Sujatha Desikan (Desikan Narayanan) WhatsApp Channel

Sujatha Desikan (Desikan Narayanan)

383 subscribers

About Sujatha Desikan (Desikan Narayanan)

Sujatha Desikan's channel where I would share my posts now and then.

Similar Channels

Swipe to see more

Posts

Sujatha Desikan (Desikan Narayanan)
Sujatha Desikan (Desikan Narayanan)
6/8/2025, 12:32:48 PM

அவுட் லைன் ஒரு வண்ண ஓவியம் தீட்டும் போது அதற்கு அவுட்லைன் மிக முக்கியம். அது சரியாக வந்தால் தான் அதற்கு மேல் வாட்டர், ஆயில், ஏன் பென்சில் என்று எதைக் கொண்டு வண்ணம் தீட்டினாலும் அது அழகாக அமையும். 'முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல அவுட்லைன் சரியில்லை என்றால் எந்த மாதிரி உயர்ந்த வண்ணத்தைக் கொண்டு தீட்டினாலும் அது எடுபடாது. ’எல்லாம் நல்லா இருக்கு ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்’ என்ற விமர்சனத்தை நான் எதிர்கொண்டுள்ளேன். பள்ளியில் படிக்கும் போது ஓர் ஓவியரைச் சந்தித்து, என்னிடம் உள்ள விலை உயர்ந்த வாட்டர் கலர் வண்ணங்களைக் காண்பித்து, இது எல்லாம் என்னிடம் இருக்கிறது, எனக்கு வாட்டர் கலர் அடிக்கச் சொல்லிக் கொடுங்கள் என்றேன். அவர் குழந்தைகள் வைத்திருக்கும் பல்லாங்குழி போன்ற பத்து ரூபாய் சமாசாரத்தை வாங்கி வரச் சொன்னார். அதை வைத்துக் கொண்டு ஒரு மிக அருமையான ரோஜா பூ படத்தை வரைந்து முடித்தார். அவர் என்னிடம் சொன்னது, விலை உயர்ந்த கலர் முக்கியம் இல்லை, படத்தின் அவுட்லைன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பது தான். நான் வரைந்த சில படங்களை அவரிடம் காண்பித்த போது மூக்குக்குக் கீழே ஒரு கோடோ அல்லது மோவாய்க்கட்டையைக் குறுக்கியோ என் ஓவியத்தையே சரி செய்வதை வியந்து பார்த்திருக்கிறேன். ஓவியம் எப்படியோ அப்படியே எழுத்துக்கும் மேலே சொன்ன எல்லாம் அப்படியே பொருந்தும். கதை அவுட்லைன் நன்றாக இருந்தால் அதை நல்ல ஓவியம் போல் எல்லோரும் ரசிப்பார்கள். சுஜாதா ஸ்ரீரங்கத்துக் கதைகள் எழுதும் சமயம் அவரை வாரா வாரம் சந்திப்பேன். அவர் எழுதும் கதைகளின் ஒவ்வொன்றையும் என்னிடம் அதன் அவுட்லைன் ஆர்வத்துடன் விவரிப்பார். சில வாரங்களில் அது கதையாகப் பத்திரிக்கையில் வரும் போது அவருக்கே உண்டான நகைச்சுவை, நகாசு வேலைகள் எல்லாம் சேர்த்துப் படிக்கும் போது மார்கழி மாதம் காலையில் சூடான நெய் பொங்கல் சாப்பிட்ட திருப்தியைக் கொடுக்கும். இவருடைய நல்ல கதைகளைப் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று எடுத்து அவை எல்லாம் பெரும்பாலும் தோல்வியைத் தழுவியதற்குக் காரணம் கதையின் அவுட்லைன் இயக்குநர்கள் மாற்றியது தான். எழுத்தாளர்களின் நாவலைத் தழுவி எடுக்கப்படும் பல ஆங்கிலப் படங்கள் எல்லாம் பெரும் வெற்றி பெற்றதற்குக் காரணம் கதையின் அவுட்லைனை மாற்றாமல் எடுத்தது தான். ஆங்கிலப் படங்கள் ‘based on the novel by... " என்று எழுத்தாளனுக்கு உரிய அங்கிகாரம் கொடுத்துவிட்டுத் தான் படத்தை ஆரம்பிப்பார்கள். தமிழில் அந்த நேர்மை கிடையாது, எங்காவது ஆட்டையைப் போட்டுவிட்டு தன் தான் அதற்குச் சொந்தக்காரன் என்பது போலப் படம் எடுக்கிறார்கள். தமிழ் இயக்குநர்கள் பலர் அறிவுஜீவிகள் என்று நினைத்து, கதையைத் தழுவி, (அல்லது கொரியன் படங்களிலிருந்து காட்சிகளை உருவி) எடுக்கிறேன் என்று தாங்களாகவே ஒரு கதையை உருவாக்கி அதையே படமாகவும் எடுத்துத் தொலைக்கிறார்கள். சமீபத்தில் வந்த பெரிய படங்கள் எல்லாம் தோல்வியைச் சந்தித்ததைப் பார்க்கும் போது கதையின் அவுட்லைன் தான் காரணம் என்பது புரியும். என்ன தான் விலை உயர்ந்த தக் லைஃப் கமலையும், அண்ணாத்தே ரஜினியையும், கங்குவா சூரியாவையும் கொண்டு கலர் அடித்தாலும் படம் ஊற்றிக்கொண்டு ஒழுகுவதற்குக் காரணம் இந்த அவுட்லைன் கோளாறு தான். மணி’சார்’, ஷங்கர்’சார்’ போன்றவர்களின் படங்கள் ‘சுஜாதாவிற்கு முன்’, ‘சுஜாதாவிற்கு பின்’ என்று வரிசைப் படுத்தலாம். சுஜாதா இவர்களின் கதைகளை கிரிட்டிகல் ரிவ்யூ செய்வதோடு மட்டுமல்லாமல், நான் முன்பு சொன்ன அந்த ஓவிய மாஸ்டர் போல ( மூக்குக்கு கீழே ஒரு கோடு ) அதைச் செதுக்கியும் தருவார். சுஜாதா இருக்கும் வரை ஷங்கர், மணி கதைகளை எல்லாம் சுஜாதா ஒரு முறை படித்து தன் விமர்சனத்தைக் கூறிய பின் தான் இவர்கள் படம் எடுத்தார்கள். மணிரத்தினம் சுஜாதாவிடம் கதையாகவே எழுதித் தரச் சொல்லி அதைப் படமாக எடுப்பார். உதாரணம் - உயிரே, சுஜாதா ஒரு நாவலாக எழுதி அனுப்பினார், கன்னத்தில் முத்தமிட்டால் ஒரு காட்சி சுஜாதா சிறுகதையாகவே அதை எழுதி அனுப்பினார். ( சுஜாதாவிடம் அவர் எழுதிய உயிரே கதையை என்னுடைய சேகரிப்புக்குக் கேட்டேன். அவரும் மணிரத்தினத்திடம் கேட்டார் ஆனால் அவர் அதை தர மறுத்துவிட்டார்). ஷங்கர் சுஜாதாவிடம் வாய்ஸ் மெசேஜாக காட்சிகளைச் சொல்லி அனுப்ப, அதை சுஜாதா சரி செய்வதோடு அல்லது தன் பார்வையைக் கூறி அதற்குப் பதில் அனுப்ப, மீண்டும் ஷங்கர் அனுப்ப இப்படி அந்தக் காட்சி சரியாக வரும் வரை இந்த உரையாடல் நீடிக்கும். இதை சுஜாதா என்னிடமே பல முறை கூறியிருக்கிறார். சுஜாதாவின் கதைகளைப் படிக்கும் போதே அதில் ஒரு ஸ்கீர்ன் ப்ளே வடிவம் அதில் மறைந்து இருப்பதைக் கவனிக்கலாம். அதனால் அவர் இயக்குநர்களுக்கு உதவும் போது ஒரு நல்ல திரைப்படம் உருவாகுகிறது. பொதுவாக நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைமில் வரும் வெப் சீரீஸ் 'binge-watching' வகையைச் சார்ந்தது. பார்ப்பதற்கு விறுவிறுப்பாக, ஒரு கட்டுக்கோப்பாக இருப்பதற்குக் காரணம் என்ன என்று யோசிக்கலாம். நீங்கள் ஒரு வெப் சீரிஸ் எடுக்க அவர்களிடம் காசு கேட்டால், நீங்கள் எவ்வளவு பெரிய அப்பா டக்கராக இருந்தாலும், முதலில் ஸ்கிரிப்ட் என்ற வஸ்துவை அவர்களிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் ஒரு கிரியேட்டிவ் குழுவை வைத்து அதை ரிவ்யூ செய்து இது தேறுமா என்று முடிவு செய்த பிறகே நீங்கள் படம் எடுக்க அனுமதிப்பார்கள். இன்றைய திரைப்படம் எடுப்பவர்கள் பெரிய பட்ஜெட், பெரிய நடிகர், பெரிய பேனர் என்ற போர்வையில் குப்பையாக படம் எடுப்பதற்குக் காரணம் இந்த மாதிரி கிரியேட்டிவ் குழுவை வைத்து ரிவ்யூ செய்வதில்லை. தமிழில் படம் எடுப்பவர்கள் அடுத்த முறை இந்த நிறுவனங்களை நாடி ‘என் கதை தேறுமா?’ பார்த்துச் சொல்லுங்கள் என்று இவர்களை நாடலாம். கொஞ்சம் பணம் செலவாகும், ஆனால் பெரிய நடிகருக்குப் பல கோடிகளில் கொட்டுவதை விட குறைவாகத் தான் இருக்கும். இதை எல்லாம் செய்ய மாட்டார்கள், காரணம் நல்ல படம் எடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை. -சுஜாதா தேசிகன் 8.6.2025

❤️ 👍 🙏 12
Sujatha Desikan (Desikan Narayanan)
Sujatha Desikan (Desikan Narayanan)
6/9/2025, 10:06:25 AM

சடகோபன் அருள் மதுரகவி ‘கண்ணி நுண்சிறுத்தாம்பில்’ மூன்று இடங்களில் சடகோபன் என்ற சொல்லை உபயோகிக்கிறார். சடகோபன் நம்பி என்று இரண்டு இடத்திலும் ஒரு இடத்தில் ‘சடகோபன் அருளையே’ என்கிறார். ‘சடகோபன் அருள்’ என்றால் என்ன ? நாதமுனிகளுக்குச் சடகோபன் அருளியதால் தான் இன்று நமக்கு நாலாயிரமும் கிடைத்தது. தற்காலத்தில் திரு.உ.வே.சா தமிழ் ஓலைகளைச் சுவடிகளைத் தேடிக்கொண்டு ஆழ்வார்திருநகரியில் மனம் உருகி ஆழ்வாரை வேண்டிக்கொண்டதால் அவருக்கு வேண்டியது கிடைத்தது ( இதைப் பற்றித் தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன் ). அதே போல் யோகா ஆசான் திரு கிருஷ்ணமாச்சாரியார் ஆழ்வார்திருநகரியில் சம்பந்தத்தால் அவருக்கு யோக ரகசியம் கிடைத்தது. ( இதைப் பற்றியும் அடியேன் தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன்). பல வருடங்கள் முன் லிப்கோ ஸ்தாபகத்தார் நாதமுனிகள்போலப் பல ஆயிரம் முறை கண்ணி நுண்சிறுத்தாம்பு அனுசந்திக்க முடிவு செய்து ஒரு குழுவாக அதைச் சேவிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் சேவித்துக்கொண்டு இருக்கும் இடத்துக்கு. அருகில் ஒரு கல்யாண மண்டபம். விழாக்கோலமாக இருக்கக் கோயில் மாலை பிரசாதமாக வருகிறது. ஏதோ காரணம் கல்யாணம் நின்றுவிட்டது. கோயில் மாலையை எடுத்துக்கொண்டு வந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள். அவர்களிடம் யாரோ பக்கத்தில் ‘கண்ணி நுண்சிறுத்தாம்பு’ அனுசந்தானம் நடக்கிறது என்று சொல்ல அங்கே சென்று அவர்களுக்குப் பிரசாதமாக மாலையைக் கொடுக்கிறார்கள். பாசுரம் சேவித்தவர்களுக்குப் பூரிப்பு, வந்த மாலை ஆழ்வார் திருநகரி மாலை ! ஆழ்வார் அனுப்பிய மாலை ! பல ஆண்டுகளுக்கு முன் ஓர் அடிகளார் கூடா நட்பு காரணமாகக் கோயில் கருவறைக்குள் புகுந்து பெருமாளைத் தொட்டுச் சேவிக்கும் போராட்டத்தை ஆரம்பித்தார். மதுரை பேராசிரியர் ஸ்ரீ உ.வே அரங்கராஜன் போன்ற ஸ்ரீவைஷ்ணவப் பெரியோர்கள் “அர்ச்சகர் ஸ்ரீசடாரி ஏன் வைக்கிறார் என்று தெரியுமா ? அது பெருமாளின் திருவடி. நீங்கள் சென்று பெருமாளைத் தொடுவதை விடப் பெருமாளே உங்களிடம் வந்து எந்த ஜாதி, குலம் என்று வித்தியாசமும் பார்க்காமல் உங்கள் தலையைத் தீண்டுகிறார்” என்று விளக்கியவுடன், அடிகளார் புரிந்துகொண்டு போராட்டத்தைக் கைவிட்டார். திருவாய்மொழி என்பது தமிழ் வேதம். தமிழ் தெரியாதவர்கள் அதை அனுசந்திக்க முடியாது. உதாரணமாகச் சமீபத்தில் முக்திநாத் சென்றபோது அங்கே வரும் பக்தர்கள் எல்லோருக்கும் திருவாய்மொழி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் தமிழ்நாட்டில் பலருக்கும் தமிழ் தெரிந்ததும், திருவாய்மொழி தெரியாது. அவர்களுக்கு எல்லாம் எப்படி பெருமாளின் அருள் கிடைக்கும் ? நம்மாழ்வார் திருநட்சத்திரமான இன்றைய திருநாளில், ஒருவருக்கு நன்றி கூற வேண்டும் என்றால் அது திருமங்கை மன்னன் தான். கோயில்களில் ஸ்ரீசடாரிக்கு ‘ஸ்ரீசடகோபம்’ என்று கூறுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஸ்வாமி தேசிகன் பாதுகா சஹஸ்ரத்தில் வந்தே விஷ்ணுபத ஆஸக்தம் தம்ருஷிம் தாம் ச பாதுகாம் யதார்த்தா சடஜித் ஸம்ஜ்ஞா மத் சித்த விஜயாத் யயோ என்கிறார். சடர்கள் (மூடர்கள்) திருத்தி அரங்கன் பணியில் ஈடுபட்டதால் சடாரி ; சம் என்ற வாயுவை வென்றதால் சடகோபன். பாதுகை, நம்மாழ்வார் இருவருக்கும் சடாரி, சடகோபன் என்ற திருநாமங்கள். நம்மாழ்வார் காலத்துக்கு முன் ஸ்ரீசடாரி என்பதற்கு ஸ்ரீசடகோபன் என்று பெயர் வந்திருக்க வாய்ப்பு இல்லை. “சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம், நின்றால் மரவடியாம்” என்று ஸ்ரீசடகோபத்துக்கு ஆதிஷேன் என்று தான் பெயர். நம்மாழ்வாருக்கு ஸ்ரீசடகோபம் என்ற பெயர் எப்போது, எப்படி வந்தது ? பெரியவாச்சான் பிள்ளை அருளிய ‘கலியன் அருள்பாடு’ என்ற பகுதியில் திருவத்யயன உற்சவம் எப்படி திருமங்கை மன்னனால் ஏற்பட்டது என்று பல விஷயங்களை விவரித்துள்ளார். திருமங்கை ஆழ்வார் நம்பெருமாள் முன் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் சேவித்து போது பெருமாள் திருவுள்ளம் உகந்து “உமக்கு என்ன வேண்டுமோ கேளும்” என்று சொல்ல உடனே திருமங்கை ஆழ்வார் “திருவத்யயன உத்ஸவம் போது வேதபாராயணத்தோடு திருவாய்மொழியையும் கேட்க வேண்டும்” என்று கேட்க உடனே நம்பெருமாள் “தந்தோம்” என்று அவருடைய ஆசையை நிறைவேற்றினார். இங்கே திருமங்கை ஆழ்வார் “வேதபாராயணத்தோடு திருவாய்மொழியையும் கேட்க வேண்டும்” என்று கேட்டதைக் கொஞ்சம் ஆழ்ந்து நோக்க வேண்டும். ஒரு நிகழ்ச்சிக்கு இரண்டு மந்திரிகளை வருகிறார்கள். அவர்களுக்கு மேடையில் ஒரே மாதிரி தான் இருக்கை அமைக்க வேண்டும் அப்போது தான் சம அந்தஸ்து என்று சொல்ல முடியும். அதே போலத் தான் திருமங்கை ஆழ்வார் ‘வேதத்தோடு திருவாய்மொழியையும்’ கேட்க வேண்டும் என்று விண்ணப்பிக்க,. நம்பெருமாளும் “அப்படியே ஆகட்டும்” என்று சொல்ல உடனே திருமங்கை மன்னன், ஆழ்வார்திருநகரியிலிருந்து நம்மாழ்வாரை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளச் செய்து வரும்போது “நம்மாழ்வார்” என்று திருநாமம் சாற்றி பெருமாளின் திருமாலை, ஸ்ரீ சடகோபம், திருபரிவட்டம் முதலான வரிசைகளை ப்ரஸாதித்து, நம்மாழ்வாரின் பாசுரங்கள் பத்து நாட்களும் நூறு நூறு பாசுரங்களாகக் கேட்டு அனுபவித்த பின், நம்மாழ்வாரைப் பெருமாள் திருவடிகளில் ‘உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ என்று சேரும்படி செய்த (நம்மாழ்வார் மோட்சம்) அந்தச் சமயத்தில் ஸ்ரீசடகோபத்துக்கு நம்மாழ்வாரின் பெயரைச் சூட்டும் படி திருமங்கை ஆழ்வாரிடம் கேட்டிருக்க வேண்டும். அதற்கும் நம்பெருமாள் ‘தந்தோம்’ என்று கூற அன்றிலிருந்து நம்மாழ்வாரே ஸ்ரீசடகோபம் என்றாகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஸ்வாமி தேசிகன் அம்ருதாஸ்வாதிநீ என்ற பிரபந்தத்தில் அந்தமிலாப் பேரின்பமருந்து வேற்கும் அடியோமயறிவுடனே யென்றுங்காத்து முந்தைவினை நிரைவழியிலோழு காதெம்மை முன்னிலை யாந்தேசிகர்த முன்னே சேர்த்து மந்திரமுமந்திரத்தின் வழியுங்காட்டி வழிப்படுத்திவானேற்றி யடிமைகொள்ளத் தந்தையென நின்றதனித்திருமால் தாளில் தலைவைத்தோஞ் சடகோபனருளினாலே (28) என்று நம்மாழ்வாருடைய அருளினால் எம்பெருமான் திருவடிகளில் தலை வணங்கப் பெற்றோம். அதாவது ஆழ்வார் கருணையினால் தான் நாம் பகவானின் திருவடிகளில் சரணாகதி செய்ய நேரிட்டது என்கிறார். இதையே மதுரகவிகள் இப்படிச் சொல்லுகிறார் : அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ் அரு மறையின் பொருள் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே வட தேசம், தமிழ் தெரியாது அல்லது திருவாய்மொழி தெரியாது, எனக்கு எப்படி அருள் கிடைக்கும் ? இதற்கும் ஸ்வாமி தேசிகன் தன் பாதுகா ஸஹஸ்ரத்தில் விடை சொல்லுகிறார். த்ரமிட உபநிஷத் நிவேச சூந்யாந் அபி லசஷ்மீரமணாய ரோசயிஷ்யந் த்ருவம் ஆவிசதி ஸ்ம பாதுகாத்மா சடகோப. ஸ்வயம் ஏவ மாநநீய பொருள் இது தான் ஆழ்வார் எல்லோரும் ஸ்ரீமந்நாராயணனை அடைய வேண்டும் என்று திருவாய்மொழியை அருளினார். பெருமாள் திருவாய்மொழி பிரியன். திருவாய்மொழி தெரியாதவர்களை நான் ரக்ஷிக்க போவதில்லை என்று உறுதியுடன் இருக்கிறான். தமிழ் தெரியாதவர்கள், அல்லது தமிழ் தெரிந்தும் திருவாய்மொழி தெரியாதவர்களின் கதி ? அவர்களின் துர்க்கதியைப் போக்க நம்மாழ்வார் ஸ்ரீசடகோபன் என்ற பெயரைத் தாங்கிக்கொண்டு எல்லோருக்கும் தன் சம்பந்தம் உண்டாக்கி, திருவாய்மொழியை கற்காமல் போனாலும் சடகோபன் சம்பந்தம் பெற்று எம்பெருமான் வேறு வழி இல்லாமல் அவர்களிடம் கருணை காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதுவே சடகோபனின் அருள்! பெருமாளின் திருவடி நிலைகளான ஆதிஷேசனின் இருந்தார். அந்தத் திருவடி நிலைகளை ஸ்ரீசடகோபன் என்ற நம்மாழ்வார் ஏற்றார். நம்மாழ்வாரின் திருவடி நிலைகளை மதுரகவி ஆழ்வார் ஏற்றார்; பிறகு அதை ஸ்ரீராமானுஜர் ஏற்றார். ஸ்ரீராமானுஜர் ஆதிசேஷன் அவதாரம் ! திருவடிகளுக்கு என்றுமே ஒரு போட்டி நிலவுகிறது. அடுத்த முறை கோயிலில் அர்ச்சகர் ஸ்ரீசடாரியை தலையில் சாதிக்கும்போது அதில் இருக்கும் ஆழ்வார் “உன் திருவடி சம்பந்தம் இவனுக்கு ஏற்பட்டுவிட்டது, நீ இவனுக்கு அருள் புரிய வேண்டும்” என்று என்று நமக்காக வேண்டுகிறார். சொல்ல மறந்துவிட்டேனே… முக்திநாத்தில் வரும் பக்தர்கள் எல்லோருக்கும் ஸ்ரீசடகோபம் சாதிக்கிறார்கள். இமயம் முதல் குமரி வரை சடகோபன் அருள் இருக்கிறது! -சுஜாதா தேசிகன் வைகாசி விசாகம் நம்மாழ்வார் திருநட்சத்திரம் 9.6.2025

🙏 5
Sujatha Desikan (Desikan Narayanan)
Sujatha Desikan (Desikan Narayanan)
6/9/2025, 10:06:59 AM
Post image
🙏 ❤️ 17
Image
Sujatha Desikan (Desikan Narayanan)
Sujatha Desikan (Desikan Narayanan)
6/9/2025, 10:07:36 AM

அடியேன் இல்லத்தில் எழுந்தருளியிருக்கும் நம்மாழ்வார்

❤️ 2
Link copied to clipboard!