Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
June 14, 2025 at 06:45 AM
*🔴 சமாளிப்பது என்பது பிழைகளையும் குளறுபடிகளையும் ஏற்றுக் கொள்வதுதான்: ஜெயமோகன்* ஏர் இந்தியா விபத்து குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியது. ஏர் இந்தியா விமானம் அகமதாபாதில் விபத்துக்கு உள்ளானது ஒரு நடுக்கத்தை உண்டாக்கியது. ஏனென்றால் என் அகத்தில் இந்த பயம் இருந்துகொண்டே இருந்தது. ஏர் இந்தியாவின் விமானங்களின் மிக மோசமான நிர்வாகம், சொல்லப்போனால் இப்படி ஒரு நிர்வாகம் இருக்கமுடியும் என்பதே நிர்வாகவியல் நிபுணர்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கலாம், எனக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றாக இருந்தது. சென்ற முறை நான் அமெரிக்கா சென்றபோது நண்பர் விஸ்வநாதன் எனக்கும் அருண்மொழிக்கும் ஏர் இந்தியாவில்தான் டிக்கெட் போட்டிருந்தார். அதை சரியாகக் கவனிக்கவில்லை. டிக்கெட்டை பார்த்து ஏர் இந்தியா என்றதுமே ஏர் இந்தியா என்றால் பயணம் ரத்து, அமெரிக்கா வரப்போவதில்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன். அருண்மொழி விஸ்வநாதனிடம் சொல்லி டிக்கெட்டை ரத்துசெய்து எமிரேட் விமானத்தில் டிக்கெட் போட்ட பின்னரே கிளம்பினேன். > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 அதில் கொஞ்சம் பணம் இழப்புதான். நண்பர்களுக்கு வருத்தமும் இருந்திருக்கும். ஆனால் எனக்கு ஏர் இந்தியா அனுபவங்கள் அப்படிப்பட்டவை. நான் இரண்டு முறைதான் வெளிநாட்டில் இருந்து வரும் ஏர் இந்தியாவில் பயணம் செய்திருக்கிறேன். இரண்டுமே சிங்கப்பூரில் இருந்து. உள்நாட்டில் கடந்த இருபதாண்டுகளில் மூன்றே முறை. ஏர் இந்தியாவை கூடுமானவரை தவிர்த்துவிடுவேன். ஏர் இந்தியா டிக்கெட் மட்டும்தான் இருக்கிறது என்றால் பயணத்தை தவிர்த்துவிடுவேன். நான் மிகைப்படுத்துவதாகச் சிலருக்குத் தோன்றக்கூடும். சும்மா இணையத்தில் தேடிப்பாருங்கள். ஏர் இந்தியாவின் நிர்வாகக்குளறுபடிகள் பற்றி பயணிகளின் புகார்கள் ஒருவாரம் ஒன்றாவது கண்ணில் படும். முதலில் விமானம் தூய்மைப்படுத்தப்படுவதே இல்லை. ஒரு பயணம் முடிந்து விமானம் நின்றால் முந்தைய பயணத்தின் அத்தனை குப்பைகளுடனும் அடுத்த பயணத்தில் நாம் அந்த இருக்கைகளில் அமரவேண்டும். கழிவறைகள் நாறும். தூய்மைப்படுத்த வேண்டிய ஊழியர்கள் அதைச் செய்வதில்லை. வேறு எந்த விமானமும் அசுத்தமாக இருப்பதில்லை. அதைவிட கஷ்டம் இருக்கைகள் உடைந்து இருக்கும் என்பது. உடைந்த இருக்கைகளில் பத்துப்பதினைந்து மணிநேரம் பயணம் செய்வது நினைத்தே பார்க்கமுடியாது. ஆனால் அதைவிட ஓர் இருக்கை உடைந்திருப்பதை ஆண்டுக்கணக்கில் சரிசெய்யாமல் விமானத்தை ஓட்டும் ஒரு நிறுவனம் எப்படி அந்த விமானத்தைப் பேணும் என்னும் சந்தேகம்தான். James Q. Wilson மற்றும் George L. Kelling ஆகியோர 1982 ல் முன்வைத்த உடைந்த சன்னல் கொள்கை இந்த விஷயத்தில் ஒரு நல்ல நடைமுறை உதாரணம் என்பது என் எண்ணம். அவர்கள் அதை ஒரு நகரில் சிறிய குற்றங்களை கடுமையாக ஒடுக்கவேண்டும் என்னும் நோக்கில் சொன்னார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. அதைப்பற்றி ருட்கர் பிரக்மான் சொன்னதில்தான் எனக்கு உடன்பாடு. ஆனால் சேவைத்துறைகளில் அது முக்கியமான கொள்கை. ஒரு கட்டிடத்தில் ஒரு சன்னல் கண்ணாடி உடைந்திருந்து அது மாதக்கணக்கில் சரிசெய்யப்படாமல் இருந்தால் அந்தக் கட்டிடத்தின் பாதுகாப்பில் மிகப்பெரிய ஓட்டை இருக்கிறது, அந்த உடைந்த சன்னல் நிர்வாகக்குளறுபடி மற்றும் உதாசீனத்தின் அடையாளம் என்பது அக்கொள்கை. > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 ஒரு விமானத்தில் ஓர் இருக்கை ஆண்டுக்கணக்கில் சரிசெய்யப்படவில்லை, பலமுறை புகார்கள் வந்து, ஊடகங்களில் பேசப்பட்ட பிறகும் கூட என்றால் அது தவறோ பிழையோ அல்ல, குற்றகரமான உதாசீனம். அது மிகப்பெரிய அபாயங்களுக்கு இட்டுச்செல்லக்கூடியது. அதுதான் நிகழ்ந்திருக்கிறது. ஏர் இந்தியா அரசு நிறுவனமாக இருந்தது, அதன் ஊழியர்கள் இன்றும் அரசு ஊழியர்களின் அதே மனநிலையில் இருக்கிறார்கள். இந்தியாவின் நிர்வாகவியலில் உடைந்த சன்னல் கொள்கைக்கு இன்று வரை இடமில்லாமலிருக்கிறது. ஒரு நட்சத்திர விடுதியில் முன்பதிவுசெய்தபின் இரவில் சென்று அறைகேட்டால் தப்பான இடத்தில் தேடிவிட்டு ‘சாரி சார், உங்களுக்கு அறை பதிவுசெய்யப்படவில்லை’ என்கிறார்கள். ‘பதிவுசெய்யாமல் இங்கே நான் வரமாட்டேன். தேடிப்பாருங்கள்’ என்றால் மீண்டும் ‘உங்கள் பெயர் இல்லை சார்’ என்கிறார்கள். நிர்வாகியிடம் புகார் சொன்னால் அவர் வந்து தேடிவிட்டு ‘சாரி சார் ,பிரீமியம் புக்கிங்கில் இருக்கிறது’ என அறை கொடுக்கிறார். இது எனக்கு அடிக்கடி நிகழும் அனுபவம். ஒரு ‘சாரி’யோடு எல்லாம் முடிந்துவிடுகிறது. அந்தப்பிழையின் வேர் கண்டுபிடிக்கப்படுவதில்லை, அந்தப் பிழை களையப்படுவதே இல்லை. அந்த ஓட்டலில் எல்லாமே தப்பாகத்தான் இருக்கும். நான் இப்படி குளறுபடி செய்த ஒரு ஓட்டலில் நிர்வாகியிடம் சொன்னேன். “இங்கே எல்லாமே தப்பாகத்தான் இருக்கும்” அவர் சீண்டப்பட்டார். “சாரி சார், நீங்கள் எங்களை தவறாக புரிந்துகொண்டுவிட்டீர்கள்” என்றார். “சரி வாருங்கள், அறையைக் காட்டுங்கள்” என்றேன். அறையில் ஏஸி வேலை செய்யவில்லை. இன்னொரு அறையை காட்டினார். அங்கே தண்ணீர்க்குழாய் சரியாக மூடாமல் கொட்டிக்கொண்டே இருந்தது. ஊழியர்களை கண்டமானிக்கு வசைபாடினார். உண்மையில் அது நிர்வாகப்பிரச்சினை, ஊழியர்களின் பிரச்சினை மட்டும் அல்ல. உண்மையில் இந்தச் சிக்கல் இந்திய உள்ளத்திற்குப் புரிவதே இல்லை. ‘ஒரு விமானத்திலே சீட் கொஞ்சம் சரியலையாம், ரொம்ப இது பண்ணிக்கிடுறாரு. அட்ஜஸ்ட் பண்ணி போகவேண்டியதுதானே?’ என்பதுதான் இங்கே உள்ள மனநிலை. ஏர் இந்தியாவின் குளறுபடிகள் பற்றி இணையதளங்களில் பயணிகளின் குமுறல்கள் பதிவாகும்போதெல்லாம் பலர் எதிர்வினையாற்றுவது இப்படித்தான். எங்கும் உள்ள இந்த நிர்வாகக் குளறுபடிகளால்தான் நெரிசல்களில் சாகிறார்கள். விபத்துக்களில் சாகிறார்கள். இந்த விமான விபத்து கடந்த பத்துப்பதினைந்து ஆண்டுகளாகவே ஏர் இந்தியாவின் மேல் தொடர்ச்சியாக பயணிகள் முன்வைத்த குறைகளின் அடிப்படையாக அமைந்த அந்த உதாசீனத்தால் நிகழ்ந்ததுதான். எல்லாமே நமக்கு நாலைந்து நாள் செய்தி. ‘செத்தவன் சாகிறான், இருக்கிறவன் வாழணும்ல? எல்லாம் அவனவன் தலையெழுத்து’ என்று கடந்துசெல்கிறோம். இந்த விபத்துக்கும் வழக்கம்போல தலைவர்கள் இரங்கல், நஷ்டடஈடு அறிவிப்பு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் என ஒரு வாரம் போகும். அப்படியே மறந்து அடுத்த விபத்துக்குச் சென்றுவிடுவோம். இது எவருடைய அலட்சியம் என்று கண்டுபிடிக்கப்படாது. எவருமே தண்டிக்கப்பட மாட்டார்கள். எந்த நிர்வாகியின் குறைபாடு என்பது பேச்சுக்கே வராது. ஏர் இந்தியா எந்த ஒரு புகாருக்கும் வழக்கமான ஒரு ‘வருந்துகிறோம்’ டெம்ப்ளேட் வைத்திருக்கிறது. அதுதான் இங்கும் சொல்லப்படும், கொஞ்சம் விரிவாக. இருநூற்றைம்பதுபேர் சாவதென்பது ஒரு பெரிய எண்ணிக்கை என்பதனால். நாம் செய்யக்கூடுவது ஒன்றே. நாம் சம்பந்தப்பட்ட துறைகளில் சிறிய நிர்வாகச் சிக்கல்களைக்கூட கவனிக்க வேண்டும். அவை மிகப்பெரிய நிர்வாகப் போதாமைகளின் அடையாளங்கள் என உணரவேண்டும். எங்கும் எல்லா வேலையும் ‘சமாளிக்கப்படுவதே’ இங்கே வழக்கம். சிறந்த பணி, முழுமையான பணி என்னும் பேச்சே இங்கே இல்லை. பிழையின்மை என்பதுதான் உண்மையில் இயல்பான சரியான நிலை. பிழை என நிகழ்வதெல்லாமே எவரோ செய்யும் தவறுகள்தான். தவறுகள் கண்டடையப்படவேண்டும், களையப்பட வேண்டும், தண்டிக்கப்படவும் வேண்டும். இந்த விமானப்பாதுகாப்பு விஷயத்தில், மிகச்சிறிய செயலிலானாலும், கவனக்குறைவாக இருந்த அத்தனைபேரும் கொலையாளிகள்தான். சமாளிப்பது என்பது பிழைகளையும் குளறுபடிகளையும் ஏற்றுக்கொள்வதுதான். அது எப்போதுமே அழிவுக்கான பாதை. தருணத்தில், இந்த உயிர்களை சாட்சியாக்கி, நாம் சொல்லிக்கொள்ளவேண்டியது அதுதான்.
👍 🙏 ❤️ 12

Comments