
Sujatha Desikan (Desikan Narayanan)
June 9, 2025 at 10:06 AM
சடகோபன் அருள்
மதுரகவி ‘கண்ணி நுண்சிறுத்தாம்பில்’ மூன்று இடங்களில் சடகோபன் என்ற சொல்லை உபயோகிக்கிறார். சடகோபன் நம்பி என்று இரண்டு இடத்திலும் ஒரு இடத்தில் ‘சடகோபன் அருளையே’ என்கிறார்.
‘சடகோபன் அருள்’ என்றால் என்ன ?
நாதமுனிகளுக்குச் சடகோபன் அருளியதால் தான் இன்று நமக்கு நாலாயிரமும் கிடைத்தது. தற்காலத்தில் திரு.உ.வே.சா தமிழ் ஓலைகளைச் சுவடிகளைத் தேடிக்கொண்டு ஆழ்வார்திருநகரியில் மனம் உருகி ஆழ்வாரை வேண்டிக்கொண்டதால் அவருக்கு வேண்டியது கிடைத்தது ( இதைப் பற்றித் தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன் ). அதே போல் யோகா ஆசான் திரு கிருஷ்ணமாச்சாரியார் ஆழ்வார்திருநகரியில் சம்பந்தத்தால் அவருக்கு யோக ரகசியம் கிடைத்தது. ( இதைப் பற்றியும் அடியேன் தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன்).
பல வருடங்கள் முன் லிப்கோ ஸ்தாபகத்தார் நாதமுனிகள்போலப் பல ஆயிரம் முறை கண்ணி நுண்சிறுத்தாம்பு அனுசந்திக்க முடிவு செய்து ஒரு குழுவாக அதைச் சேவிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் சேவித்துக்கொண்டு இருக்கும் இடத்துக்கு. அருகில் ஒரு கல்யாண மண்டபம். விழாக்கோலமாக இருக்கக் கோயில் மாலை பிரசாதமாக வருகிறது. ஏதோ காரணம் கல்யாணம் நின்றுவிட்டது. கோயில் மாலையை எடுத்துக்கொண்டு வந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள். அவர்களிடம் யாரோ பக்கத்தில் ‘கண்ணி நுண்சிறுத்தாம்பு’ அனுசந்தானம் நடக்கிறது என்று சொல்ல அங்கே சென்று அவர்களுக்குப் பிரசாதமாக மாலையைக் கொடுக்கிறார்கள். பாசுரம் சேவித்தவர்களுக்குப் பூரிப்பு, வந்த மாலை ஆழ்வார் திருநகரி மாலை ! ஆழ்வார் அனுப்பிய மாலை !
பல ஆண்டுகளுக்கு முன் ஓர் அடிகளார் கூடா நட்பு காரணமாகக் கோயில் கருவறைக்குள் புகுந்து பெருமாளைத் தொட்டுச் சேவிக்கும் போராட்டத்தை ஆரம்பித்தார். மதுரை பேராசிரியர் ஸ்ரீ உ.வே அரங்கராஜன் போன்ற ஸ்ரீவைஷ்ணவப் பெரியோர்கள் “அர்ச்சகர் ஸ்ரீசடாரி ஏன் வைக்கிறார் என்று தெரியுமா ? அது பெருமாளின் திருவடி. நீங்கள் சென்று பெருமாளைத் தொடுவதை விடப் பெருமாளே உங்களிடம் வந்து எந்த ஜாதி, குலம் என்று வித்தியாசமும் பார்க்காமல் உங்கள் தலையைத் தீண்டுகிறார்” என்று விளக்கியவுடன், அடிகளார் புரிந்துகொண்டு போராட்டத்தைக் கைவிட்டார்.
திருவாய்மொழி என்பது தமிழ் வேதம். தமிழ் தெரியாதவர்கள் அதை அனுசந்திக்க முடியாது. உதாரணமாகச் சமீபத்தில் முக்திநாத் சென்றபோது அங்கே வரும் பக்தர்கள் எல்லோருக்கும் திருவாய்மொழி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் தமிழ்நாட்டில் பலருக்கும் தமிழ் தெரிந்ததும், திருவாய்மொழி தெரியாது. அவர்களுக்கு எல்லாம் எப்படி பெருமாளின் அருள் கிடைக்கும் ?
நம்மாழ்வார் திருநட்சத்திரமான இன்றைய திருநாளில், ஒருவருக்கு நன்றி கூற வேண்டும் என்றால் அது திருமங்கை மன்னன் தான். கோயில்களில் ஸ்ரீசடாரிக்கு ‘ஸ்ரீசடகோபம்’ என்று கூறுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஸ்வாமி தேசிகன் பாதுகா சஹஸ்ரத்தில்
வந்தே விஷ்ணுபத ஆஸக்தம் தம்ருஷிம் தாம் ச பாதுகாம்
யதார்த்தா சடஜித் ஸம்ஜ்ஞா மத் சித்த விஜயாத் யயோ
என்கிறார்.
சடர்கள் (மூடர்கள்) திருத்தி அரங்கன் பணியில் ஈடுபட்டதால் சடாரி ;
சம் என்ற வாயுவை வென்றதால் சடகோபன்.
பாதுகை, நம்மாழ்வார் இருவருக்கும் சடாரி, சடகோபன் என்ற திருநாமங்கள்.
நம்மாழ்வார் காலத்துக்கு முன் ஸ்ரீசடாரி என்பதற்கு ஸ்ரீசடகோபன் என்று பெயர் வந்திருக்க வாய்ப்பு இல்லை.
“சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,
நின்றால் மரவடியாம்” என்று ஸ்ரீசடகோபத்துக்கு ஆதிஷேன் என்று தான் பெயர்.
நம்மாழ்வாருக்கு ஸ்ரீசடகோபம் என்ற பெயர் எப்போது, எப்படி வந்தது ?
பெரியவாச்சான் பிள்ளை அருளிய ‘கலியன் அருள்பாடு’ என்ற பகுதியில் திருவத்யயன உற்சவம் எப்படி திருமங்கை மன்னனால் ஏற்பட்டது என்று பல விஷயங்களை விவரித்துள்ளார்.
திருமங்கை ஆழ்வார் நம்பெருமாள் முன் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் சேவித்து போது பெருமாள் திருவுள்ளம் உகந்து “உமக்கு என்ன வேண்டுமோ கேளும்” என்று சொல்ல உடனே திருமங்கை ஆழ்வார் “திருவத்யயன உத்ஸவம் போது வேதபாராயணத்தோடு திருவாய்மொழியையும் கேட்க வேண்டும்” என்று கேட்க உடனே நம்பெருமாள் “தந்தோம்” என்று அவருடைய ஆசையை நிறைவேற்றினார்.
இங்கே திருமங்கை ஆழ்வார் “வேதபாராயணத்தோடு திருவாய்மொழியையும் கேட்க வேண்டும்” என்று கேட்டதைக் கொஞ்சம் ஆழ்ந்து நோக்க வேண்டும்.
ஒரு நிகழ்ச்சிக்கு இரண்டு மந்திரிகளை வருகிறார்கள். அவர்களுக்கு மேடையில் ஒரே மாதிரி தான் இருக்கை அமைக்க வேண்டும் அப்போது தான் சம அந்தஸ்து என்று சொல்ல முடியும். அதே போலத் தான் திருமங்கை ஆழ்வார் ‘வேதத்தோடு திருவாய்மொழியையும்’ கேட்க வேண்டும் என்று விண்ணப்பிக்க,. நம்பெருமாளும் “அப்படியே ஆகட்டும்” என்று சொல்ல உடனே திருமங்கை மன்னன், ஆழ்வார்திருநகரியிலிருந்து நம்மாழ்வாரை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளச் செய்து வரும்போது “நம்மாழ்வார்” என்று திருநாமம் சாற்றி பெருமாளின் திருமாலை, ஸ்ரீ சடகோபம், திருபரிவட்டம் முதலான வரிசைகளை ப்ரஸாதித்து, நம்மாழ்வாரின் பாசுரங்கள் பத்து நாட்களும் நூறு நூறு பாசுரங்களாகக் கேட்டு அனுபவித்த பின், நம்மாழ்வாரைப் பெருமாள் திருவடிகளில் ‘உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ என்று சேரும்படி செய்த (நம்மாழ்வார் மோட்சம்) அந்தச் சமயத்தில் ஸ்ரீசடகோபத்துக்கு நம்மாழ்வாரின் பெயரைச் சூட்டும் படி திருமங்கை ஆழ்வாரிடம் கேட்டிருக்க வேண்டும். அதற்கும் நம்பெருமாள் ‘தந்தோம்’ என்று கூற அன்றிலிருந்து நம்மாழ்வாரே ஸ்ரீசடகோபம் என்றாகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ஸ்வாமி தேசிகன் அம்ருதாஸ்வாதிநீ என்ற பிரபந்தத்தில்
அந்தமிலாப் பேரின்பமருந்து வேற்கும்
அடியோமயறிவுடனே யென்றுங்காத்து
முந்தைவினை நிரைவழியிலோழு காதெம்மை
முன்னிலை யாந்தேசிகர்த முன்னே சேர்த்து
மந்திரமுமந்திரத்தின் வழியுங்காட்டி
வழிப்படுத்திவானேற்றி யடிமைகொள்ளத்
தந்தையென நின்றதனித்திருமால் தாளில்
தலைவைத்தோஞ் சடகோபனருளினாலே (28)
என்று நம்மாழ்வாருடைய அருளினால் எம்பெருமான் திருவடிகளில் தலை வணங்கப் பெற்றோம். அதாவது ஆழ்வார் கருணையினால் தான் நாம் பகவானின் திருவடிகளில் சரணாகதி செய்ய நேரிட்டது என்கிறார்.
இதையே மதுரகவிகள் இப்படிச் சொல்லுகிறார் :
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
வட தேசம், தமிழ் தெரியாது அல்லது திருவாய்மொழி தெரியாது, எனக்கு எப்படி அருள் கிடைக்கும் ? இதற்கும் ஸ்வாமி தேசிகன் தன் பாதுகா ஸஹஸ்ரத்தில் விடை சொல்லுகிறார்.
த்ரமிட உபநிஷத் நிவேச சூந்யாந்
அபி லசஷ்மீரமணாய ரோசயிஷ்யந்
த்ருவம் ஆவிசதி ஸ்ம பாதுகாத்மா
சடகோப. ஸ்வயம் ஏவ மாநநீய
பொருள் இது தான்
ஆழ்வார் எல்லோரும் ஸ்ரீமந்நாராயணனை அடைய வேண்டும் என்று திருவாய்மொழியை அருளினார். பெருமாள் திருவாய்மொழி பிரியன். திருவாய்மொழி தெரியாதவர்களை நான் ரக்ஷிக்க போவதில்லை என்று உறுதியுடன் இருக்கிறான்.
தமிழ் தெரியாதவர்கள், அல்லது தமிழ் தெரிந்தும் திருவாய்மொழி தெரியாதவர்களின் கதி ? அவர்களின் துர்க்கதியைப் போக்க நம்மாழ்வார் ஸ்ரீசடகோபன் என்ற பெயரைத் தாங்கிக்கொண்டு எல்லோருக்கும் தன் சம்பந்தம் உண்டாக்கி, திருவாய்மொழியை கற்காமல் போனாலும் சடகோபன் சம்பந்தம் பெற்று எம்பெருமான் வேறு வழி இல்லாமல் அவர்களிடம் கருணை காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதுவே சடகோபனின் அருள்!
பெருமாளின் திருவடி நிலைகளான ஆதிஷேசனின் இருந்தார். அந்தத் திருவடி நிலைகளை ஸ்ரீசடகோபன் என்ற நம்மாழ்வார் ஏற்றார்.
நம்மாழ்வாரின் திருவடி நிலைகளை மதுரகவி ஆழ்வார் ஏற்றார்; பிறகு அதை ஸ்ரீராமானுஜர் ஏற்றார். ஸ்ரீராமானுஜர் ஆதிசேஷன் அவதாரம் !
திருவடிகளுக்கு என்றுமே ஒரு போட்டி நிலவுகிறது.
அடுத்த முறை கோயிலில் அர்ச்சகர் ஸ்ரீசடாரியை தலையில் சாதிக்கும்போது அதில் இருக்கும் ஆழ்வார் “உன் திருவடி சம்பந்தம் இவனுக்கு ஏற்பட்டுவிட்டது, நீ இவனுக்கு அருள் புரிய வேண்டும்” என்று என்று நமக்காக வேண்டுகிறார்.
சொல்ல மறந்துவிட்டேனே… முக்திநாத்தில் வரும் பக்தர்கள் எல்லோருக்கும் ஸ்ரீசடகோபம் சாதிக்கிறார்கள்.
இமயம் முதல் குமரி வரை சடகோபன் அருள் இருக்கிறது!
-சுஜாதா தேசிகன்
வைகாசி விசாகம்
நம்மாழ்வார் திருநட்சத்திரம்
9.6.2025
🙏
5