
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 12, 2025 at 04:28 PM
*ஆதித்யனின் உதயம் திருஞானசம்பந்த பெருமானால் பாடப் பெற்ற நீலகண்ட மலை அல்லது நீல்காந்த் மலை முகடுகளிலிருந்து (21,300 அடிகள்)*
- பத்ரிநாத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்.
ஹர் ஹர் மஹாதேவ்...
🙏
*இந்திர நீலப் பர்வதம் (அதிகாலையில் தோன்றும் அற்புத சிவதரிசனக் காட்சி):*
இமயத்துள் அமையப்பெற்றுள்ள பரம புண்ணியமான பர்வதம்.
புராண காலத்துப் பெயர் 'திருஇந்திரநீலப் பருப்பதம்'.
தற்பொழுதைய வழக்கில் நீலகண்டப் பர்வதம் என்று அறியப் பட்டு வருகிறது.
சீர்காழி வேந்தரால் தேவாரப் பாடல் பெற்றுள்ள தலம்.
ஞான சம்பந்த மூர்த்தி தென் கயிலாயம் என்று குறிக்கப் பெறும் திருக்காளத்தியில் (ஸ்ரீகாளஹஸ்தியில்) இருந்த வண்ணம் அகக் கண்களாலேயே இத்தலத்தைத் தரிசித்துப் போற்றியுள்ளார்.
இந்திரன் முக்கண் மூர்த்தியை உபாசித்துப் பேறு பெற்ற தலம்.
ஞான சம்பந்தர் அருளியுள்ள திருப்பதிகத்தின் 11ஆம் பாடலில் 'இந்திரன் தொழு நீலப் பர்ப்பதத்து அந்தம் இல்லியை' எனும் வரி மூலம் இதனை அறியலாம்.
பரமனும் பரமேசுவரியும் 'நீலாச்சலநாதர்; நீலாம்பிகை' எனும் திருநாமம் கொண்டு இப்பர்வதத்தில் எழுந்தருளியுள்ளனர்.
தீர்த்தம்: இந்திர தீர்த்தம்.
பத்ரிநாத் தலத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்திரநீல பர்வதம்.
பத்ரிநாத்தில் இரவு தங்கி, விடியற்காலை 4 மணி அளவில் இப்பர்வதத்தினைத் தரிசிப்பர்.
அச்சமயத்தில் இப்பர்வதம் முழுவதுமே 'ஆலம் உண்ட சிவப்பரம்பொருளின் திரு நீல கண்டத்தினைக் குறிக்கும் விதமாக' இந்திர நீல நிறத்தில் காட்சியளிக்கும்.
பின்னர் சிறிது நேரத்தில் மெல்ல மெல்லப் பொன்னிறத்தில் தோன்றி விளங்கும்.
வார்த்தைகளால் விளக்கவொண்ணா அதி அற்புத தெய்வீகக் காட்சியிது.
பண்டைய தவப் பயனும், உமையொரு பாகனின் திருவருளும் கூடி வரின் நாமும் இத்திருக்காட்சியினைத் தரிசித்து உய்வு பெறலாம்.
சம்பந்தப் பெருந்தகை 3ஆம் பாடலில் சிவபெருமான் இந்திரநீல பர்வதத்தின் மீது அன்பு கொண்டு விரும்பி உறைவதாகவும், 5ஆம் பாடலில் அங்குள்ள அருவிகளைத் தமக்கு மாலைகளாகச் சூடியருள்வதாகவும் குறிக்கிறார்.
தேவதேவர் உறைந்தருளும் இப்பர்வதத்தில் பாதம் பதிக்க விழைவோர் பத்ரிநாத் தலத்திருந்து 9 கி.மீ நடைப் பயணமாகச் செல்லுதல் வேண்டும்.
பர்வதத்தினுள் சிறிது தூரம் பயணித்து அதன் ஏகாந்தம்; ரம்மியமான சூழல் இவற்றை ரசித்து, அங்கு அம்பிகையுடன் இனிது உறைந்தருளும் எந்தை பிரானான சர்வேஸ்வரரையும் போற்றித் துதித்து வரலாம்.
சம்பந்த மூர்த்தியின் திருப்பதிகத்தை மலையினுள் இருந்த படியே பாராயணம் புரிவது கிடைத்தற்கரிய பெறும் பேறன்றோ!
பிற தலங்களின் பாடல்களில் 'அத்தல மூர்த்தியைப் போற்றினால் வினைகள் மாயும்' என்று நேரிடையாகக் கூறும் பண்பினராகிய சம்பந்தப் பெருமான் இத்தலப் பதிகத்தின் 9ஆம் பாடலில் 'இந்த பர்வதத்தில் உறையும் வேத முதல்வனை நினைந்துப் போற்றாதவரை அவர்களின் கர்ம வினைகள் மிகவும் சினந்து துன்புறுத்தும்; கூற்றம் கொல்லும்' என்று எதிர்மறையாக அதே கருத்தினை வலியுறுத்தி அருளியுள்ளார்.
இதன் மூலம் இத்தலத்தின் சீர்மை நன்கு விளங்கும்.
இந்திரநீல பர்வதம் - சம்பந்தர் தேவாரம் 9ஆம் பாடல்:
பூவினானொடு மாலும் போற்றுறும்
தேவன் இந்திர நீலப் பர்ப்பதம்
பாவியா எழுவாரைத் தம் வினை
கோவியா வரும் கொல்லும் கூற்றமே!!
வள்ளலாரும் திருவருப்பா - விண்ணப்பக் கலி வெண்பாவில் இத்தலத்தினைப் போற்றிப் பாடியுள்ளார்.
-
..போகிமுதல்
பாடியுற்ற நீலப் பருப்பதத்தில் நல்லோர்கள்
தேடிவைத்த தெய்வத் திலகமே!!
நமது சிவசக்தி குழுவில் ஆன்மீகம் சார்ந்த பதிவுகள் மட்டும் இக்குழுவில் பதிவிடப்படும் தவறான கருத்துக்கள் யாரும் பதிவிடக்கூடாது 👇
https://primetrace.com/group/2260527/post/1156557146?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ
