
Vethathiriya Gnanakkudil
February 24, 2025 at 01:42 AM
*⚛️ காந்த தத்துவம் ⚛️*
*8. இறையுணர்வால் அறநெறி தழைக்கும்* *_(நேற்றையத் தொடர்ச்சி)_*
அணுக்கள் நெருக்கத்திற்கேற்ப அவற்றின் இடைவெளியிலுள்ள காந்த ஆற்றலின் தன்மாற்றம் அதன் மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், இரண்டிடையே முன்னும் பின்னும் ஓடுதல் என்ற ஐவகைச் செயல்களால் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாவும் சீவன்களில் மேற்சொன்ன ஐவகைத் தன்மாற்றங்களையும் இன்ப துன்ப உணர்வுகளாகப் பெறும் மனமாகவும் செயலாகின்றது.
இந்த தன்மாற்ற அலைகள் வீச்சுகளால் அழுத்தம் பெறும் ஒவ்வொரு விண்துகளும், அவற்றின் கூட்டு இயக்கமான தோற்றங்களும் அதற்கேற்ற தன்மைகளைப் பெறுகின்றன. இந்தத் தன்மைகள்தான் துல்லியம் என்றும், குணம் என்றும் கூறுகிறோம். இதையே Precision in the Character என்று ஆங்கிலத்தில் வழங்குகிறோம். எந்த இயக்கமானாலும் அதன் தொடர் நீளமே காலமாகக் கருதப்படுகிறது. எனவே எந்த இயக்கமும் காலத்தால் அடையும் மாற்றங்கள் இயக்க ஒழுங்கு (Functional Order) ஆகும்.
எனவே இருப்பு நிலை தன்னுள் அடங்கிய விரிவாற்றலால் மலர்ந்தபோது அதில் அடங்கியுள்ள மற்றொரு தன்மை அறிவானது அந்தந்த நிலைமைக்கேற்ப இயக்க ஒழுங்காகச் செயல்படுகிறது. எனவே “விண்” எனும் நுண் துகளுக்குள் அதன் மூல நிலையான இருப்பையும், அதன் அறிவு நிலையான இயக்கச் சீர்மையும் ஒன்றாகக் காணலாம். இதனால் எல்லா தோற்றங்களுக்கும் மூல “அலகு” என்ற நுண்ணிய மூலக்கூறு விண் என்றும், அதற்குள் இருப்பு, விரைவு, அறிவு என்ற மூன்றையும் ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்க முடியாதபடி இணைப்பு ஆற்றலாகவும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
“விண்” ஐ விட பேரியக்க மண்டலத்தில் ஒரு பெரிய பொருள் (சுத்தவெளியை விட) இல்லை. எல்லாமே அதன் கூட்டு இயக்கம் தோற்றங்களாக உள்ளன. அவற்றின் இடையில் இயங்கும் அலைதான் காந்தமென்ற பேராற்றலாக அமர்ந்து அழுத்தம் முதலான ஐவகை நிகழ்ச்சிகளாகவும், சீவ இனங்களில் இன்ப, துன்ப உணர்வுகளைப் பெறும் மனமாகவும் இயங்குகின்றது என்ற உண்மையை அறிவை விரித்தும் ஆழ்ந்த சிந்தனையோடும் உணர்ந்து தெளிவோம். இந்த இயற்கையின் பரிணாம வளர்ச்சி உண்மையினை அறியும் மனித அறிவே அப்போது முழுமையடைகிறது. நிறைவும், அமைதியும் பெறுகிறது.
இந்தக் காந்த ஆற்றலானது மறைபொருளாக எங்கும் எப்பொருளிலும் ஊடுருவி நிறைந்து சிறிது கூட நெறி தவறாமல் அதன் இயக்கங்களை நடத்தி வருவதோடு, மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் சிறிது கூட தவறாத, தக்க விளைவுகளாய் மலர்வதை உணர்ந்து கொள்வோம். இதுவே இயற்கை நீதி.
எந்த செயலிலும், மனிதன் நோக்கம், திறமைக்கேற்ப விளைவுகள் தோன்றுவதும் அவ்விளைவுகள், காலம், இடம், தொடர்பு கொள்ளும் பொருள் இவற்றின் அமைப்பிற்கேற்ப இன்பமாகவோ, துன்பமாகவோ, அமைதியாகவோ, பேரின்பமாகவோ உணர்வுகளாய்ப் பெறப்படும் நீதியை மனித மனம் உணர்ந்து கொண்டால் பிறருக்குத் துன்பம் தரும் எந்த தீய செயலையும் செய்யாது, நினைக்காது, பழிச்செயல்களே மனிதனிடமிருந்து எழாது.
என்னிடம் அறிவாக இருக்கும் இறைநிலையே மற்ற உயிர்களிடமும் அறிவாக விளங்குகின்றது, என்ற பேருண்மை விளங்கிய உள்ளத்தின் தெளிவில் கருணை, அன்பு, நீதி, அறநெறி இவையெல்லாம் மலர்ந்து எண்ணம், சொல், செயல் அனைத்தையும் தூய்மைப்படுத்தி மனிதனைத் தெய்வமாக மாற்றிவிடும் என்ற உண்மையினை இக்கவி விளக்குகிறது.
(காந்த தத்துவம் – “9. மறைபொருள் விளக்கம்” நாளை தொடரும்)
*அன்புமிக்க அருள் விளக்கத் தொண்டன்*
*- வேதாத்திரி*
✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏
4