
Sujatha Desikan (Desikan Narayanan)
June 8, 2025 at 12:32 PM
அவுட் லைன்
ஒரு வண்ண ஓவியம் தீட்டும் போது அதற்கு அவுட்லைன் மிக முக்கியம். அது சரியாக வந்தால் தான் அதற்கு மேல் வாட்டர், ஆயில், ஏன் பென்சில் என்று எதைக் கொண்டு வண்ணம் தீட்டினாலும் அது அழகாக அமையும். 'முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல அவுட்லைன் சரியில்லை என்றால் எந்த மாதிரி உயர்ந்த வண்ணத்தைக் கொண்டு தீட்டினாலும் அது எடுபடாது. ’எல்லாம் நல்லா இருக்கு ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்’ என்ற விமர்சனத்தை நான் எதிர்கொண்டுள்ளேன். பள்ளியில் படிக்கும் போது ஓர் ஓவியரைச் சந்தித்து, என்னிடம் உள்ள விலை உயர்ந்த வாட்டர் கலர் வண்ணங்களைக் காண்பித்து, இது எல்லாம் என்னிடம் இருக்கிறது, எனக்கு வாட்டர் கலர் அடிக்கச் சொல்லிக் கொடுங்கள் என்றேன். அவர் குழந்தைகள் வைத்திருக்கும் பல்லாங்குழி போன்ற பத்து ரூபாய் சமாசாரத்தை வாங்கி வரச் சொன்னார். அதை வைத்துக் கொண்டு ஒரு மிக அருமையான ரோஜா பூ படத்தை வரைந்து முடித்தார். அவர் என்னிடம் சொன்னது, விலை உயர்ந்த கலர் முக்கியம் இல்லை, படத்தின் அவுட்லைன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பது தான். நான் வரைந்த சில படங்களை அவரிடம் காண்பித்த போது மூக்குக்குக் கீழே ஒரு கோடோ அல்லது மோவாய்க்கட்டையைக் குறுக்கியோ என் ஓவியத்தையே சரி செய்வதை வியந்து பார்த்திருக்கிறேன்.
ஓவியம் எப்படியோ அப்படியே எழுத்துக்கும் மேலே சொன்ன எல்லாம் அப்படியே பொருந்தும். கதை அவுட்லைன் நன்றாக இருந்தால் அதை நல்ல ஓவியம் போல் எல்லோரும் ரசிப்பார்கள். சுஜாதா ஸ்ரீரங்கத்துக் கதைகள் எழுதும் சமயம் அவரை வாரா வாரம் சந்திப்பேன். அவர் எழுதும் கதைகளின் ஒவ்வொன்றையும் என்னிடம் அதன் அவுட்லைன் ஆர்வத்துடன் விவரிப்பார். சில வாரங்களில் அது கதையாகப் பத்திரிக்கையில் வரும் போது அவருக்கே உண்டான நகைச்சுவை, நகாசு வேலைகள் எல்லாம் சேர்த்துப் படிக்கும் போது மார்கழி மாதம் காலையில் சூடான நெய் பொங்கல் சாப்பிட்ட திருப்தியைக் கொடுக்கும். இவருடைய நல்ல கதைகளைப் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று எடுத்து அவை எல்லாம் பெரும்பாலும் தோல்வியைத் தழுவியதற்குக் காரணம் கதையின் அவுட்லைன் இயக்குநர்கள் மாற்றியது தான்.
எழுத்தாளர்களின் நாவலைத் தழுவி எடுக்கப்படும் பல ஆங்கிலப் படங்கள் எல்லாம் பெரும் வெற்றி பெற்றதற்குக் காரணம் கதையின் அவுட்லைனை மாற்றாமல் எடுத்தது தான். ஆங்கிலப் படங்கள் ‘based on the novel by... " என்று எழுத்தாளனுக்கு உரிய அங்கிகாரம் கொடுத்துவிட்டுத் தான் படத்தை ஆரம்பிப்பார்கள். தமிழில் அந்த நேர்மை கிடையாது, எங்காவது ஆட்டையைப் போட்டுவிட்டு தன் தான் அதற்குச் சொந்தக்காரன் என்பது போலப் படம் எடுக்கிறார்கள். தமிழ் இயக்குநர்கள் பலர் அறிவுஜீவிகள் என்று நினைத்து, கதையைத் தழுவி, (அல்லது கொரியன் படங்களிலிருந்து காட்சிகளை உருவி) எடுக்கிறேன் என்று தாங்களாகவே ஒரு கதையை உருவாக்கி அதையே படமாகவும் எடுத்துத் தொலைக்கிறார்கள்.
சமீபத்தில் வந்த பெரிய படங்கள் எல்லாம் தோல்வியைச் சந்தித்ததைப் பார்க்கும் போது கதையின் அவுட்லைன் தான் காரணம் என்பது புரியும். என்ன தான் விலை உயர்ந்த தக் லைஃப் கமலையும், அண்ணாத்தே ரஜினியையும், கங்குவா சூரியாவையும் கொண்டு கலர் அடித்தாலும் படம் ஊற்றிக்கொண்டு ஒழுகுவதற்குக் காரணம் இந்த அவுட்லைன் கோளாறு தான்.
மணி’சார்’, ஷங்கர்’சார்’ போன்றவர்களின் படங்கள் ‘சுஜாதாவிற்கு முன்’, ‘சுஜாதாவிற்கு பின்’ என்று வரிசைப் படுத்தலாம். சுஜாதா இவர்களின் கதைகளை கிரிட்டிகல் ரிவ்யூ செய்வதோடு மட்டுமல்லாமல், நான் முன்பு சொன்ன அந்த ஓவிய மாஸ்டர் போல ( மூக்குக்கு கீழே ஒரு கோடு ) அதைச் செதுக்கியும் தருவார். சுஜாதா இருக்கும் வரை ஷங்கர், மணி கதைகளை எல்லாம் சுஜாதா ஒரு முறை படித்து தன் விமர்சனத்தைக் கூறிய பின் தான் இவர்கள் படம் எடுத்தார்கள். மணிரத்தினம் சுஜாதாவிடம் கதையாகவே எழுதித் தரச் சொல்லி அதைப் படமாக எடுப்பார். உதாரணம் - உயிரே, சுஜாதா ஒரு நாவலாக எழுதி அனுப்பினார், கன்னத்தில் முத்தமிட்டால் ஒரு காட்சி சுஜாதா சிறுகதையாகவே அதை எழுதி அனுப்பினார். ( சுஜாதாவிடம் அவர் எழுதிய உயிரே கதையை என்னுடைய சேகரிப்புக்குக் கேட்டேன். அவரும் மணிரத்தினத்திடம் கேட்டார் ஆனால் அவர் அதை தர மறுத்துவிட்டார்). ஷங்கர் சுஜாதாவிடம் வாய்ஸ் மெசேஜாக காட்சிகளைச் சொல்லி அனுப்ப, அதை சுஜாதா சரி செய்வதோடு அல்லது தன் பார்வையைக் கூறி அதற்குப் பதில் அனுப்ப, மீண்டும் ஷங்கர் அனுப்ப இப்படி அந்தக் காட்சி சரியாக வரும் வரை இந்த உரையாடல் நீடிக்கும். இதை சுஜாதா என்னிடமே பல முறை கூறியிருக்கிறார்.
சுஜாதாவின் கதைகளைப் படிக்கும் போதே அதில் ஒரு ஸ்கீர்ன் ப்ளே வடிவம் அதில் மறைந்து இருப்பதைக் கவனிக்கலாம். அதனால் அவர் இயக்குநர்களுக்கு உதவும் போது ஒரு நல்ல திரைப்படம் உருவாகுகிறது.
பொதுவாக நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைமில் வரும் வெப் சீரீஸ் 'binge-watching' வகையைச் சார்ந்தது. பார்ப்பதற்கு விறுவிறுப்பாக, ஒரு கட்டுக்கோப்பாக இருப்பதற்குக் காரணம் என்ன என்று யோசிக்கலாம். நீங்கள் ஒரு வெப் சீரிஸ் எடுக்க அவர்களிடம் காசு கேட்டால், நீங்கள் எவ்வளவு பெரிய அப்பா டக்கராக இருந்தாலும், முதலில் ஸ்கிரிப்ட் என்ற வஸ்துவை அவர்களிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் ஒரு கிரியேட்டிவ் குழுவை வைத்து அதை ரிவ்யூ செய்து இது தேறுமா என்று முடிவு செய்த பிறகே நீங்கள் படம் எடுக்க அனுமதிப்பார்கள். இன்றைய திரைப்படம் எடுப்பவர்கள் பெரிய பட்ஜெட், பெரிய நடிகர், பெரிய பேனர் என்ற போர்வையில் குப்பையாக படம் எடுப்பதற்குக் காரணம் இந்த மாதிரி கிரியேட்டிவ் குழுவை வைத்து ரிவ்யூ செய்வதில்லை.
தமிழில் படம் எடுப்பவர்கள் அடுத்த முறை இந்த நிறுவனங்களை நாடி ‘என் கதை தேறுமா?’ பார்த்துச் சொல்லுங்கள் என்று இவர்களை நாடலாம். கொஞ்சம் பணம் செலவாகும், ஆனால் பெரிய நடிகருக்குப் பல கோடிகளில் கொட்டுவதை விட குறைவாகத் தான் இருக்கும். இதை எல்லாம் செய்ய மாட்டார்கள், காரணம் நல்ல படம் எடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.
-சுஜாதா தேசிகன்
8.6.2025
❤️
👍
🙏
12