
Vethathiriya Gnanakkudil
March 1, 2025 at 01:43 AM
*⚛️ காந்த தத்துவம் ⚛️*
*10. முற்றறிவு _(நேற்றையத் தொடர்ச்சி)_*
மெய்ப்பொருள் உணர்ந்தவர்கள் கூறும் சிவம், சக்தி என்ற இணைப்பாற்றல் விளக்கத்திற்கும் கவர்ச்சி எழுச்சி (Attractive Force and Repulsive Force) என்ற கூட்டாற்றல் விளக்கத்திற்கும் பொருத்தமானதாக காந்த ஆற்றல் அமைந்து விட்டது. காந்த ஆற்றலை உணர்ந்து கொண்டால் தத்துவ ஞானிகள் கூறிய பேரியக்க மண்டல இயக்க உண்மைகளையும் விஞ்ஞானிகள் கூறிவரும் பேரியக்க மண்டல இயக்க உண்மைகளையும் உணர்ந்து கொள்ளலாம். எனவே காந்த தத்துவ ஞானம் மெய்ஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் ஒன்றாக இணைக்கும் ஒரு அறிவுப் பாலமாக விளங்குகிறது.
காந்த தத்துவத்தையும், அதன் மூலம் பேரியக்க மண்டல பரிணாம தத்துவத்தையும் எளிதாக விளங்கிக் கொள்ள சுருக்கமான வழியைக் கூறுகிறேன். ஒரு மனிதனை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். பரு உடல், உயிர், சீவகாந்தம், வெளியாகவும் அறிவாகவும் விளங்கும் இருப்புநிலை என்ற நான்கு நிலைகளை ஒரு மனித உருவில் உணர்ந்து கொண்டால் போதும்.
பரு உடலோ பலகோடி நுண்ணியக்க மூலக்கூறான “விண்” துகளின் கூட்டுதான். விண் என்பது மிக நுண்ணிய சுழலலை. நுண்ணிய சுழலலையானது இருப்பு நிலையான பரவெளியின் நுண் பகுதியேயாம். இங்கு மேலும் ஒரு உண்மை மறைந்திருக்கிறது. சுழலலையிலிருந்து எழும் விரிவலை இருப்பு நிலையோடு கூடி காந்தம் எனும் பேராற்றலாக மலர்ந்திருக்கிறது. இந்தப் பேராற்றலை மறந்துவிட்டால் பேரியக்க மண்டல பரிணாமத் தொடரில் எந்த உண்மையும் கிட்டாது. இறைநிலையிலிருந்து உயிர்களின் பரிணாமம் வரையில் ஊடுருவிய ஆற்றலாக விளங்குவது காந்த ஆற்றல்.
விண் துகளின் மையத்தில் அமைந்துள்ள இருப்பு நிலை அதைச் சுற்றி அமைந்துள்ள வெளியையும், பேரியக்க மண்டலம் முழுதும் இயங்கும் விண் துகளின் மையப்புள்ளிகளையும் பேரியக்க மண்டலத்திற்கு அப்பால் நிலவும் சுத்தவெளியையும் இணைத்துக் கொண்டு ஒரே பொருளாக நிற்கின்றது. இதே போன்று விண்ணின் சுழலலை அதன் விரிவலை, இதே போன்ற எல்லா விண் துகள்களின் அலைகள் அனைத்தையும் இணைத்துக் கொண்டு ஒரு ஓய்வில்லாத நெடும் இயக்கமாக இருக்கின்றது.
எனவே அலையும் ஒன்றுதான். நிலையும் ஒன்றுதான். இந்த அலை, நிலை எங்கு எவ்வளவு விகிதத்தில் கூடுகின்றதோ அதற்கு ஏற்ப அதன் தன்மாத்திரைகளான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் இவை மலர்ச்சி சென்று ஒன்றில் ஒன்றாக, ஒன்றொடொன்று இயக்க விரைவில் பலவாக, புலன்களுக்கெட்டும் தோற்றங்களில் பலவாக விளங்குகின்றன என்ற தெளிவை இந்த காந்த தத்துவப் பத்தாவது கவி விளக்குகிறது.
இங்கு மற்றுமொரு உதாரணம் கூறுகிறேன். நாம் வசிக்கும் பூமியான நில உருண்டையைப் பார்க்கிறோம். எத்தனைக் கண்டங்கள், எத்தனை ஆயிரம் தீவுகள் உள்ளன. அதேபோல எத்தனை ஆயிரம் கடல்களும் நீர் நிலைகளும் உள்ளன. உண்மையில் ஒரே நிலம். ஒரே கடல். ஆங்காங்கே நிலமும் நீரும் ஒன்றை ஒன்று மீறி முனைந்து நிற்கும் காட்சியே, நிலங்கள் பலவாகவும், நீர் நிலைகள் பலவாகவும் விளங்குகிறது. ஒரே ஒரு நிலம், ஒரே ஒரு கடல் எவ்வாறு பல விரிவுகளாகத் தோன்றுகிறதோ, அதே போல்தான் ஒரே ஒரு இருப்பு நிலை, அதன் ஒரே ஒரு ஆற்றலான அலைநிலை, இரண்டின் கூட்டு இயக்கத்தில், அலையின் முனைப்பிலுள்ள வேறுபாடுகளே பலகோடி தோற்றங்களாகப் பிரிந்து காணப்படுகின்றன.
(காந்த தத்துவம் – “11. பிறவிப் பயனை எய்த காந்த ஞானம் வழி செய்யும்” நாளை தொடரும்)
*அன்புமிக்க அருள் விளக்கத் தொண்டன்*
*- வேதாத்திரி*
✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏
👍
4