Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
June 13, 2025 at 03:22 PM
*🔴 விமான விபத்து எப்படி நடந்திருக்க வாய்ப்பு? - நிபுணர்கள் சொல்வது என்ன?* ஆமதாபாத் ஏர் இந்தியா 787 விபத்து. இந்தக் கோர விபத்துக்குப் பிறகு உலகமே அல்லோல கல்லோலப்படுகிறது. போயிங் 787 விமானங்கள் 2014 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 1100 விமானங்களுக்கு மேல் உலகில் பறந்து கொண்டிருந்தாலும் இதுவரை எந்தவித விபத்தும் ஏற்பட்டதே இல்லை என்பது இந்த விமானத்தின்மீது மிக பெரிய மரியாதையை இதுவரை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்து இன்ஜின்கள் விமானத்தை மேலே கொண்டு செல்லும் சக்தியை இழந்ததால் ஏற்பட்டது என்பது நிதர்சனம். விமானக் கட்டுப்பாட்டு அறைக்குப் பைலட் சொன்ன கடைசிச் செய்தியும் இதுவாகவே இருந்தது. அப்படி இன்ஜின்கள் சக்தி இழக்கக் காரணம் என்ன என்பதுதான் இந்த விபத்தின் மூலமாக இருக்க முடியும். இயந்திரக் கோளாறோ அல்லது அவசர நிலையில் பைலட்களிடையே நிகழ்ந்த தவறால் ஏற்பட்ட விமானத்தின் மென்பொருள் குழப்பமோ காரணமாக இருக்கலாம். > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 இந்த விமானத்தின் இறக்கைகள் ஓர் புதுவித அமைப்பைக் கொண்டவை. நுனிப்பகுதி மேல் வளைந்து காணப்படும். அதுவும் இந்த நுனிப்பகுதி ஓர் விசேஷ எடைகுறைவான கூட்டுக் கலவை உலோகத்தால் தயாரிக்கப்பட்டது. விமானம் மேலே ஏறும் போது இறக்கைகள் பின்புறம் விரிவடைந்து விமானத்தை மேலே தூக்கும் சக்தியை அதிகரிக்கும். விமானம் மேல் எழுந்தவுடன் முதலில் சக்கரங்கள் உள்ளே செல்லும். அதன் பிறகு இந்த விரிவடைந்த இறக்கைகளின் பகுதி மெதுவாக உள் செல்லும். இந்த இடத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறதாகக் கருதப்படும் வாய்ப்பும் இருக்கிறது. நாம் காணும் இரண்டு வீடியோக்களிலும் இறக்கை விரிவடைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் சக்கரங்கள் மேல் எழும்பியிருக்கவில்லை. இரண்டு இன்ஜின்களும் ஒரே சமயத்தில் செயலிழந்ததாகவோ அல்லது திறன் குறைந்ததாகவோ ஆனதால் தான் இந்த விமானம் நேர்கோட்டில் சென்று பக்கவாட்டில் சாயாமல் விழுந்து இருக்கிறது. விமானம் மேலே எழும்பும்போது அதன் சத்தத்தைக் கேட்ட ஓரிரு விமான பைலட்டுகள் விமானம் விழுவதற்கு முன் RAT (Ram Air Turbine) என்ற விமான உந்து சக்தியை அவசர நிலைகளில் அதிகரிக்கச் செய்யும் ஓர் தானியங்கி அமைப்பு வெளியாகி அதனால் ஏற்பட்ட வித்தியாசமான சத்தம் கூடக் கேட்டது என்கிறார்கள். > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 சில 787 விமானிகள், தான் விழுந்து விடுவோம் என்று இந்த விமானிக்குத் தெரிந்தவுடன் அவர் அதிகம் கட்டிடங்கள் இல்லாத பகுதியாய்ப் பார்த்து விழ வேண்டுமென்று முயன்று இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். ராணி சந்திரா என்ற நடிகை இறந்த ஓர் பழைய இந்தியன் ஏர்லைன்ஸ் காரவெல் விமானம் இவ்வாறு ஆளில்லாத பகுதியாய்ப் பார்த்துத்தான் விழுந்தது. தேர்ந்த பைலட்டுகள் கடைசியாக இதைத் தான் செய்வார்கள் என்பது மரபு. எது எப்படி இருந்தாலும் என்ஜின்கள் ஏன் சக்தியை இழந்தன என்பதை NTSB (National Transportation Safety Board) அங்கே கண்டுபிடிக்கப்பட்ட கருப்புப் பெட்டியை ஆராய்ந்து சீக்கிரம் சொல்லிவிடுவார்கள். தோன்றியதெல்லாம் எழுதாமல் அதுவரை காத்திருக்கலாம். அதுதான் என் போன்ற மூத்த விமானத்துறைப் பணியாளர்களுக்கு அழகு. விபத்தால் இறந்த அனைத்து ஆத்மாக்களும் சாந்தியடையப் பிரார்த்தனை செய்வோமாக. AG Gopalan
🙏 ❤️ 👍 😢 11

Comments