
N. Chokkan
February 1, 2025 at 05:26 PM
இன்று ஒரு கடையிலிருந்து வெளியில் வரும்போது அந்த முதியவரைப் பார்த்தேன். அவரால் சரியாக நடக்கமுடியவில்லை. சற்றுத் தடுமாறினார், பக்கத்திலிருந்த கம்பியைப் பிடித்துக்கொண்டார், சிறிது ஓய்வெடுத்தார், பின்னர் மீண்டும் இரண்டு தப்படிகள் நடந்தார், மறுபடி நின்று பெருமூச்சு விட்டார்.
நான் அவருக்கு உதவக் கை நீட்டினேன். புன்னகையுடன் மறுத்துவிட்டார், 'என் பையன் வந்துடுவான். ஆட்டோ பிடிக்கப் போயிருக்கான்' என்றார்.
'பரவாயில்லைம்மா. இங்க நிறையக் கல்லெல்லாம் இருக்கு. கால் தடுமாறிடும். என் கையைப் பிடிச்சுக்கோங்க' என்றேன்.
'இல்லை, நானே நடப்பேன்' என்றார் அவர். புன்னகை மாறவில்லை. இரண்டு தப்படிகள் நடந்தார். நானும் அவருக்குப் பாதுகாவல்போல் பின்னால் நடந்தேன்.
மெல்ல மெல்ல அவர் முன்னேறிச் சாலைக்கு வந்துவிட்டார். சரியாக அதே நேரத்தில் அங்கு ஓர் ஆட்டோரிக்ஷா வந்து நின்றது. அதிலிருந்து அவருடைய மகன் இறங்கினான், 'ஏம்மா, உங்களை அங்க சேர்ல உட்கார்ந்திருக்கத்தானே சொன்னேன்?' என்று உரிமையுடன் கண்டித்தபடி அவரைப் பொறுமையாக ஆட்டோவில் ஏற்றி அமரவைத்தான், என்னைப் பார்த்து, 'ரொம்ப நன்றி சார்' என்றான்.
'எனக்கெதுக்குங்க நன்றி? நான் எதுவும் செய்யலை. அவங்களேதான் நடந்து வந்தாங்க' என்றேன்.
'இருந்தாலும் நீங்க பின்னாடி நின்னது அவங்களுக்கு ஒரு தெம்பா இருந்திருக்கும்' என்றபடி ஆட்டோவில் ஏறிக்கொண்டான் அவன்.
உண்மையில் அந்தப் பெண்மணிக்கு அப்படி எந்தத் தெம்பும் தேவைப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன். கிடைத்த சின்னஞ்சிறிய வாய்ப்பில் 'இப்போதும் நான் சொந்தக் காலில்தான் நடக்கிறேன்' என்று தனக்குத் தானே நிரூபித்துக்கொள்கிற அவருடைய விருப்பம் நமக்குத்தான் தெம்பைக் கொடுக்கிறது.
❤️
👍
30