Erode Kathir
Erode Kathir
June 13, 2025 at 02:36 AM
*கேள்வி* :அனைத்தையும் இழந்த ஒருவனால் 30 வயதுக்கு மேல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா? *பதில்* : எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு நிலையிலும் அனைத்தையும் இழந்து விடுவதில்லை. இங்கே அனைத்தையும் இழந்து என்பது உறவுகள், புகழ், பொருளாதாரம் என்ற வட்டத்திற்குள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். இதுவரை நிகழ்ந்தவைகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், இதோ இந்தப் புள்ளியிலிருந்து இருப்பதை வைத்துத் துவங்குவோம். எல்லோருக்கும் அவர்களுக்கான மிச்சமிருக்கும் வாழ்க்கை இன்னும் வாழ்ந்து பார்க்கப்படாமலேயே இருக்கின்றது. எவர் ஒருவர் தம்மிடம் இருக்கும் குறைகளையும் கடந்து, தம்மைக் கொண்டாடுகிறாரோ, அவரே நினைத்தவற்றை எட்டும் உரிமைகளைப் பெறுகிறார். சரி அப்படிக் கொண்டாட என்ன இருக்கிறதெனக் கேட்டால், தம்மிடம் இருக்கும் குணம், திறமை, திறன் ஆகிய ஒவ்வொன்றிலும் தலா மூன்றினைப் பட்டியலிட்டால் புரிந்து விடும். அப்படியொரு பட்டியலைத் தயாரிக்கும் தைரியம் வந்துவிட்டாலே வாழ்க்கையின் கடிவாளம் தம் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதென அர்த்தம். இது சொல்வதற்கும் கேட்பதற்கும் எளிதுதான். ஆனால் அப்படிப் பட்டியலிட மனதில் உரம், நிதானம், தெளிவு, ஆர்வம், நம்பிக்கை வேண்டும். வழங்கப்பட்டது எதுவாகினும் வாழ்ந்து காட்டுவேன் எனும் உறுதிகொண்டவர்களுக்கு, இந்த வாழ்க்கை என்பது கொண்டாட்டம் எனக் கருதுபவர்களுக்கு உரம், நிதானம், தெளிவு, ஆர்வம், நம்பிக்கை உள்ளிட்ட அனைத்துமே மிக எளிதில் கிட்டிவிடும். ~ ஈரோடு கதிர்
❤️ 👍 👌 👏 🩷 💐 😢 😮 🤍 43

Comments