
Aanthai Reporter News Channel
March 2, 2025 at 02:29 AM
🦉இதே மார்ச் 2., 1903
உலகின் முதல் முழுவதும் பெண்களுக்கென்றே தனியான தங்கும் விடுதியான மார்த்தா வாஷிங்டன் ஓட்டல் நியூயார்க்கில் திறக்கப்பட்ட நாள்
மேலாளர் தொடங்கி, பணியாளர்கள்வரை பெண்கள் மட்டுமே பணிபுரிந்த இந்த விடுதியில் பெண்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்டனர். 416 அறைகள் கொண்ட இந்த விடுதியில், (தற்போது உள்ள மாத வாடகை விடுதிகள் போல) நிரந்தரமாகத் தங்குபவர்களும் அனுமதிக்கப்பட்டதால், உடனடியாக நிரம்பிவிட்டதுடன், காத்திருப்போர் பட்டியலிலும் 200 பேர் காத்திருந்தனர். இந்த விடுதியில் முதல் தளத்திலிருந்த உணவு விடுதிக்கு மட்டும் ஆண்கள் அனுமதிக்கப்பட்டனர். தனியாக வரும் பெண்களை அனுமதிக்க விடுதிகள் தயங்கியதே இப்படியான விடுதி அமையக் காரணமாக இருந்தது.
இங்கிலாந்தில் அப்படியான நடைமுறைகள் இல்லாததால் அங்கிருந்து வரும் பெண்கள் மிகுந்த அதிர்ச்சியுற்றனர். அதனால், பணிபுரியும் பெண்களுக்கான தரமுயர்ந்த விடுதிகளை அமைப்பது என்ற நோக்கத்துடன், பெண்களுக்கான விடுதி நிறுவனம் என்பது 1897இல் உருவாக்கப்பட்டது. 1898இல் நடைபெற்ற ஸ்பானிய-அமெரிக்கப் போரால் கட்டுமானப் பணிகள் தாமதமானதால் 1903இல் தி விமன்'ஸ் ஓட்டல் என்ற பெயருடன் திறக்கப்பட்டது.
1920இல் மார்த்தா வாஷிங்டன் ஓட்டல் கார்ப்பரேசன் இதனை வாங்கிய பின்னரே அந்தப் பெயர் சூட்டப்பட்டாலும் அதுதான் அதிகம் அறியப்பட்ட பெயரானது. பிற்காலத்தில் பெண்களுக்கான தனி விடுதிகள் பல திறக்கப்பட்டன. 1990களுக்குப்பின், அமெரிக்கா, ஐரோப்பா, மத்தியக் கிழக்கு நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றிலுள்ள வணிக நகரங்களில், பெரும்பாலான பெரிய விடுதிகள், பெண்களுக்கென்று தனித் தளத்தை உருவாக்கின. இத்தளங்களில் பணியாளர்கள் அனைவரும் பெண்களாக இருப்பபார்கள்.
உயர் பதவிகளில் பெண்கள் அதிகரிப்பதைத் தொடர்ந்து பணிக்காகப் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால் இது உலகெங்கும் பரவி விட்டது. இந்தியாவிலும் ஐடிசி நிறுவனம் தன் விடுதிகளில் தனித் தளங்களை 1990களிலேயே அமைக்கத் தொடங்கிவிட, மற்ற பெரிய நிறுவனங்களும் தற்போது அமைக்கத் தொடங்கி உள்ளன