Visaranai Thadayam🎥📡📡🎥📡📡
Visaranai Thadayam🎥📡📡🎥📡📡
February 27, 2025 at 12:25 PM
திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான அரசு மானியம் உயர்வு! கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய தேவஸ்தான திருக்கோயில்களுக்கு ரூ. 27 கோடிக்கான காசோலைகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.2.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் 13 கோடி ரூபாய்க்கான காசோலையை சுசீந்திரம் – கன்னியாகுமரி தேவஸ்தான திருக்கோயில்கள் அறங்காவலர் குழுத் தலைவர் திரு. கோ.இராமகிருஷ்ணன் அவர்களிடமும், புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தின்கீழ் உள்ள 225 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் 8 கோடி ரூபாய்க்கான காசோலையை புதுக்கோட்டை மாவட்ட திருக்கோயில்களின் தக்கார்/உதவி ஆணையர் திரு. வே.சுரேஷ் அவர்களிடமும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிருவாகத்திலுள்ள 88 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் 6 கோடி ரூபாய்க்கான காசோலையை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் திரு. சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே அவர்களிடமும், என மொத்தம் 27 கோடி ரூபாய்க்கான காசோலைகளை கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக உயர்த்தப்பட்ட அரசு மானியமாக வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், மலைத் திருக்கோயில்கள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைத்தல், புதிய கல்வி நிறுவனங்களை தொடங்குதல், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம். துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக உயர்த்தப்பட்ட அரசு மானியம் வழங்குதல் அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத 490 திருக்கோயில்கள், புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 225 திருக்கோயில்கள் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 88 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக அரசால் ஆண்டுதோறும் மானியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2021 - 2022 ஆம் நிதியாண்டில் கன்னியாகுமரி தேவஸ்தான திருக்கோயில்களுக்கான அரசு மானியம் 3 கோடி ரூபாயிலிருந்து 6 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களுக்கான அரசு மானியம் 1 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2023 - 2024 ஆம் நிதியாண்டில் கன்னியாகுமரி தேவஸ்தான திருக்கோயில்களுக்கான அரசு மானியம் 6 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களுக்கான அரசு மானியம் 3 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு அதற்கான காசோலைகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ஏற்கனவே வழங்கப்பட்டன. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 திருக்கோயில்களில் பெரும்பாலும் குறைந்த வருவாய் மட்டுமே கிடைக்கப் பெறுவதால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இத்திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவினங்களுகாக அரசு மானியம் வழங்கப்படாத நிலையில், இந்த அரசு பொறுப்பேற்றபின், முதல்முறையாக 2022 - 23 ஆம் நிதியாண்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு மானியமாக 3 கோடி ரூபாய்க்கான காசோலையை 4.02.2023 அன்று வழங்கினார். 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, தற்போது தேவஸ்தான திருக்கோயில்கள் நிர்வாகம் மற்றும் பராமரிப்புகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை கன்னியாகுமரி தேவஸ்தானத்திற்கு 8 கோடி ரூபாயிலிருந்து 13 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை தேவஸ்தானத்திற்கு 5 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாகவும் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு 3 கோடி ரூபாயிலிருந்து 6 கோடி ரூபாயாகவும் உயர்த்தி, அதற்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களின் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., திருமதி ந.திருமகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments