
Visaranai Thadayam🎥📡📡🎥📡📡
February 26, 2025 at 05:51 PM
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும்
நலத்திட்ட உதவிகளின் கீழ் 40 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவினை
45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (26.2.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா 1 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க
5 நூலாசிரியர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாடகக் கலைஞர்களுக்கு தலா 1.50 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாட்டிய நாடகங்களை தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாட்டியக் கலைஞர்களுக்கு தலா 1.50 இலட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் 20 மறைந்த கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசால் 1955-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கமானது, இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தழிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கலை பண்பாட்டுத் துறையின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்குதல், நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழகப் பாரம்பரிய கிராமியக் கலைகளை வெளி மாநிலங்களிலும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல், தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு அளிக்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், நலிந்த நிலையிலுள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழி வழங்குதல்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் ஆச்சாள்புரம் திரு. எஸ். சின்னதம்பி, ஆக்காட்டி திரு. ஆறுமுகம், நெல்லை திரு. சுந்தரராஜன், மதுரை
திரு. ஜி.எஸ். மணி, திரு.ஏ.என். பாக்கியலட்சுமி, திருமதி சீதாலட்சுமி (எ) ஜி.எம். சித்திரைசெல்வி, திரு. வி. நாகு, திருமதி பி. சீதாலட்சுமி, திருமதி ஆர்.எஸ். ஜெயலதா, திரு. எஸ். ஆண்ட்ரூஸ் ஆகியோருக்கு பொற்கிழித் தொகையாக தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க
5 நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்குதல்
தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க முனைவர் சண்முக செல்வகணபதி, முனைவர் ப. ரங்கராஜ், திரு. வளப்பக்குடி வீரசங்கர், முனைவர் இரா. சீனிவாசன், திரு. செ. நடராஜன் ஆகிய 5 நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 2 நூலாசிரியர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
தமிழில் புதிய நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய நிதியுதவி வழங்குதல்
தமிழில் புதிய நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்திட 5 நாடகக் கலைஞர்களுக்கும், 5 நாட்டியக் கலைஞர்களுக்கும் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக
4 கலைஞர்களுக்கு தலா 1.50 இலட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
மறைந்த கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பு நிதியுதவி வழங்குதல்
மறைந்த 20 கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 2 மரபுரிமையினருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்கான காசோலைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ் மொத்தம் 40 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவினை 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர்
திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., கலை பண்பாட்டுத் துறை இயக்குநர்
திருமதி கவிதா ராமு, இ.ஆ.ப., தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர்
திரு. வாகை சந்திரசேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் திருமதி விஜயா தாயன்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.