
தமிழர் மருத்துவம்🍎
February 9, 2025 at 07:15 AM
https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p
தொல் தமிழர் கண்ட அறுவை மருத்துவம்
இன்றைய நவீன கால மருத்துவத்தில் -அறுவை சிகிச்சை என்பது தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகும். சாதாரண மருந்து, மாத்திரைக்குக் கட்டுப்படுத்த முடியாத பல்வேறு நோய்களுக்கும் இன்று அறுவை சிகிச்சையே பரிந்துரை செய்யப்படுகிறது.
இவ்வாறு இன்றைய நவீன மருத்துவத்தின் தவிர்க்க மிடியாத அங்கமாக உள்ள அறுவை மருத்துவமானது நமது தமிழ் சித்தர்கள் உலகிற்கு தந்த ஒரு கொடை என்பதே உண்மை .
நமது தமிழ் சித்தர்கள் குளிகைகள், லேகியம், கியாழம், சூரணம், சாறு, குடிநீர், களி, நெய், பாகு, குழம்பு, பதங்கம், கட்டு, பற்று, ஒற்றடம், பூச்சு, வேது, புகை, தொக்கணம், ஊதல், கலிக்கம், களிம்பு போன்ற சாதாரண மருந்துகள் முதல் களங்கு, செயநீர், சுண்ணம், பஸ்பம், குரு மருந்து, சத்து, பதங்கம், மெழுகு, தீநீர் போன்ற உயர்ரக மருந்துகளின் செய்முறைகள்வரை நமக்குத் தந்தருளியுள்ளனர்.
அதோடு மட்டுமில்லாது அவர்கள் கீறல், அட்டை விடல், சலாகை, அறுவை, பீச்சு, குருதி வாங்கல் போன்ற அறுவை சிகிச்சை தொடர்புடைய முறைகளையும் கொடுத்துச் சென்றுள்ளனர்.
இக்காலத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளில்அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. ஆனால் தொல் தமிழர்கள் செய்த அறுவை சிகிச்சை அறைகள் வேப்பிலை, சாம்பிராணி, வெண்கடுகு ஆகிய இலைகளைப் போட்டு, புகைமூட்டம் உண்டாக்கிய பிறகு, அறுவை சிகிச்சையில் ஈடுபடுவார்கள்.என்று தெரிகிறது .
சித்தர்களின் நூல்களில் அகத்தியர் இரண வைத்தியம், இரண வைத்திய சிந்தாமணி, தேரையர் கரிசல், அகத்தியர் நயனவிதி, நாகமுனிவர் நயன விதி, சத்திராயுத விதி எனும் நூல்கள் தரும் குறிப்புகள்மூலம் நமது தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் அறுவை முறைகளும், அத்தகைய சிகிச்சைக்கான கருவிகளும் இருந்ததை அறியலாம்.
தேரையர் எனும் பெயரே தலையில் மண்டை ஓட்டை திறந்து அதில் இருந்த தேரையை அவர் எடுத்தாலே வந்ததாகக் கூறுவார்கள் .
கதுவாப் போகிய துதிவாய் எஃகமொடுபஞ்சியும் களையாப் புண்ணர்.” இது (புறம் - 353)கூறும் செய்தி
போரில் ஏற்பட்ட புண்களின் மேல் பஞ்சு இடுமுறை பண்டைக்காலத் தமிழர்கள் உலகிற்குக் கற்றுக்கொடுத்த சிறந்த முறையாகும்.
உலகில் முதன் முதல் பஞ்சு கண்டுபிடிக்கப் பட்டதே தமிழகத்து மண்ணில்தான் என்று பி.டி. சீனிவாச அய்யங்கார் கூறியுள்ள கருத்தும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
எனவே காயப்பட்ட புண்ணைப் பருத்திப் பஞ்சால் துடைத்து, புண் மேல் கட்டுப்போடும் பழக்கத்தை உலகிலேயே முதன் முதலாகப் பயன் படுத்த ஆரம்பித்த இனம் தமிழினம் தான்.
இப் பழக்கமே உலகெங்கிலும் தொடர்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இவைகளை சொல்லிக்கொள்ளத்தான் நாம் மிகவும் தயக்கம் கொள்கிறோம் .சொன்னால் செவி சாய்ப்பவர்களும் அதிகம் இல்லை !
சீவக சிந்தாமணி விரிவான செய்திகளைத் தருவனவாக அமைந்து அறுவை முறை மருத்துவத்தை விவரிக்கிறது.
“நெய் க்கிழி வைக்கப்பட்டார்
நெய்ப்பத்தல் கிடத்தப்பட்டார்
புக்குளி யெஃக நாடி
யிரும்பினாற் போழப் பட்டார்.
முதுமரப் பொந்து போல
முழுமெய்யும் புண்க ளுற்றார்க்கு
இது மருந் தென்ன நல்லார்
இழுது சேர் கவளம் வைத்து
பதுமுகன், பரவை மார்பில்
நெய்க் கிழிப் பயிலச் சேர்த்தி
நுதிமயிர்த் துகிற்குப் பாயம்
புகுகென நூக்கி னானே.”(சீவகசிந்தாமணி: 818-819)”
மரப்பொந்து போல் உடல் முழுவதும் ஏற்பட்ட புண்களுக்கு ஏற்ற மருந்து எது? என்பதை அறிந்த மருத்துவர், அம்மருந்தை வாயில் கவளத்தை வைப்பது போல் வைப்பர்; நெய்யில் தோய்ந்த துணியைப் புண்ணின் மேல் வைப்பர்; புண் பட்டாரை நெய்ப்பத்தலில் கிடத்துவர்; புண்ணுக்குள் புகுந்த இரும்புத் துண்டுகளை அறுவை முறையால் அறுத்தெடுப்பர். பின்னர் எலி மயிரால் நெய்யப் பட்ட ஆடையால் போர்த்தி காற்றுப் புகாதவாறு பாதுகாப்பவர் என்று உரைப்பதினால் புண்பட்டார்க்குச் செய்யப்படுகின்ற மருத்துவ முறைகள் தெளிவாக்கப்பட்டுள்ளன.
நோயாளிக்கு அணியவும், போர்த்தவும் செய் கின்ற ஆடை எப்போதும் எல்லாரும் அணிகின்ற ஆடையிலிருந்து மாறுபட்டதாகத் தெரிகிறது. அவ்வாடை எலி மயிரினால் நெய்யப்பட்ட தென்பர்.
எலியின் மயிரினால் நெய்யப்பட்ட ஆடையால் ஆகிய சட்டை, போர்வை மிகுந்த வெப்பத்தை உடையது. குளிரை நீக்கக் கூடியது. அதனுள் காற்றுப்புகாது; மென்மையுடையது; பனிக்காலத்தில் அணிவதற்குரியது; கிடைத்தற் கரியது என்றும் குறிப்பிடப்படுகிறது. (சிந்தா - 1969 - செய் 2680 - 2686)
அக்காலத்தில் அறுவை மருத்துவத்தில் சிறப்புற்று இருந்தார்களென்பதை உடலில் கட்டி முதலிய தோன்றின்; அறுக்க வேண்டியவற்றை அறுத்தும், கெட்ட குருதியை வெளிப்படுத்தியும், சுட வேண்டியவற்றைச் சுட்டும்; உண்டாகும் புண்ணுக்கு மருந்திட்டுத் தீர்க்கும் முறை உண்டென்பதை,
“உடலிடைத் தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் மாற்றிசுடலுறச் சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்.”(146 வை.மு.கோ. பதிப்பு)
என்ற கம்பராமாயணம் யுத்த காண்டம் கும்ப கர்ணன் வதைப் படலச் செய்யுளால் அறியலாம்.
ஆக, கம்பராமாயண காலமாகிய 12-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே சீழ்க்கட்டிக்கான அறுவை மருத்துவ முறை இன்றைய மருத்துவத்தின் படி நிலை வளர்ச்சியை நடைமுறையில் எட்டியிருந்த பான்மை இங்கே எண்ணிப் பார்க்கத் தகுவதாகும்.
கம்பருக்கு முன் குலசேகர ஆழ்வார் பாடலிலும்,
“வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன் பால்மாளாத காதல் நோயாளன் போல்.” (குலசேகர ஆழ்வார் - நாலாயிரம் - 691/2)
என்று இதே அறுவை மருத்துவக் கருத்தை எடுத்துக் கூறப்பட்டிருத்தல், இதனை மேலும் வலியுறுத்தும்.
இவ்விரு பாடல்களிலும் உருவான கட்டி போன்ற ஒன்றை அறுத்து நீக்கிய பின் அதன் ஆழ்பாகத்தில் தேங்கியிருந்த கெட்ட இரத்தத் தையும் வெளியேற்றி, உடனுக்குடன் பெருமளவில் நச்சு நுண்மங்கள் சேராவண்ணம் அதிக வெம்மை யுடன் சுட்டு, பின்னர் அறுவைப் புண் தைக்கப் பட்டு, குணமாக்கும் மருந்தைப் பயன்படுத்தி உள்ளனர்.
"கருவியிட்டாற்றுவார் - புண் வைத்துமூடார் பொதிந்து.” (நீதிநெறி: 55)
ஒரு புண்ணையும் அப்படியே இருந்து சீழ் பிடித்துப் போகும்படி மூடி வைத்தல் இல்லை. கருவியைக் கொண்டு அறுத்து, அதன்பின் அவ் வெட்டையும் ஆற்றிவிடுவர் என்பது குமரகுருபரர், நீதிநெறி விளக்கம்.
உடலில் பதிந்துள்ள ஆயுதத் துண்டுகளைக் காந்தத்தால் வெளிப்படுத்தலை
,“அயில் வேல்... நீங்கலது இப்பொழுதகன்றதுகாந்தமாம் மணியின்று வாங்க.”(கம்பராமாயணம்: மீட்சிப்படலம் தசரதன் இராமனிடம் கூறியது).
"மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி
நெடுவசி பரந்த ..........."
(பதிற்றுபத்து - 42)
எனும் அடியால் காயம்பட்ட இடத்தில் ஊசி கொண்டு தைப்பது என்பது, நீர் நிறைந்த தடாகத்தில் வாழும் மீனானது நீரிலிருந்து துள்ளி எழுந்து மீண்டும் நீருக்குள் செல்லும் நிகழ்வுக்கு ஒப்பாக உள்ளது எனப் புலவர் உவமைபட கூறுகிறார். இந்த ஊசியானது நெட்டை எனவும் பெயர்படும்.
போரில் காயம்பட்ட வீரர்களின் உடலில் பாய்ந்த ஆயுத துண்டுகளை வலிமையான காந்தங்களை கொண்டு அகற்றி செய்யும் சிகிச்சை முறையை,
"அயில்வேல் .......... நீங்கலது இப்பொழுதகன்றது
.......... காந்தமாம் மணியின்று வாங்க"
என்ற வரிகளால் அறியலாம்.
இவாறு அறுவை சிகிச்சையில் பண்டைய தமிழ் மருத்துவர்கள் சிரிப்புற விளங்கியமை சான்றுகள் மூலம் தெரிய வருகிறது .
தொல்காப்பியத்திலும் கூறுகள் விரிக்காகக் கூறப்பட்டிருக்கிறது .
நன்றி திரு. அண்ணாமலை சுகுமாரன்