Let's talk with றாம்
Let's talk with றாம்
February 26, 2025 at 10:16 AM
காலை அண்ணன் வெய்யிலைப் பார்க்கப் போயிருந்தேன்; விகடன் அலுவலகம் அருகே ஒரு கூடத்தின் (அரசு நிறுவனம்தான் பெயர் நினைவு கூற முடியவில்லை???) வெளியே நிறைய சிற்பங்கள் இருந்தன; அவற்றின் மேல் படிந்திருந்த கல் தூசிகளைப் பார்த்தால் அவை அங்கே செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளவை என்றே தோன்றியது; எனினும் தகவலை வெய்யிலிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன். நிறைய துல்லியமான பெரிய மற்றும் குறுஞ்சிலைகள் அத்தனை அழகாக இருந்தன. அதில் நிறைய கடவுள்கள் இருந்தாலும், கீழே உள்ள கணபதி சிலை அதிகம் பிடித்திருந்தது. காரணம் ஏனைய சிலைகள் யாவும் சிற்பக்கலையின்படி அதிக வாளிப்பாக வடிக்கப்பட கோருபவை. எனவே ஒரே உடல் வாகு கொண்டவையாக இருந்தன. உதா. அங்கிருந்த சரஸ்வதியும் லட்சுமிதேவியும்; இச்சிற்பங்களில் தங்கள் கரங்களில் தாங்கிய பொருட்கள் போன்ற சிறு சிறு வேறுபாடுகளுடன் ஒரே அளவிலான இடை, உடல் வாகுடன் இருந்தது எனக்கு உறுத்தலாக இருந்தது. (ஆனால் சிலைகள் வடித்த விதத்தில் எந்தக் குறையும் இல்லை) ஆக, விநாயகர் சிலை ஏன் என்னை அதிகம் கவர்ந்தது!?. அடிப்படையில் விநாயகர் யானைத்தலையும் மனித உடலும் கலந்த அந்தக் கால சர்ரியல் வடிவம். யானை தலை இருக்க அதைத் தாங்கும் (சொல் வெளித் தவளைகளில் உள்ள என் கவிதை நினைவுக்கு வருகிறதா?) உடல் இருக்க வேண்டும் அல்லவா... யானையின் கொள்ளை அழகு அதன் பூத தேகம்தான்‌. அப்படி இந்த சிற்பத்தில் இருக்கிறார் கணபதி. [இன்றளவும் இந்திய கடவுள் வடிவங்களில் அதிகம் வித்தியாச வித்தியாசமாக வரையவும் சதுர்த்தி சந்தர்ப்பங்களில் அதிகம் வெவ்வேறு வடிவங்களில் வடிக்கப்படவும் செய்வது கணபதியைத்தான்; இது குறித்து கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது எழுதி பாதையில் விட்ட கட்டுரையை இந்த ஆண்டாவது முடிக்க வேண்டும்] கீழே உள்ள படங்களைப் பாருங்கள். எத்தனை அழகு எத்தனை யதார்த்த அணுக்கம் எத்தனை நுட்பம்... மேல் தொந்தியால் கீழே ஒளிந்திருக்கும் தொப்புளைப் பாருங்கள்; நானே தேடித்தான் படம் எடுத்தேன். மேலும் அந்த கால், கை விரங்களை, அவற்றின் நகங்களை 🤩🤩🤩 அழகு அழகு அழுகு.. அழகோ அழகு 😍 சிற்பிகளுக்கு எனது வணக்கங்கள். - சண்முக. விமல் குமார் 26.02.2025

Comments