
HAZRATH ABDUL WAHHAB BAQAVI
February 16, 2025 at 03:25 PM
Burdha Shareef Day - Hazrath Speaks
என் அறிவுரை படி வாழ ஆரம்பித்துவிட்டால் இந்த மனநிலைக்கு நீங்கள் வந்துவிட்டீர்களென்றால் உங்களுக்குகுள் சில கோட்பாடுகள் தனக்குத்தானாகவே உருவாகும். இப்படி ஒவ்வொன்றுக்கும் எதற்கு உள்ளது என்று யாரும் சொல்லாமலே புரிய ஆரம்பித்துவிடும்.
உங்களின் குணாதிசயங்களை சீர்திருத்தம் செய்தால் நற்குணங்களை கொண்டு வந்தால் அனைத்திலும் ஈடேற்றம் பெற முடியும்?
''நபியே! நீர் உயர்ந்த குணங்களைப் பெற்றிருக்கிறீர்! என்று இறைவன் அண்ணலவர்களைப் புகழ்கிறான்; அவன் அவர்களுக்கு அளித்திருக்கும் அருட்கொடையை வெளி யிடுகிறான்.
நபியவர்களின் நற்குணங்களை, "திருமறை!" என்று அன்னை ஆயிஷா நாயகி அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒரு சமயம் திரு நபியவர்களிடம் ஒருவர் நற்குணங்களைப் பற்றிக் கேட்டார்.
நபியவர்கள் விடையளித்தார்கள்:
''மன்னிக்கும் மனப்பான்மையை உண்டாக்கிக் கொள். நன்மையானவற்றைச் செய்யத் தூண்டு. மூடர்களின் நிந்தனையைப் பொருட்படுத்தாதே!...உன் தொடர்பைத் துண்டித்தவனுடன் இணைந்து நட. உனக்கு உதவி செய்யாதவனுக்கு நீ உதவி செய். உனக்குத் தீங்கிழைத் தவனை நீ மன்னித்து விடு. உயர்ந்த பண்புகளைப் பாரில் பரப்பவே நான் அனுப்பப் பட்டிருக்கிறேன்."
மற்றொரு சமயம் அண்ணலவர்களுக்கு எதிரில் வந்து நின்றார் ஒரு நண்பர்.
"மார்க்கம் என்றால் என்ன?"
''நற்குணம்" என்று நபியவர்கள் பதிலிறுத்தார்கள்.
வந்தவர் திருப்தியடையவில்லை. நபியவர்களுக்கு வலப் பக்கம் வந்து நின்றார் அவர்.
''மார்க்கம், மார்க்கம் என்று எல்லோரும் சொல்லிக் கொடுக்கிறார்களே, அப்படி என்றால் என்ன?" என்றார்.
'நற்குணம்!" சட்டென்று வந்தது அதே விடை.
அந்த நண்பர் இதைப் புரிந்து கொள்ளவில்லையோ என்னவோ! முகத்தில் கேள்விக் குறியோடு இடப்பக்கம்வந்து நின்றார்.
'நபியவர்களே! மார்க்கம் என்றால் என்ன? எனக்குப் புரியும்படிக் கூறுங்களேன்!' என்று பணிவுடன் வினவினார்.
அண்ணலவர்கள் ஏறிட்டுப் பார்த்தார்கள். 'உமக்குப் புரியவில்லையா?'
'கோபப்படாமல் இருப்பது தான் மார்க்கம் என்று நீர் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா?'
இனிமேல் ஏன் கேள்விபோடப் போகிறார்? பேசாமல் அவ்விடத்தை விட்டகன்றார்.
ஒரு சமயம் நபியவர்கள் உபதேசம் புரிந்தார்கள்:
''மக்களே! இறைவனுக்கு அஞ்சுங்கள். எங்கேயும் எப்போதும் அவனுக்கு-அவனுடைய ஒப்பற்ற ஆற்றலுக்கு அஞ்சுங்கள். தீமையை நீங்கள் செய்து விட்டால் உடனே நன்மையைச் செய்யுங்கள். அந்த நன்மை, தீமையை அழிக்கட்டும். மக்களிடம் பண்புடன் பழகுங்கள். நற்குணங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்..."
மற்றொரு சமயம், ''உயர்ந்த காரியம் எது?" என்று நபியவர்கள் வினவப்பட்டார்கள். அதற்கு, ''நற்குணம் என்று பதிலிறுத்தார்கள்.
நபியவர்களிடம் ஒரு பெண்மணியைப் பற்றிப் புகார் செய்யப்பட்டது. "நபியவர்களே! அவள் நல்ல முறையில் வணங்குகிறாள்; அதிகமாக வணங்குகிறாள். பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் இறைவணக்கம் புரிகிறாள். ஆனால் அவளது நாவு துடுக்கானது. அக்கம் பக்கத்திலுள்ளவர்களையெல்லாம் அவள் தன் நாவினால் துன்புறுத்துகிறாள்..."
''அப்படியானால் அவளுடைய நன்மைகளால் எத்தகைய பயனுமில்லை. பிறர் மனத்தைப் புண்படுத்தும் மனப்பான்மை கொண்ட அவள் சுவன வாழ்க்கைக்கு அருகதையற்றவள்!"
- இன்ஷா அல்லாஹ் தொடரும்....
✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ II நாகூர் ஷரீஃப்
❤️
👍
8