரும்ப மீட்டுப்பார்க்க உதவும் என்று ரொம்பவும் விரும்பினேன். அது சிலநாட்கள் கழித்து நடந்தேறியுள்ளது. மிக்க அன்பும் நன்றியும் நண்பா ❤️ 🫂
- Rram Santhosh Vadarkkadu
**
இரண்டாம் பருவம் குறித்து நண்பர் இப்ராஹிமின் சஹிருதய வாசிப்பு அனுபவம் இதோ:
இரண்டாம் பருவம் - றாம் சந்தோஷ் வடார்க்காடு (Rram Santhosh Vadarkkadu)
பதிப்பகம் - எதிர் வெளியீடு
றாம் சந்தோஷ் எனக்கு ஃபேஸ்புக்கின் மூலமாகத்தான் அறிமுகமாகினார், நவம்பர் மாதத்தில் நான் வாசித்த புத்தகங்களில் தமிழவனின் ஒரு நாவலும் பெருந்தேவியின் ஒரு கட்டுரைத் தொகுப்பையும் வாசித்திருந்ததாக பதிவிட்டிருந்தேன், அதை பற்றிய அவரின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு அப்படியே துவங்கி உரையாடல் தான் ."அண்ணன்கள் கதை" எனற தொடர் கவிதையை வாசிக்க நேர்ந்தது. அதற்கு முன்பு நான் அப்படி ஒருசேர ஒருவரைப் பற்றி வாசித்ததில்லை, அந்தக் கவிதைகள் எனக்குள் பல உணர்வுகளை தராமல் இல்லை. அப்படியே அது நட்பாக உருமாறி நிற்கிறது.
நான் இணையத்தில் வாசித்த அவரின் பிற கவிதைகளுக்கும் இந்தப் புத்தகத்திலிருக்கும் கவிதைகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன என்று வாசிக்கும் பல கவிதைகள் உணர்த்தாமல் இல்லை. நான் இதுவரை கவிதைகளைக் குறைவாகவே வாசித்திருந்தாலும் எல்லாக் கவிதைகளும் ஓர் அமைதியை நோக்கி நகர்வதாகத்தான் அவற்றின் வடிவம் இருப்பதாக தோன்றுகிறது. கவிதைகள் தரும் கவித்துவ உணர்வு ஒரு புறம் இருந்தாலும் எல்லாம் ஒரே சுழற்சியில் இருப்பதாகவும் உணர்ந்தேன். அந்த வட்டத்திலிருந்து விலகிதான் றாம் இந்தக் கவிதைகளை எல்லாம் எழுதி இருக்கிறார் என்பது என்னுடைய அனுமானம். அதுதான் பலரின் அனுமானமாகவும் இருப்பதாக அவருடன் உரையாடும் போது அறிந்து கொண்டேன்.
அவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான இந்தக் கவிதைத் தொகுப்பை இரண்டாக பிரித்திருக்கிறார், "அதிகமும் நான்' கள்", "மீறியும் தீண்டு" ஆகிய தலைப்புகளில்.
அதிகமும் நான்' கள் என்ற தலைப்பின் கீழ் உள்ள கவிதைகளில் பெரும்பான்மையாக நான் என்ற சொல்லின் மேலுள்ள பல பார்வையின் கோணங்களை வைத்து கையாண்ட கவிதைகள் தான். நான் என்ற சொல்லுக்குள் இருக்கும் பல அர்த்தங்களாக உடல், அதிகாரம், சுயம், மனம், கூச்சம், அருவருப்பு என இவையில்லாத பலவற்றையும் வைத்து தனக்கே உண்டான பாணியில் வெவ்வேறான வடிவங்களில் கவிதையாக்கியிருக்கிறார். அவையாவும் 'நான்' என்ற ஒரு அதிகார அழிப்பை நோக்கித்தான் நகர்கிறதாக நான் பார்க்கிறேன், அதனால் இதைப் பின்-நவீனத்துவ கவிதைகளுக்குள்ளும் வரையறுக்கலாம் என்று தோன்றுகிறது.
நான் என்ற உடல் சார்ந்து பல கவிதைகள் வருகின்றன; அதில் உடல் உறுப்புகள் உதிர்கின்றன, வேறொன்றாக மாறுகிறது, உறுப்புகளற்ற காமம் நிகழ்கிறது இப்படி ஒரு புறமும், நானுக்குள் இருக்கும் மனமொன்றை மாற்றியமைத்துக் கொண்டு வேறொரு நானை உருவாக்கி புது வருடத்தை எதிர்கொள்வதும், நான் என்ற உடலிலிருந்து வெளிவரும் வியர்வை, சிறுநீர், ரத்தப் போக்கு என்பவை அருவருப்பான விடயங்கள் என்று பொதுவெளியில் கூறப்படுவதை எல்லாம் காதலும் காமும் எப்படி அனுபவிக்கிறது என்று வரும் சில கவிதைகள் முழுக்க முழக்க ஒரு புதிய அர்த்ததை தருவதோடு அப்படி இருக்கும் மனநிலையும் மாற்றி அமைக்கிறது.
பல காதல் கவிதைகள் இருக்கிறது. அதில் சுகாரா என்ற பெயரில் வரும் கதாபாத்திரத்தின் காதலை வெளி காண்பித்த விதங்கள் அவளின் தனித்துவத்தின் வெளிப்பாடாகவும், சர்ரியல் தன்மையிலும், அருவெறுப்பு உணர்வுகளிலும் இருந்தது. "என் காதல் கைப்பாவை" என்ற தலைப்பில் இருந்த கவிதையை நான் முதலில் வாசிக்கும் போது இரு காதலர்களின் பார்வையை வைத்துக் நகரும் கவிதை, அந்த கவிதையின் கடைசி வரியை வாசிக்கும்போது வாய் விட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை, நான் நினைத்து ஒன்றாகவும் அந்த கவிதை கூறியது வேறாகவும் இருந்தது தான் எனக்கு அதற்குள் இருக்கும் ஒரு பகடியை உணர்த்தியது. இப்படி சில கவிதைகளில் பகடியையும் கையாண்டு இருந்தார். "சன்னதம்" என்ற கவிதையில் ஒரு உறவின் sadism-masochism தன்மை அதிலிருந்தது போலவும் அதனின் நீட்சியாக அவர்கள் அடையும் இடம் உடல்களற்ற ஓர் அரூபநிலையில் காதல் கொள்வது போலவும் முடிகிறது. வாசிக்கும் போது சில இடங்களில் முகசுழிப்பு ஏற்பட்டாலும் அதுவும் காதலில் ஓர் அங்கம்தான் என்று தோன்றாமல் இல்லை. பல பரீட்சார்த்தமான கவிதைகளை வாசிக்கும் போது முதலில் மேலோட்டமான பார்வையோடும் மீள் வாசிக்கும்போது தமது உள்ளார்ந்த வேறொரு புதிய பார்வையும் தருபவையாகவும் இருந்தன.
"குலாபிகளாகும் வரை நீட்டி எழுதப்பட்ட நான்கள்" என்ற ஒரு நீள் கவிதையில் நான் என்ற தன்னிலையை வைத்துக் கொண்டு பல வெவ்வேறான வடிவங்களில் அந்தக் கவிதை விரிவடைந்துக் கொண்டே செல்கிறது. நான் என்ற சொல்லுக்குள் இருக்கும் பல பார்வைகளையும் பாலற்ற தன்மையில் எழுதப்பட்டிருப்பது பல புதிய அனுபவங்களைத் தந்தது, செல்ஃப் ஓடு உரையாடும் கவிதைகள் தான் அதிகம், ஆனால் முடிவில் அந்த செல்ஃப் என்ற ஒன்று இல்லாத நான் எப்படி இருக்கும் என ஒரு உறவோடு முடியும் போது குலாபிகளாக உருமாறுகிறது.
"'சார்' எனும் டஜன் விளிப்புகள்", சார் என்ற ஒரு சொல்லுக்குப் பின்னால் இருக்கும் அதிகாரம் (குறிப்பாக சொல் அதிகாரம்) என்ற ஒன்றை, அந்த அதிகாரத்தில் இருக்கும் நபரின் கீழுள்ள அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு வாழும் நபரின் பார்வையிலிருந்து அவரின் வலிகளை அந்த 'சார்' ரிடம் கூறுவதின் பார்வையை மட்டும் காண்பித்து அந்த அதிகாரத்தினால் நிகழும் அழிவை உணர்த்தியது. இவ்விரு கவிதைகளும் ஆழமான தாகத்தையும் தரக்கூடியதாக இருந்தன.
இந்த தொகுப்பின் அடுத்த பகுதியாக இருக்கும் "மீறியும் தீண்டு" என்ற பகுதியில் தலைப்புகள் இல்லாத பல கவிதைகள் தொடர்ந்து வருகின்றன, அவை யாவற்றையும் ஓர் நீள் கவிதைப் போலவும் வாசிக்கலாம் என்று ஒரு கணம் தோன்றியதில், மீண்டும் தொடர்ச்சியாக வாசித்தேன். எல்லாம் தீண்டல் பற்றியதாகத்தான் இருக்கின்றன.
அந்தத் தீண்டல்களைப் பக்கத்துப் பக்கம் எழுதித் தள்ளுகிறார், உடல்கள் கலைந்து பிரிகின்றன, பிரிந்த ஒவ்வொரு உறுப்புகள் ஒவ்வொன்றாக அதனதன் குணங்களுக்கேற்ப தீண்டலைத் துவங்கி முடியும் முதல் கவிதையானது, பின்னால் வரப்போகும் கவிதையின் துவக்கமாக இருக்கிறது. கனவிலிருந்து துவங்கி நிஜ உலகிற்குள் நுழைந்தும், கனவில் நானை இழந்து வெவ்வேறு வடிவங்களாக (உயிருள்ள, உயிரற்ற) உருமாறி அவளினுள் கரைந்து போய் துவங்கும் தீண்டல்களாக, பார்வையின் தாகம் தகிக்கும் தாபத்தின் தீண்டல், அத்தர் மணம் பூசிய உடலின் சுவாசத் தீண்டல், நித்தியமாகி முடிவிலா ஞானத்தீண்டல், கடற்கரைகளில் கரையாமல் இரு கைகளின் விரல்களின் தீண்டல், தொண்டையில் இறங்கும் எல்லாமுமான தீண்டல், தேகத்தின் தீண்டல், நாவின் தீண்டலால் மூளையை வியாபித்து மனதை ஆக்கிரமித்து மயிற்க் கற்றை ஆகும் வரை இந்தத் தீண்டல்கள் நீள்கின்றன. இப்படிப் பல தீண்டகளை ஒரு சேர வசிக்கும் போது அருமையான அனுபவத்தை சுகிக்காமல் இருக்க முடியவில்லை. இங்கு நான் கூறாத பல தீண்டல்களும் இந்தப் பகுதியில் மிகுதியாக உள்ளன.
காதலைக் காமத்தோடு இந்த அளவுக்கு வெளிபடுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்தபடியே இருந்தது. இப்படி இருக்கும் பல உறவுகளின் அழகை வாசிக்கும் போது வரும் உணர்வெழுச்சியோடு காமமும் நம்முள் அதிகரிக்காமல் இல்லை என்று பொய் எல்லாம் கூற முடியாது. பால்களற்ற உறவுகளும், பலர்களின் உறவுகளும் சில கவிதைகளில் இருந்தன; ஆனால் கவிதையில் அவையெல்லாம் சூசகமாகத்தான் இருந்தன. ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு காலியான இடம் இருந்தது, அந்தக் காலியான இடங்கள் அந்தத் தீண்டல்களின் நீளுதலை உணர்த்துகின்றனவோ என்றும் தோன்றியது.
இப்படி ஒரு புதிய முயற்சியை அருமையாக கையாண்டும் பல இடங்களில் கவித்துவ உணர்வும் குன்றாமல் இருந்ததுதான் இந்தத் தொகுப்பின் சிறப்பு. மேலும் பல புதிய கவிதைகளை எழுத றாமுக்கு வாழ்த்துகள்.
- முகமது இப்ராஹிம்
- 15.02.25
❤️
1