
Vethathiriya Gnanakkudil
February 25, 2025 at 02:01 AM
*⚛️ காந்த தத்துவம் ⚛️*
*9. மறைபொருள் விளக்கம்*
_*காந்தம் சிவம் சக்தியாம் கருத்தில் அர்த்த நாரியாம்*_
_*காட்டானாம் அரூபனும் காணுகின்ற உருவமும்*_
_*காந்த ஆற்றலென்றுணர்ந்தோர் (அ) எட்டு (உ) ரெண்டு என்றனர்*_
_*கடவுள் உயிர் சேர்க்கையே காந்தம் என்ற கருத்திலே*_
_*காந்தமதைக் குண்டலினியாய்க் காட்டினார் அகத்தவம்*_
_*காண்உருவம் ஒலி ஒளி கருது சுவை மணம் மனம்*_
_*காந்தமதன் மாற்றமே கவர்ச்சி தள்ளல் இரண்டிதே*_
_*காந்தமதன் உட்பொருளே கடவுள் வேதம் மறைபொருள்.*_
*விரிவுரை*
இருப்பு நிலையும் அதன் இயக்க அலையும் இணைந்து கனிந்த ஒரு பிரபஞ்ச விரிவான பேராற்றலே காந்தம் என்று உணர்ந்து கொண்டோம். இருப்பு நிலையானது மனித மனக் கருத்துக்கு சுத்தவெளியாக விளங்குகின்றது. இது எல்லையற்றது. புலன்களால் உணர முடியாதது. அதன் பருமனையோ, அதன் ஆற்றலின் பெருமையையோ மனத்தால் கணிக்க முடியாதது.
ஏனெனில் அதுவே அறிவாகவும், அதன் சிற்றலையே மனிதனிடத்து மனமாகவும் இருப்பதால் அதன் பருமனையும், தன்மையையும் காண விழையும்போதும் விரிவடையும் போதும் அலையாக இயங்கும் மனம் விரிவு குறைந்து இருப்பு நிலையோடு கரைந்து ஒன்றுபட்டு விடுகிறது. மனமாக இருக்கும்போது ஒரு எல்லை கட்டிய அளவில் குறிப்பிட்ட குணநலனாக விளங்குகிறது. இறைநிலையானால் மனதுக்கு எல்லையுமில்லை, குணமுமில்லை.
இந்த அனுபவத்தில் இறைநிலையாகிய இருப்பு நிலையே தானாக, தன்னில் அதுவாக ஒன்றிப் போய்விடுகிறது. இந்த அறிவின் முழுமைப் பேற்றினை சமாதி நிலையென்றார்கள், மெய்ப்பொருள் விளங்கிய பேரறிஞர்கள். சம+ஆதி=சமாதி. ஆதிநிலையான இருப்பும் அறிவின் படர்க்கை நிலையான மனமும் ஒன்றாக இணைந்து விட்ட பெருநிலை. இத்தகைய அருள் நிறைந்த அனுபவத்தை கீழ்காணும் கவியில் விளக்கியிருக்கிறேன்.
_*இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்க விட்டு*_
_*ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க*_
_*நிறைநிலையே தானாக உணர்வதாகும்*_
_*நித்த நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்*_
_*உறைந்து உறைந்து இந்நிலையில் பழகிக் கொள்ள*_
_*உலக இன்பங்களிலே அளவு கிட்டும்*_
_*கறைநீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்*_
_*கரைந்துபோம் தன்முனைப்பு காணும் தெய்வம்.*_
இறைநிலையாகிய இருப்பு நிலைதான் அறிவாக விளங்குகிறது. அதன் அலை நிலையே மனம் என்பதாகும் மெய்ப்பொருளாகிய இருப்பு நிலையை அது உள்ளவாறே பிறர்க்கு உணர்த்த உவமை கிடையாது. எனினும் ஒரு குறிப்பு காட்டி தகுதியுள்ளோர்களுக்கு விளக்க வேண்டியது உணர்ந்தார் கடமை. அந்த கடமையுணர்விலே மெய்ப்பொருள் வேட்பாளர்களுக்கு அதையுணர்ந்தவர் என்ற பொறுப்பிலே இங்கு சில உதாரணங்களைக் கூறுகிறேன்.
(காந்த தத்துவம் – “9. மறைபொருள் விளக்கம்” நாளையும் தொடரும்)
*அன்புமிக்க அருள் விளக்கத் தொண்டன்*
*- வேதாத்திரி*
✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏
3