
N. Chokkan
1.0K subscribers
About N. Chokkan
From the desk of N.Chokkan என். சொக்கன் (Tamil, English Writer). Articles, Stories, Videos, Books, Useful Links, Book Deals, Tips, Hacks and more. As an Amazon Associate, I earn from qualifying purchases.
Similar Channels
Swipe to see more
Posts

'கண்ணின் கடைப்பார்வை Peer Groups காட்டிவிட்டால் மண்ணில் மாந்தர்க்கு மா மலையும் ஓர் கடுகாம்' என்கிறார் Sam Altman https://www.youtube.com/clip/UgkxucrdwTQDvJZ_fWq1laSJdedigardqpkb

இன்றைய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதழியலில் செயற்கை நுண்ணறிவு உண்டாக்கவிருக்கும் தாக்கங்களைப்பற்றியும் அதற்கு இதழாளர்கள் எப்படித் தயாராவது என்றும் விரிவாகப் பேசினேன். செயற்கை நுண்ணறிவைப்பற்றிய ஓர் எளிய அறிமுகத்தைக் கொடுத்து, அதில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவற்றைச் சிக்கலில்லாத மொழியில், புரியும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்க முயன்றேன். உரை நல்லவிதமாக அமைந்தது என்பதை நிகழ்ச்சிக்குப்பின் பார்வையாளர்கள் தெரிவித்த உடனடிக் கருத்துகளிலிருந்து புரிந்துகொண்டேன். குறிப்பாக, நடுத்தர வயதைத் தாண்டிய பலர் இதுபற்றித் தங்களுக்கு இருந்த அச்சங்களை இந்த உரை துடைத்துவிட்டது என்றும், ஒரு தெளிவான செயற்திட்டத்தைக் கொடுத்திருக்கிறது என்றும் நெகிழ்வோடு சொன்னார்கள். மிக்க மகிழ்ச்சி. இந்த உரையின் முழுமையான வீடியோப் பதிவு (சுமார் 59 நிமிடங்கள்) Jairigi Views யூட்யூப் சானலில் வெளியாகியிருக்கிறது. அதற்கான இணைப்பை முதல் கமெண்ட்டில் கொடுத்துள்ளேன். பாருங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள். நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய நண்பர் Muthumani Nannan அவர்களுக்கு மிக்க நன்றி. ஒளிப்பதிவு: நண்பர் Ashok Sai Ramana Thamburaj

சரியாகச் சமைத்தால் சேமியா உப்புமா உண்ணுந்தரத்தில்தான் உள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால், அது வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதைப்போன்றதுதான். கூரான வாளோ வேலோ இருக்கும் இடத்தில் வல்லவன் ஏன் புல்லை நாடப்போகிறான்?

பெருநிறுவனங்களில் நாம் ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துப் பேசும்போது, 'இதே நேரத்தில் இதைவிடச் சிறந்த தாக்கத்தை உண்டாக்கக்கூடிய எதையாவது உங்களால் செய்யமுடியுமா?' என்று கேட்பார்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தக் கேள்வி சற்று எதிர்மறையாகத் தோன்றும். அவர்கள் நம்முடைய ஊக்கத்தில் வெந்நீர் வார்ப்பதுபோல் எரிச்சலாக வரும். ஆனால் உண்மையில் அவர்களுடைய நோக்கம் நம் முன்னேற்றத்தைத் தடுப்பது இல்லை, நாம் சரியான திசையில்தான் நடக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவதுதான். ஏனெனில், நம்மிடம் உள்ள வளங்கள் (நேரம், பணம், ஆற்றல் போன்றவை) வரம்புக்குட்பட்டவை. அவற்றைச் சரியானவற்றில் செலவிடவேண்டும். தவறான வழியில் நெடுந்தொலைவு சென்றுவிட்டுத் திரும்புவது பலமடங்கு இழப்பாகிவிடும். அதற்குப் பதிலாக, எந்த ஒரு வழியிலும் நுழைவதற்குமுன்பாகவே இதைச் சிந்தித்துவிட்டால் நம்முடைய வளங்களைச் சரியானபடி பயன்படுத்தலாம். அதனால், பிறர் கேட்பதற்குமுன்னால் நம்மை நாமே பலமுறை அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம்: நான் என் வளங்களைச் சரியாகத்தான் செலவிடுகிறேனா? இந்தக் குறிப்பிட்ட வேலையைச் செய்கிற நேரத்தில் இதைவிடச் சிறந்த தாக்கம் உள்ள வேறு எதையாவது நான் செய்திருக்கலாமா? அதற்காக எல்லா நேரமும் வேலை, வேலை என்று அவ்வை சண்முகியைப்போல் ஓடவேண்டும் என்று பொருள் இல்லை. இந்தக் கேள்வி மனமகிழ்வு/பொழுதுபோக்குச் செயல்பாடுகளுக்கும் பொருந்தும். அவையும் சரியான கலவையில் அமைந்தால் நம் வாழ்வில் மிக நல்ல தாக்கத்தை உண்டாக்கக்கூடியவைதான்.

இன்று ஒரு கடையிலிருந்து வெளியில் வரும்போது அந்த முதியவரைப் பார்த்தேன். அவரால் சரியாக நடக்கமுடியவில்லை. சற்றுத் தடுமாறினார், பக்கத்திலிருந்த கம்பியைப் பிடித்துக்கொண்டார், சிறிது ஓய்வெடுத்தார், பின்னர் மீண்டும் இரண்டு தப்படிகள் நடந்தார், மறுபடி நின்று பெருமூச்சு விட்டார். நான் அவருக்கு உதவக் கை நீட்டினேன். புன்னகையுடன் மறுத்துவிட்டார், 'என் பையன் வந்துடுவான். ஆட்டோ பிடிக்கப் போயிருக்கான்' என்றார். 'பரவாயில்லைம்மா. இங்க நிறையக் கல்லெல்லாம் இருக்கு. கால் தடுமாறிடும். என் கையைப் பிடிச்சுக்கோங்க' என்றேன். 'இல்லை, நானே நடப்பேன்' என்றார் அவர். புன்னகை மாறவில்லை. இரண்டு தப்படிகள் நடந்தார். நானும் அவருக்குப் பாதுகாவல்போல் பின்னால் நடந்தேன். மெல்ல மெல்ல அவர் முன்னேறிச் சாலைக்கு வந்துவிட்டார். சரியாக அதே நேரத்தில் அங்கு ஓர் ஆட்டோரிக்ஷா வந்து நின்றது. அதிலிருந்து அவருடைய மகன் இறங்கினான், 'ஏம்மா, உங்களை அங்க சேர்ல உட்கார்ந்திருக்கத்தானே சொன்னேன்?' என்று உரிமையுடன் கண்டித்தபடி அவரைப் பொறுமையாக ஆட்டோவில் ஏற்றி அமரவைத்தான், என்னைப் பார்த்து, 'ரொம்ப நன்றி சார்' என்றான். 'எனக்கெதுக்குங்க நன்றி? நான் எதுவும் செய்யலை. அவங்களேதான் நடந்து வந்தாங்க' என்றேன். 'இருந்தாலும் நீங்க பின்னாடி நின்னது அவங்களுக்கு ஒரு தெம்பா இருந்திருக்கும்' என்றபடி ஆட்டோவில் ஏறிக்கொண்டான் அவன். உண்மையில் அந்தப் பெண்மணிக்கு அப்படி எந்தத் தெம்பும் தேவைப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன். கிடைத்த சின்னஞ்சிறிய வாய்ப்பில் 'இப்போதும் நான் சொந்தக் காலில்தான் நடக்கிறேன்' என்று தனக்குத் தானே நிரூபித்துக்கொள்கிற அவருடைய விருப்பம் நமக்குத்தான் தெம்பைக் கொடுக்கிறது.

நாளை பெங்களூரில் நடைபெறும் இந்த நிகழ்வில் செயற்கை நுண்ணறிவால் (AI) தமிழ் இதழியலில் ஏற்படவிருக்கும் விளைவுகளைப்பற்றியும் அதை இதழாளர்கள் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுபற்றியும் உரையாற்றவுள்ளேன். வாய்ப்புள்ளவர்கள் வருக.