N. Chokkan
N. Chokkan
February 4, 2025 at 05:52 AM
பெருநிறுவனங்களில் நாம் ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துப் பேசும்போது, 'இதே நேரத்தில் இதைவிடச் சிறந்த தாக்கத்தை உண்டாக்கக்கூடிய எதையாவது உங்களால் செய்யமுடியுமா?' என்று கேட்பார்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தக் கேள்வி சற்று எதிர்மறையாகத் தோன்றும். அவர்கள் நம்முடைய ஊக்கத்தில் வெந்நீர் வார்ப்பதுபோல் எரிச்சலாக வரும். ஆனால் உண்மையில் அவர்களுடைய நோக்கம் நம் முன்னேற்றத்தைத் தடுப்பது இல்லை, நாம் சரியான திசையில்தான் நடக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவதுதான். ஏனெனில், நம்மிடம் உள்ள வளங்கள் (நேரம், பணம், ஆற்றல் போன்றவை) வரம்புக்குட்பட்டவை. அவற்றைச் சரியானவற்றில் செலவிடவேண்டும். தவறான வழியில் நெடுந்தொலைவு சென்றுவிட்டுத் திரும்புவது பலமடங்கு இழப்பாகிவிடும். அதற்குப் பதிலாக, எந்த ஒரு வழியிலும் நுழைவதற்குமுன்பாகவே இதைச் சிந்தித்துவிட்டால் நம்முடைய வளங்களைச் சரியானபடி பயன்படுத்தலாம். அதனால், பிறர் கேட்பதற்குமுன்னால் நம்மை நாமே பலமுறை அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம்: நான் என் வளங்களைச் சரியாகத்தான் செலவிடுகிறேனா? இந்தக் குறிப்பிட்ட வேலையைச் செய்கிற நேரத்தில் இதைவிடச் சிறந்த தாக்கம் உள்ள வேறு எதையாவது நான் செய்திருக்கலாமா? அதற்காக எல்லா நேரமும் வேலை, வேலை என்று அவ்வை சண்முகியைப்போல் ஓடவேண்டும் என்று பொருள் இல்லை. இந்தக் கேள்வி மனமகிழ்வு/பொழுதுபோக்குச் செயல்பாடுகளுக்கும் பொருந்தும். அவையும் சரியான கலவையில் அமைந்தால் நம் வாழ்வில் மிக நல்ல தாக்கத்தை உண்டாக்கக்கூடியவைதான்.
👍 ❤️ 🙏 17

Comments